கல்யாண வரமருள்வார் திருக்காமீஸ்வரர்

வில்லியனூர், புதுவை

புதுவையில் தென்மேற்கு 10  கி.மீ தொலைவில் வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை  தர்மபால சோழன் 11-ம் நூற்றாண்டில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. வில்லேச்சரம் என்று அழைக்கப்பட்ட வில்லியனூரில் வில்வன காடுகள் நிறைந்து இருந்தன. அங்கு பலரும் மாடுகளை மேய்ப்பது வழக்கம். அங்கு  சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாடுகள் அங்கு மேய்வது உண்டு. இப்போது உழவர்கரை என்று அழைக்கப்படுகின்ற ஒழுரையை சேர்ந்த நிலக்கிழார் ஒருவருக்கு சொந்தமான கரு நிற பசு மேய்ந்து விட்டு மாலையில் தொழுவத்திற்கு திரும்பி வரும்போது, அப்பசுவின் மடி பால் வற்றி காணப்பட்டது. இது சில நாட்களாக தொடர்ந்தது. இதைக்கண்ட நிலக்கிழார், மாடுகள் மேய்க்கும் இடைக்குல வாலிபனிடம் பசுவிலிருந்து யாரோ பால் கறந்து செல்கிறார்கள். இன்று இந்த காராம் பசுவை பின் தொடர்ந்து பார் என்று உத்தரவிட்டார்.

முதலாளி உத்தரவுப்படி அந்த வாலிபர், பசுவை பார்த்துக் கொண்டிருந்தார். மேய்ச்சலில் இருந்த மாடுகள் கூட்டத்திலிருந்த இந்த பசு, மாலை பொழுது நெருங்கும் வேளை தனித்துச் சென்றது. ஒரு புதருக்குள் சென்று தன் மடியிலிருந்து ஒரு சுயம்பு லிங்கத்துக்கு பால் சொரிவதை மாடு மேய்த்து கொண்டு இருந்தவன்  பார்த்தான். தானாக பால் சொரிந்ததை கேட்டு அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். இச்செய்தி காட்டுத்தீ போல் பல ஊருக்குள்ளும் பரவியது. அதன்பிறகு பசு பால் சொரிந்து விட்டு சென்ற அந்த லிங்கத்துக்கு பொதுமக்கள் கொட்டகை அமைத்து கோயிலாக்கி வழிபட தொடங்கினர்.அதற்கு அருகில் பிரம்ம தேவரால் நிறுவப்பட்ட ஹ்ருத்தாபநாசினி (பிரம்மதீர்த்தம்) இருந்ததால் பொதுமக்கள் குளத்தில் நீராடி அந்த சுயம்புலிங்கத்தை வழிபாடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

ஒரு நாள் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட ஹ்ருத்தாபநாசினி குளத்தில் மூழ்கி புதர்களுக்கிடையில் இருந்த திருக்காமேஸ்வரை வணங்கியபோது, அதனுடைய தோல் வியாதி நீங்கியது. இந்த செய்தி பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. 11-ம் நூற்றாண்டில் சோழ நாட்டைச் சேர்ந்த கமலாபுரி என்ற நகரத்தைச் சேர்ந்த கமலா புரி என்ற தர்மபால சோழன் ஆண்டுவந்தார். அவனது நோய் திருக்காமேஸ்வரர் அருளால் குணமானது. சிவபெருமானின் திருவருளை நினைத்து உருகிய நோய் தீரப்பெற்றவர் ஏராளமான தான தருமங்களை செய்து கோயிலுக்குள் புகுந்து வில்வநேசனை வழிபட்ட பின் அங்கே விரிவாக சிவ ஆலயம் கட்டத் தொடங்கினார்.கோயிலை கட்டி முடித்து வெகு விமரிசையாக விழா எடுத்தார். அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. வைகாசி சுவாதி நட்சத்திரத்தில் இந்த கோயிலில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.

 

வேண்டுதல் நிறைவேற கோபூஜை கோயிலின் தென் மேற்கு பகுதியில் கோசாலை உள்ளது. இங்கு 20 க்கும் மேற்பட்ட பசு மற்றும் காளை மாடுகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மாலை 6 மணி முதல் 7.30 வரை கோ பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதில், திருமணம் கைகூடாதவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், தொழிலில் அபிவிருத்தி இல்லாதவர்களும் கலந்து கொண்டு இந்த கோபூஜையை செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் இந்த பூஜையில் கலந்து  கொள்கின்றனர். திருமணம் முடிந்ததும் மணமக்களுடன் இங்கு கோ பூஜை செய்து சுமங்கலி பெண்களுக்கு பிரசாதங்களை வழங்கி வருகின்றனர். அது மட்டுமின்றி ஆண்கள் தொழில் அபிவிருத்திக்காக கோபூஜை செய்து பலன் அடைந்து வருவதை காண முடிகிறது.

புதுவை மாநிலத்திலேயே திருக்காமீஸ்வரர் கோயில் கார்த்திகை தீபம்  மிக விமர்சியானவை. பெண்களும், மாணவிகளும் 1 லட்சம் அகல் விளக்குகளை கொண்டு தீபம் ஏற்றி வழிபடுவார்கள், இந்த தீபத்திருநாளன்று கோயில் கோபுரங்கள் மற்றும் குளக்கரை அனைத்தும் கண்கொள்ளாக் காட்சியாக மகா தீப ஒளியில் மின்னும்.  கோயில் தொடர்புக்கு  திருவரசன் -9442891327,      பார்த்தசாரதி - 9843492705.ஆலயத்திற்கு கைங்கர்யம் செய்ய விரும்புவர்கள் தொடர்புக்கு: Special Officer. . AIC : 04300100012339 /  IFSC : UCBA0000430 யூகோ வங்கி, வில்லியனூர் கிளை.  

இந்த கோயில் குளத்திற்கு அருகில் நவகிரகங்களுக்கும் தனித்தனியாக சந்நதி அமைந்திருப்பதும், அந்த கிரகங்களுக்குரிய மூலிகை செடிகளும், அங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திரன் பூஜித்து தங்கிய  இடம் அரசூர் என்றும், சந்திரன் பூஜிக்க வந்த போது தங்கிய  இடம் பிறையூர் (பொறையூர் ) என்றும், சூரியன் திருக்காமீஸ்வரரை தரிசிக்க வந்த போது தங்கிய  இடம் உதயம்பட்டு (ஓதியம்பட்டு) என்றும்   காண  பரம்பரை செய்திகள்  கூறுகிறது.

Related Stories: