வள்ளல் வடிவேலன்

அடர்ந்த கானகமதில்

அச்சத்தின் இருள்சூழ

அலையும் எண்ணம் கொடிய

மிருகம் -ஆசை

அழகு பெண்ணுரு பேய்!

அமைதி பாதை தேடும்

அன்பு மனம் நாடும்

ஆனந்த திருவடி கண்டேன்

மயில் முதுகில் ஏறிவந்து

மலரொளி முகமருள் விசாகன்!

முருகனென் சிந்தை கொண்டான்

உருகு தமிழ் சந்தம் தந்தான்

பருகும் அமுது தமிழ் பருகிட

பெருகும் ஞானச்சுடர் வேல்தந்தான்

கருத்தில் நின்றோதும் குமாரகுரு

உருமாறி முதுமை தேறி

பருவகால மாலை கொண்டான்!

பருத்த வீரத்தோள் தழுவ

பெருத்த தனமுடைய வள்ளிக்

குறத்தி விரும்பி வந்தாள்!

சிறப்புபேர் ஊர் கொண்டான்

சிங்கார கொடி கொண்டான்

சிற்றிதழில் முத்தமிழ் கொண்டான்

சிலையென மனை கொண்டான்

கலையென துணை கொண்டான்

பாயும் வேலும் ஆறும்

பாதமதில் பாம்பும் கொண்டான்

போர்ப்படை வீரநடையால்

பகை வளர்த்து மோதிய

பத்மாசூரனை வாகை கொண்டான்!

சின்னஞ்சிறு பாலன் வேலன்

சிவனுக்கு போதித்த குருநாதன்

செந்தூர் கடலோரம் நின்றருள்

செய்யும் கந்தா குகனே

செந்தமிழ் தலைவா இறைவா

சித்தர் மனமாளும் சிவபாலா

செய்யாள் மருகா அருகா

செய்யோன் உருவே திருவே

செவ்வாய் பதியே மதியே

சற்குணசீலா முருகா பணிந்தோம்!

வளம் தரும் வாழ்வு

வள்ளல் வடிவேலன் அருள

ஆறெழுத்து மந்திரத்தால்

ஆறுமுகனை தினம் பாடு!

அருணகிரி நோய் தீர்த்து

நால்வகை கவி தந்தான்!

அல்லல்படும் துயர் தீர

அற்புதமூலிகை முருகன்

அடுத்தபிறவி அடைத்து

எடுத்தபிறவிப் பயன் தருவான்!

விஷ்ணுதாசன்

Related Stories: