×

நாவும் இதயமும்..!

இஸ்லாமிய வாழ்வியல்

“திண்ணமாக, நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கியிருந்தோம்” என்று கூறுகிறது இறைவனின் திருமறை(31:12)
யார் இந்தத் தத்துவ மேதை? இவர் இறைத்தூதரா, இல்லையா என்பதில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பெரும்பாலான அறிஞர்கள் ‘தத்துவ மேதை லுக்மான் இறைத்தூதர் அல்லர், இறைவனால் ஞானம் வழங்கப்பட்ட ஒரு நல்ல இறையடியார்’ என்றே கூறுகின்றனர்.
கிரேக்க தத்துவ மேதை பிதகோரஸ் அறிஞர் லுக்மானிடமே தத்துவங்களைக் கற்றுத் தேர்ந்தார். எகிப்தில் இருந்த லுக்மானிடம் தத்துவங்களை நன்கு பயின்ற பிதகோரஸ் பிறகு கிரேக்கம் சென்று தாம் கற்றதை எல்லாம் அந்த மக்களிடம் எடுத்துரைத்தார். படைப் பினங்கள் பற்றியும் படைப்பின் தத்துவம் பற்றியும் விளக்கினார். பிதகோரசின் தத்துவங்களால் கவரப்பட்டவர்கள்தாம் சாக்ரடீஸ், பிறகு பிளேட்டோ, பிறகு அரிஸ்டாட்டில் ஆகியோர். அறிஞர் லுக்மானின் தத்துவங்கள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவருடைய பெயரில் கணிதத்தில் பிதகோரஸ் தேற்றம் ஒன்று உண்டு. (பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்)மாணவர் பிதகோரஸே இந்த அளவு சிறப்புப் பெற்றிருந்தார் எனில் அவருக்குத் தத்துவம் கற்பித்த அறிஞர் லுக்மான் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

லுக்மான் மிகப் பெரிய தத்துவ மேதை என்றதும் அந்தக் கால மரபுப்படி அவர் ஏதேனும் ஒரு மன்னரவையில் ராஜகுருவாகவோ தலைமை அமைச்சராகவோ வீற்றிருந்து நாட்டையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அறிஞர் லுக்மான் எகிப்தைச் சேர்ந்த ஒரு கறுப்பர்.  உதடுகள் தடித்த ஓர் அடிமையும்கூட. அப்படிப்பட்டவருக்குத்தான் நாம் ஞானத்தை வழங்கினோம் என்று  இறைவேதம் கூறுகிறது. லுக்மான் தம் மகனுக்குச் சில அறிவுரைகள் கூறினார். அந்த அறிவுரைகள் குர்ஆனில் இடம்பெற்றுள்ளன.  லுக்மான் தொடர்பாகச் சொல்லப்படும் ஒரு சுவையான நிகழ்வு வருமாறு:ஒரு முறை லுக்மானின் எஜமானர் லுக்மானை அழைத்து, “ஆட்டு இறைச்சியில் மிக நல்ல சதைத் துண்டுகளை எடுத்துவாருங்கள்” என்று கூற லுக்மான் நாவையும் இதயத்தையும் எடுத்துச் சென்று கொடுத்தார். சற்று நேரம் கழித்து  ஆட்டு இறைச்சியில் மிக மோசமான சதைத் துண்டுகளைக் கொண்டுவரும்படி எஜமானர் ஆணையிட அப்போதும் லுக்மான் நாவையும் இதயத்தையுமே எடுத்து வந்தாராம்.
இதைக் கண்டு வியந்த எஜமானன்,“நல்ல சதைத் துண்டுகள் கேட்டபோதும் நாவையும் இதயத்தையுமே எடுத்துவந்தாய். மோசமான சதைத் துண்டுகள் கேட்டபோதும் நாவையும் இதயத்தையுமே எடுத்துவந்துள்ளாய். ஏன் அப்படிச் செய்தாய்? என்று கேட்டார்.அறிஞர் லுக்மான் அமைதியாகச் சொன்னார்:“இந்த இரண்டும் (நாவும் இதயமும்) சீராக இருந்துவிட்டால் வாழ்வில் அதைவிடச் சிறப்பு வேறு எதுவும் இல்லை. இந்த இரண்டும் மோசமாகிவிட்டால் வாழ்வில் அதைவிடக் கேடு வேறு எதுவும் இல்லை.”எஜமானர் திகைத்து நின்றுவிட்டார்.

- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி