×

சிவனை பூஜித்த விலங்குகள்

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள திருப்புலிவனத்தில், திருப்புலிவலமுடையார் அருள்கிறார். சாபத்தால் புலியாக உருமாறிய முனிவர் இங்கே சிவபெருமானை பூஜித்திருக்கிறார்.

* யொற்றி நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன்கோவிலில் அம்பிகை பசு வடிவில் வந்து ஈசனை வணங்கினாள். ‘கோ’ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் இத்தல அன்னை ‘கோமதி’ என்றே வணங்கப்படுகிறாள்.

*  திருச்சி, திருவெறும்பூரில் ஈசனை, எறும்புகள் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்லும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.

*  ஈ சிவனை பூஜித்து பேறு பெற்ற தலம் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை. யோகினிகளே (பெண் அர்ச்சகர்கள்) இங்கு பூஜை, ஹோமங்கள் போன்றவற்றை செய்கின்றனர்.

*  பாம்பு சிவபெருமானை பூஜித்த தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தல ஈசனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டிருக்கிறது.

*  அணில், குரங்கு, காகம் மூன்றும் சிவனை பூஜித்து நன்மையடைந்த தலம் திருக்குரங்கணில்முட்டம். சாபத்தால் காகமாக மாறிய யமனும், அணிலாக மாறிய தேவேந்திரனும், குரங்காக மாறிய வாலியும் இத்தலத்தில் சாபவிமோசனம் பெற்றனர்.  காஞ்சிபுரம், மாமண்டூர் தூசி எனும் இடத்தில் உள்ளது.

*  சாபம் காரணமாக மயில் உருவில் வந்து அம்பிகை சிவபெருமானை பூஜை செய்த தலம் மயிலாடுதுறை.

*  கழுகு, சிவபெருமானை பூஜை செய்து வளங்கள் பெற்ற தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் இங்கு கழுகுகள் பூஜித்து வருகின்றன.

*  சிலந்தி சிவனை பூஜித்து முக்தி பெற்ற தலம் திருக்காளத்தி. திருவாரூர், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு உருவில் ஈசனை பூஜித்தார். இன்றும் கருவறையில் வண்டின் ரீங்கார ஒலி கேட்கிறது.

*  சாபத்தால் நண்டாக மாறிய தேவேந்திரன் ஈசனை வணங்கி பேறு பெற்றான். திருந்துதேவன்குடி எனும் இத்தலத்தை நண்டாங்கோயில் என்றும் அழைப்பர். இது கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது.

*  தஞ்சாவூர், அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள திருச்சக்கராப்பள்ளியில் அருளும் ஈசனை சக்ரவாகப் பறவை பூஜித்து பேறு பெற்றது.

*  திருவாரூர், திருக்கொட்டாரத்தில் அருள்புரியும் ஈசனை, துர்வாசரால் சாபம் பெற்ற ஐராவத யானை பூஜித்து விமோசனம்
பெற்றது.

*  தஞ்சாவூர், பட்டீஸ்வரத்தில் காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு வழிபட்ட லிங்கம் உள்ளது.

*  காஞ்சிபுரம், திருக்கச்சூரில் அருளும் ஈசனை திருமால் தரிசித்து, தேவாசுரர்கள் அமிர்தம் கடைந்தபோது மந்தார மலையைத் தான் கூர்மமாக (ஆமை) தாங்குவதற்கு சக்தி பெற்றிருக்கிறார். அதனால் இத்தல ஈசன் கச்சபேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.

*  கிளியாக மாறிய சுகமுனிவர் பூஜை செய்த சுகவனேஸ்வரர், சேலத்தில் அருள்கிறார்.

*  ஜடாயு வழிபட்ட தலம் வைத்தீஸ்வரன் கோயில்.

*  தஞ்சாவூர், வடகுரங்காடுதுறையில் தன்னை பூஜித்த சிட்டுக்குருவிக்கு மோட்சப் பதவி அளித்த ஈசன், சிட்டிலிங்கேஸ்வரராக கோயில் கொண்டிருக்கிறார்.

-ந.பரணிகுமார்

Tags : Shiva ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு