×

யோகங்கள் தரும் கிரகங்கள்

ராகு - கேது

எல்லா கிரகங்களுக்கும் யோகங்களையும், தோஷங்களையும் தரும் அமைப்பு உள்ளது. அதாவது அந்தந்த லக்னம், ராசி, நவாம்சம், தசா புக்திகளுக்கேற்ப ஒவ்வொரு கிரகமும் யோகத்தையும், தோஷத்தையும் தரும். இந்த வகையில் சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படும். ராகு, கேதுவின் மூலம் பல விதமான யோகங்கள், தோஷங்கள் உண்டாகிறது.பாவம், புண்ணியம் என்பதைப்பற்றி பல வகையான கருத்துக்கள், நம்பிக்கைகள் நம் சமூகத்தில் காலம் காலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு விஷயமாகும். இது ஒர் சர்ச்சைக் குரிய விஷயமாகவும் பேசப்படுகிறது. பணக் கஷ்டம், மன உளைச்சல், பிரச்சனைகள், நோய்கள், வழக்குகள், துன்பம், துயரம் அனுபவித்தால் பாவம் செய்தவன். அதே நேரத்தில் கையில் பணம், சொத்து, யோக போக சுகத்தை ஒருவன் அனுபவித்தால் புண்ணியம் செய்தவன் என்ற பேச்சு வழக்கு சமூகத்தில் நடைமுறையில் உள்ளது.

எது எப்படியோ ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை யோக, அவயோகங்கள், நிறை குறைகள், ஏற்ற  இறக்கங்கள், லாப நஷ்டங்கள் என எல்லாவற்றையும் அனுபவித்தே ஆக வேண்டும். காரணம் இது நமது பூர்வ புண்ணிய கர்மவினை சம்மந்தமானது. அந்த அளவு கோலின்படிதான் நம் ஜாதகம் அமையும். அதற்கேற்பத்தான் தசாபுக்திகள் கூடி வரும்.ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் தனம் குடும்பம், வாக்கு எனும் இரண்டாம் இடம் மிக முக்கியமானதாகும். குடும்பத்தையும், இல்லற வாழ்க்கையை பற்றி பேசும் இடமாகும். இந்த இடத்தில் ராகு, கேது  இருவரும் இருப்பது சர்ப்பதோஷம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதில் ராகு இரண்டில் இருந்தால் கேது எட்டில் இருக்கும். கேது இரண்டில் இருந்தால் ராகு எட்டில் இருக்கும். இந்த அமைப்பு இயற்கையான கிரக சஞ்சாரமாகும்.
இந்த இரண்டாம் வீட்டிலும், எட்டாம் வீட்டிலும் ராகு, கேது இருப்பது திருமண தடை, தோஷமாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகங்களும் சற்று வீரியமான குண அமைப்புக்கள் உள்ளவை. அதே நேரத்தில் ராகு, கேது இருவரும்  எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கிறது, எந்த கிரகத்தின் சாரத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து யோக அவயோகங்களை தரும் வல்லமை உடையவை. இந்த இரண்டு கிரகங்களும் அதீதமான சக்தியுடையவை. யோகத்தையும், போகத்தையும், தோஷத்தையும், அவமானங்களையும் ஒரு சேர வழங்கும் ஆற்றல் மிக்க கிரகங்களாகும்.

தன, வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் இந்த இரண்டு கிரகங்கள் மிகப் பெரிய ராஜயோக வாழ்க்கையை எதிர்பாராத விதமாக கொடுத்து விடும். எப்படி இவ்வளவு பொன், பொருள், செல்வம், பணம், சொத்து குவிந்தது என்று எல்லோரும் மலைத்துப் போய் நிற்கும் அளவிற்கு வாரி வாரி பொன்னையும், பொருளையும் வழங்குவது ராகுவின் தன்மையாகும். இப்படிப்பட்ட ராஜயோகத்தை ஒருவர் அனுபவிப்பதற்கு ராகு, கேது இருவரின் யோகாதிபதிகளின் சம்பந்தம், பார்வை, சேர்க்கை பெறுவது மிக முக்கியமாகும். ராகு, ஒருவர் எந்த வியாபாரம், தொழில், என எதைச் செய்தாலும் அதில் பெரும் செல்வத்தை வாரி வழங்குவார். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர் பாராத பதவி யோகத்தை தருவதில் இந்த இரண்டு கிரகங்களை மிஞ்ச முடியாது. அசுர வளர்ச்சி என்பார்கள். அதை தரும் வல்லமை பெற்றவை இந்த இரண்டு கிரகங்களாகும். வாய் மூலம் பேசி செய்யும் தொழிலில் மிகப் பெரிய வெற்றியை தருவார்கள். மிகப் பெரிய வழக்கறிஞர்கள் ஜாதகங்களில் இரண்டாம் வீட்டில் ராகு, கேது இருவரும் இருக்கும். மருத்துவ துறையில் ஒருவர் சேர்ந்து படிப்பதற்கு மிகப் பெரிய யோக ஜாதக அமைப்பு வேண்டும். அதில் மிக முக்கியமானது.

இந்த  ராகு, கேது இருவரின் அமைப்பாகும். ராகு லக்னம், இரண்டு, நான்கு, ஏழு, பத்து போன்ற ஸ்தானங்களில் யோக கிரக சம்பந்தம் பெற்று அமர்ந்து இருந்தால் மருத்துவ அடிப்படை கல்வியான  M.B.B.S, B.PHARM, M.PHARM மற்றும் மருத்துவம் சார்ந்த விஞ்ஞான படிப்புக்கள், ரசாயன துறைகள், நர்சிங், ஸ்கேன் படிப்புகள், ரத்தப் பரிசோதனை கல்வி, எக்ஸ்ரே, பயோ கெமிஸ்ட்ரி, பயோ சயின்ஸ், மருந்துக்கடை போன்றவற்றில் தேர்ச்சி அடைந்து தொழில் செய்து பொருள் ஈட்டவும், புகழ் பெறவும் ஜாதகத்தில் இந்த நிழல் கிரகங்களில் அருள் மிக முக்கியமானதாகும்.

கேதுவை ஆன்மிக, மருத்துவ கிரகம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ராகு மறைந்து இருக்கின்ற பொருட்களை குறிக்கும் கிரகமாகும். பெரும்பாலும் புதையல் சம்மந்தமான, உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து போன்ற விஷயங்கள் எல்லாம் ராகுவின் அதிகாரத்தில் உள்ளவை. மருந்து, மாத்திரை எல்லாம் விஷம் சம்பந்தப்பட்டவை தான் அளவிற்கு அதிகமாகும் போது அது விஷமாகி விடுகிறது. ஒரு ரசாயனம் மற்றொரு ரசாயனத்துடன் சேரும் போது அது நோய்க்கு மருந்தாகிறது. நாம் சாப்பிடுகின்ற ஒவ்வொரு மருந்தும் விஷத் தன்மையுடையது தான். அதனால் தான் மருந்து தொடர்ந்து எடுக்கும் போது வேறு விதமான பக்க விளைவுகள், உப, துணை நோய்கள் உண்டாகின்றன. அந்த வகையில் சர்ப்ப விஷ கிரகங்களான ராகு, கேதுக்கள் மருத்துவத்திற்கும், ரசாயனத்திற்கும், வேதிப் பொருட்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ராகு, கேதுவுடன் நான்காம் அதிபதி, ஒன்பத்தாம் அதிபதி, பத்தம் அதிபதி, செவ்வாய், குரு, சூரியன் போன்ற பல கிரகங்கள் சம்பந்தப்படும் போது பல்வேறு பிரிவுகளில் மருத்துவராக, அறுவை சிகிச்சை நிபுணர்களாக படித்து பட்டம் பெறும் யோகம் அமைகிறது.

நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு சினிமா சம்பந்தப்பட்ட துறையில் அதிகாரம், ஆதிக்கம் செலுத்தும் காரகத்துவம் உள்ளது. தனம், ஜீவனம் போன்ற ஸ்தானங்கள், பத்தாம் அதிபதியுடன் சம்பந்தம், புதன், சுக்கிரனுடன் சம்பந்தம் போன்ற அமைப்புக்கள் இருந்தால் சினிமாத் துறையில் இருந்து பணம், புகழ் பெறும்  யோகம் அமையும். செவ்வாயுடன் ராகு, சனியுடன் ராகு சேர்க்கை பெற்று இருந்தால் டெக்னிக்கல் துறையில் ஜீவனம் அமையும். கேமராமேன், நிழற்படம், எடிட்டிங், அனிமேஷன் போன்றவற்றில் வருமானம் வரும். சுக்கிரன், புதன் சம்பந்தப்படும் போது நடிகர்களாகவும், கதாசிரியர்களாகவும், டைரக்‌ஷன் துறையிலும் புகழ் அடையமுடியும். படம் தயாரிப்பது, வெளியிடுவது, ஸ்டுடியோ, தியேட்டர் போன்ற வகையில் வருமானம் வரும். இசைத்துறையில் ஆழ்ந்த அறிவும், ஞானமும், பெயரும் புகழும் கிடைக்க இசைஞானி என்று சொல்லக் கூடிய கேதுவின் அருள் தேவை. லக்னம், மூன்று, ஒன்பது, பத்து போன்ற வீடுகளில் கேதுவின் சம்பந்தம் இருந்தால் இசைத்துறையில் சாதனை படைக்கலாம்.

யோகத்  திறவுகோல்

ஒரு ஜாதகத்தில் யோகம், தோஷம் என இரண்டு விஷயங்கள் இணைந்து தான் இருக்கும். அதே நேரத்தில் யோக அம்சங்களின் சத விகிதம் அதிகமாக இருக்கும் போது சிக்கல்கள், பிரச்னைகள் எல்லாம் தானாக நிவர்த்தியாகி விடுகிறது இதற்கு ஜாதகத்தில் 1,5,9 என்ற சூத்திரம் பயன்படுகிறது. எந்த ஜாதகமாக இந்தாலும் ஒன்றாம் இடம் என்று சொல்லக்கூடிய லக்னம், லக்னாதிபதி. ஐந்தாம் இடம் என்று சொல்லக்கூடிய பூர்வ புண்ணிய யோகாதி பதி. ஒன்பதாம் இடம் என்று சொல்லக் கூடிய பாக்கியாதிபதி ஆகிய மூன்று கிரகங்கள் பலமாக அமைந்து இருந்தால் எந்த வகையிலாவது அந்த ஜாதககாரர் மிகப் பெரிய செழிப்பான வாழ்க்கையை அனுபவிப்பார். லக்னாதிபதி கேந்திரம், கோணங்களில் இருந்தாலும். ஆட்சி உச்சம், பரிவர்த்தனை, வர்கோத்தமம் என்று இருந்தாலும் சுகவாசி, பொருள் செல்வம், மதிப்பு, பட்டம், பதவி, சொத்து சுகம் என சேரும். அரசியலில் வட்ட செயலாளர், கவுன்சிலர், நகராட்சி, ஊராட்சி தலைவர்கள், மந்திரி வரை. பல பதவிகளை அனுபவிக்கும் யோகம் அமையும். பஞ்சம், பாக்கிய ஸ்தானங்கள் ஒருவருக்கு பக்க துணையாக இருந்து உச்சத்துக்கு  கொண்டு செல்லும் எந்த துறையில் இருக்கிறார்களோ அந்த துறையில் கொடி கட்டிப் பறக்க கூடிய ராஜயோகத்தை தரும். அதனால் தான் 1, 5, 9 க்குடையவர்கள் பாபி, சுபரானாலும் மிஞ்சி, விஞ்சி சுப பலன்களை தருவார்கள் என்று சப்தரிஷி வாக்கியமாகும்.

நீச்ச அமைப்பு என்ன செய்யும்?

பொதுவாக ஜாதகத்தில் உள்ள முக்கிய குறை என்று எடுத்துக் கொண்டால். அது ஒரு கிரகம் நீசம் அடைவதை குறிப்பதாகும். நீசம் என்பது பலம் குறைவது, கிழே செல்லுவது, தோஷம், பலம் குறைவு, பலன் குறைவு  என்பதாகும். குறிப்பாக சில கட்டங்களில், ஸ்தானங்களில் எந்த கிரகமாவது நீசமாக இருந்தால் என்ன பலன்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.முக்கியமாக லக்னம், ஏழாம் இடம். இந்த இரண்டு ஸ்தானங்களும் மிக முக்கியமானதாகும்.இந்த இரண்டு இடங்களும் சமசப்தமஸ்தானம் என்று சொல்லப்படும் அதாவது ஏழுக்கு, ஏழு என்று ஜோதிட பாா்வையில் குறிப்பிடுவார்கள்.

லக்னத்தில், அல்லது ஏழாம் இடத்தில் ஏதாவது நீச்ச கிரகம் அமர்ந்து இருந்தால் பல வகையான பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எண்ணம், செயல், பேச்சு, எதுவும் சரியாக இருக்காது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக இருப்பார்கள். தம் காரியங்கள் நிறைவேறுவதற்கு எந்த கீழ் நிலைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள். பொய், பித்த லாட்டம், பிடிவாதம், இருக்கும் அடிக்கடி உணர்ச்சி வசப்படுவார்கள். இவர்களின் குணாதிசயங்களை கண்டு கொள்வது மிகவும் கடினம். நம்பகத்தன்மை அற்றவர்கள் என்று சொல்லலாம். ஏதாவது பிரச்னை என்றால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவார்கள் அல்லது விரக்தி அடைந்து  சோகத்துடன் காணப்படுவார்கள். இளம் வயதிலேயே தீய பழக்க வழக்கங்கள் இவர்களை எளிதாக பற்றிக் கொள்ளும். தகாத செயல்கள், போதை பழக்கங்கள், தீயோர் சேர்க்கை, கீழோர் நட்பு என எல்லா விஷயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேர்ந்து கொள்ளும்.

திருமண வாழ்க்கை என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக காதல், கள்ளத் தொடர்புகள் எந்த வயதிலும் வர வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை என்பது இவர்களுக்கு ஒரு கேள்விக்குறி தான். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போனால் தான் குடும்பம் என்ற பந்தம் நீடிக்கும். இல்லையென்றால் தினசரி வார்த்தையோர் பெரிய அக்கப்போராக மாறிவிடும். விவாகரத்துக்கள், கோர்ட், வழக்கு, போலீஸ் பிரச்னைகள், பஞ்சாயத்துக்கள் என எல்லாவற்றையும் சந்திக்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில் மன நலம், இல்லறம் நிறைவாக இருந்தால், கணவன், மனைவி இருவருக்கும் மாறி மாறி உடல் நலக் கோளாறுகள், அறுவை சிகிச்சைகள், தொடர் மருத்துவ செலவுகள், விபத்துக்கள் என ஆரோக்கிய பாதிப்பு காட்டும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கேற்ப நண்பர்கள், தோழிகள் மூலம் பிரச்னைகள் வந்த படி இருக்கும் . வீண் வம்பு, வழக்குகள், அடிதடி, கட்டைப் பஞ்சாயத்து என வாழ்க்கை முழுவதும் சோதனைகள், வேதனைகள், விரயங்கள் என நிம்மதியற்ற ஒரு நிலையை இந்த நீச்ச கிரகங்கள் ஏற்படுத்தி விடும். இது வெறும் ஜோதிட விதியாக மட்டும் இல்லாமல் அனுபவ பூர்வமாக பல நூறு ஜாதகங்களில் மிக சரியாக இருப்பதை காண முடிகிறது.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்


Tags : planets ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்