நவதுர்க்கா

உலகமனைத்தும் சக்தி மயம் எனும் தத்துவத்தை விளக்குவதே நவராத்ரி பெருவிழா. இவ்விழாவை இமயம் முதல் குமரி வரை உள்ளவர்கள் தத்தமது  இல்லங்களில் அன்னையை கொலுவீற்றிருக்கச் செய்து ஆராதிப்பர். சக்தி ஆலயங்களிலும் விதவிதமாக அம்பிகையை அலங்கரித்து பூஜிப்பர். அம்பிகை  நவதுர்க்கை வடிவிலும் அருள்பவள். அந்த நவதுர்க்கையரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

1.சைலபுத்ரி

இந்த தேவி மலைகளின் அரசனான இமவானின் மகள். அதனால் ஹைமவதி எனும் பெயரையும் பெற்றவள். முற்பிறவியில் தட்சனின் மகளாகப்  பிறந்து ஈசனை மணந்தாள். தட்சன் ஈசனை அழைக்காமல் வேள்வியை ஆரம்பித்தபோது அங்கு சென்று ஈசனுக்கு ஏற்பட்ட அவமானத்தைத்  தாங்காமல் யோகாக்னியில் தன்னை வீழ்த்திக் கொண்டவள். மறுபிறவியில் மலையரசனான இமவானின் மகளாகப் பிறந்து ஈசனையே மணந்தவள்.  இத் தேவி இந்திரனுக்கு பிரம்மோபதேசம் செய்ததாக உபநிடத்தில் கூறப்பட்டுள்ளது.  இவள் காளையை வாகனமாகக் கொண்டு இரண்டு கரங்களில்  சூலமும், தாமரையும் வைத்துக் கொண்டு எப்பொழுதும் ஆனந்தமாகத் தோற்றமளிப்பவள்.

2.பிரம்மச்சாரிணி

இந்த தேவி எப்போதும் தவத்திலேயே இருப்பவள். வெண்ணிற ஆடை அணிந்து வலக்கையில் ஜப மாலையும் இடக்கையில் கமண்டலமும் தாங்கி  தாமரை மலர்களையே அணிகலன்களாகக் கொண்டவள்.  திருக்கோலத்தை உடையவள். ப்ரஹ்ம என்றால் தவம் என்று பொருள். ஆகையால் தவம்  செய்பவள் பிரம்மச்சாரிணி என அழைக்கப்பட்டாள். முன்பொரு சமயம் இமவானின் மகளாய் பார்வதி தேவியாய் பிறந்தபோது தோழிகளுடன்  விளையாடிக்கொண்டிருந்தாள் இத் தேவி. அப்போது அங்கு வந்த நாரதர் தேவியை வணங்கி உங்களை அந்த ஈசனே மணப்பார். அவரைக் குறித்து  தவம் செய்வீர்களாக எனக் கூறினார். அது முதல் தேவி தவத்திலேயே இருக்க ஆரம்பித்தார். தவத்தின் பயனால் ஈசனை மணந்தாள் பிரம்மச்சாரிணி.

3. சந்த்ரகண்டா

இந்த தேவி தங்கமயமான உடலை உடையவள். முக்கண்களும், பத்து கரங்களில் சூலம், கதை, கத்தி, கமண்டலம், வில், அம்பு, தாமரை, ஜபமாலை,  அபய, வரத முத்திரைகளுடன் புலியின் மீது அமர்ந்தவளாய், யுத்தத்திற்கு செல்லும் வீரமூர்த்தியாய் தோற்றமளிப்பவள். சந்த்ரகண்டா என்று  சொன்னாலே தீவினைகள் தூள் தூளாகும்.

4.கூஷ்மாண்டா

புன்சிரிப்பிலிருந்தே உலகை உண்டுபண்ணும் சக்திக்கு கூஷ்மாண்டா என்று பெயர். இத்தேவி சூரிய மண்டலத்திற்குள் வசிப்பவள். அந்த  சூரியனைப்போல் பத்து திக்குகளிலும் தன் ஒளியை வீசுபவள். தன் திருக்கரங்களில் தாமரை, சக்கரம், வில், கதை, அம்பு, ஜபமாலை, கமண்டலம்,  பானபாத்திரம் போன்றவற்றை ஏந்தி புலி மேல் அமர்ந்த திருக்கோலம். கூஷ்மாண்டா என்றால் பூசணிக்காய் என்றும் ஒரு பொருள் உண்டு.  பூசணிக்காயை பலியாகக் கொடுத்தால் இத்தேவிக்கு மிகவும் பிரியம் என்று ருத்ரயாமள தந்திரம். குஞ்சிகா ஆகமம் போன்ற நூல்களில்  சொல்லப்பட்டுள்ளது.

5.ஸ்கந்தமாதா

சைலபுத்ரி, பிரம்மசாரிணியாகத் தவமிருந்து ஈசனை மணந்து, முருகனைப் பெற்று அவனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு உலகைக் காக்கும்  அம்பிகை இவள். இவளே தேவசேனாபதியும் ஆவாள். இந்த ஸ்கந்தமாதா அக்னி மண்டலத்தின் தேவதை ஆவாள். தன் இரு கரங்களிலும் தாமரை  மலர்களை ஏந்தி ஒரு கரத்தால் கந்தனை அணைத்து மறு கரத்தால் வரத முத்திரை தரித்து சிங்கத்தின் மீது அமர்ந்து தரிசனம் அளிப்பவள்.

6.காத்யாயனி

காத்யாயனர் என்ற முனிவர் அம்பிகையை நோக்கித் தவம் புரிந்தார். தவத்தின் பயனாய் தன் முன் தோன்றிய அம்பிகையை தரிசித்ததும் தாயே  தாங்களே எனக்குப் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். தேவியும் அவருக்கு காத்யாயனி என்ற பெயரோடு பெண்ணாகப்  பிறந்தாள். தன் நான்கு கரங்களிலும் தாமரை, வாள், அபய, வரத முத்திரை தரித்து சிங்கத்தின் மேல் அமர்ந்த திருக்கோலம் கொண்டவள்.  பகவான்  கண்ணனைக் கணவனாக அடைய கோபிகைகள் மார்கழி மாதத்தில் யமுனை நதிக்கரையில் இத்தேவியை பூஜை செய்து தங்கள் விருப்பத்தை  அடைந்ததாக பாகவதம் கூறுகிறது.

7.காளராத்ரி

இத்தேவி இருளைப்போல் கருத்த நிறம் கொண்டவள். தலைமுடி பறந்து கொண்டிருக்கும். கழுத்தில் மின்னல் போன்றதொரு மாலை ஒளி வீசும்.  முக்கண்களும் கோளம்போல் சிவந்திருக்கும். மூச்சு விடும்போது அக்னி ஜ்வாலை வெளியில் வரும். கழுதையின் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு  அபயத்தையும் துஷ்டர்களுக்கு பயத்தையும் அளிப்பவள்.

8.மஹாகௌரி

சந்திரன், சங்கு போன்ற வெள்ளை உருவத்துடன், வெண்ணிற ஆடை அணிந்து பதினாறு வயது பெண் போன்ற தோற்றத்தில் தன் திருக்கரங்களில்  சூலம், டமருகம், அபய , வரதம் தரித்து காளையின் மீது அமர்ந்து பரமேஸ்வரன் போல் காட்சியளிப்பவள். நாரத பாஞ்சராத்ரம் எனும் நூல்  இத்தேவியை மஹாகௌரி என்று போற்றுகிறது.

9.ஸித்திதாத்ரி

தேவி பாகவதத்தில் இந்த சக்தி ஈசனை ஆராதித்து அவருடலில் பாதியைப் பெற்று அர்த்தநாரீஸ்வரியானாள் எனக் கூறப்பட்டுள்ளது. தாமரையில்  வீற்றிருந்து தாமரை, சங்கு, சக்கரம், கதை போன்றவற்றைத் தன் கரங்களில் ஏந்தி ஆனந்தமாக வீற்றிருப்பவள். மார்க்கண்டேய புராணத்திலும் பிரம்ம  வைவர்த்த  புராணத்திலும் கிருஷ்ணஜன்ம காண்டத்தில் இந்த சக்தியை அணிமாதி சித்திகள் பூஜை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.

நவதுர்க்கைகளையும் தியானிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். தன் பக்தர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் வராமல் நவதுர்க்கைகளும்  காப்பர்

Related Stories: