×

துயர் துடைக்கும் ராமநாமம்

நீண்ட வானம் அகண்ட கடல்- தன்
அளவை சுருக்கி ராமன் விழியானது!
மலைகள் பணிந்து தேகமானது
மலர்கள் மகிழ்ந்து முகமானது!

மவுனம் பேசும் ஒருவேதம்
மறம் பேசும் ஒருவேதம்
அறம் பேசும் ஒருவேதம்
நட்பு பேசும் ஒருவேதம்
கரியசெம்மல் உருவே நால்வேதம்!

கவலை தடுக்கும் ராமநாமம்!

ரகுவரன் நிழலாய் நடந்தாள்
இருவிழியில் அவனை சுமந்தாள்!

இதயத்தில் இறைவனை குடிவைத்து
இமைசிறகு விரித்து பறந்தாள்!

தன்னலம் விரும்பாது ராமன்
நன்னலம் சிந்தையேற்று
நற்சேவையில்  கலந்திட்ட
நற்குலமங்கை சீதையும்
நடைசிறந்த ராமனும் இருவரல்ல!

பயணங்கள் ஆறு -அதன்
பாதைகள் வேறு- ஜானகி
விழிதரும் கவிதை ஒருநூறு!

தர்மம் சிறைபட்டு அழுகிறது
கர்மவினைகள் தொடர்கிறது
மர்மத்தில் பூமி சுழல்கிறது
மயக்கத்தில் உயிரினம் மிதக்கிறது
மாயமான் விலக கணை தொடுப்பாய்
மறுஅவதாரம் எடுத்து வந்து
மானிடம் மீட்டு காப்பாய்
மனம் திரேதாயுகம் காணட்டும்
மனிதகுலம் ராமனை வாழ்த்தட்டும்
மாற்றங்கள் உலகில் நிகழட்டும்!

நுங்குவடிவ இதயத்தில்
நுரைபொங்கும் ஆசைகள்
அலையாகும் துன்ப வாழ்வில்
அணைபோட்டு காப்பாய் ராமா!

பங்குகொண்டு படகு போட்டியில்
பத்திரமாய் கரைசேர துணையாவாய் ராமா!

சங்கு சக்கரத்துடன் பிறந்து
சத்திய பாதை சென்று
சரித்திரம் படைத்தாய் ராமா
தெரிந்தும் தெரியாமல் நான்
செய்த தவறுகள் கோடியதை
கணக்கிடும் நேரம் இதுவோ ராமா!

கருணை வடிவே எனக்கு
அருள்புரி உடனே ராமா!

விஷ்ணுதாசன்

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி