×

வினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்

* மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

* ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.

* கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.

* மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

* விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.

* நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

* தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.

* கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

* சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.

* சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

* தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

* ஓசூர்&பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.

* திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

* திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருட்பாலிக்கிறார். இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.

* கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.

* திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார்.

* தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.

* தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.

ந. பரணிகுமார்

Tags : Ganesha ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது