நினைத்தது நிறைவேறும் நம்பிக்கையோடு இரு

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம். அழுகைக்கு ஒரு காலம். சிரிப்புக்கு ஒரு காலம். அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம். போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம். விதைப்பதற்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம் என காலத்தைப் பற்றி மிக அழகாக நம் திருவிவிலியத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவை எண்ணி நாம் வாழும் போது நமது சூழ்நிலைகள் நம்மை ஆளுவதில்லை. பவுலைப் போல எல்லாச் சூழ்நிலைகளையும் வெற்றியோடு எதிர் கொள்ள அவரது வல்லமை நமக்கு உதவி செய்யும் என்பதனை அறியக்கடவோம்.

‘‘ஆண்டவருக்காக காத்திரு. அவர்தம் வழியைப் பின்பற்று, அப்பொழுது நீ நிலத்தை உடைமையாக்கிக் கொள்ளும்படி அவர் உன்னை உயர்த்துவார்’’. (திருப்பாடல்கள் 37 : 34 )  நீங்கள் நினைத்த சில விஷயங்கள் நடக்காமல் போகலாம். அல்லது காலம் தாழ்த்திக் கொண்டு போகலாம். ஆனால் நீங்கள் எந்த கலக்கமும் கொள்ளாமல் மன அமைதியுடன் இருங்கள். ஆண்டவருக்காய்க் காத்திருங்கள். அவருடைய நேரம் வரும் வரை அவரது பலத்த கைகளுக்குள் அடங்கி இருங்கள். வாழ்வு தரும் ஊற்று அவரிடமே உள்ளது என்பதனை நம்புங்கள்.

‘‘ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும் ’’. (திருப்பாடல்கள் 31 : 1). ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருங்கள். நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும், உறுதியும் கொண்டிருங்கள்.’’ நெஞ்சே ஆண்டவருக்காகக் காத்திரு, மன உறுதிக்கொள், உன் உள்ளம் வலிமை பெறட்டும், ஆண்டவருக்காகக் காத்திரு’’. (திருப்பாடல்கள் 27 : 14). ஒரு பொருளோ அல்லது ஒரு செயலோ நாம் நினைத்தவுடன் நடந்து விட்டால் அதன் மதிப்பு நமக்கு ஒருவேளை தெரியாமல் போய்விடும். ஆனால் காத்திருந்து அடைந்ததை எந்த சூழலிலும் நாம் ஒரு பொக்கிஷமாகவே காத்துக் கொள்வோம். எனவே உடனே நம் கைக்கு கிடைத்ததைவிட, மிகுந்த காத்திருப்புக்குப்பின் கிடைத்ததற்கு வலிமையும், மதிப்பும், மகிழ்ச்சியும் அதிகம் அல்லவா?

நம்மை படைத்த இறைவனுக்கு நமக்கு எப்பொழுது எது தேவை? எது நல்லது? என்பது தெரியும். எனவே ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். அவரே உங்கள் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்ப்பவர். ‘‘ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை. பசும்புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.’’ (திருப்பாடல்கள் 23 :1) என்பதனை உரக்கச் சொல்லுங்கள். காத்திருப்பின் பயனை விரைவில் சுவைப்பீர்கள். ஆண்டவரே உங்கள் விண்ணப்பத்தைத் தகுந்த காலத்தில் நிறைவேற்றுவார் என நம்பிக்கையோடு ஜெபியுங்கள்.

- ஜெரால்டின் ஜெனிபர்

Related Stories: