×

சனி தோஷ நிவர்த்திக்கு எளிய பரிகாரங்கள்

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனிபகவானே ஆவார்.

சனிபகவான் யாருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்க மாட்டார். பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்தவர்,

நவகிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனிபகவான். கரிய நிறம் கொண்ட சனிபகவான் காஸ்யப கோத்திரத்தில் பிறந்தார். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள்காரகன் என்ற அதி முக்கியமான பதவியை வகிக்கின்றார். இவர் சூரிய பகவானின் இரண்டாவது புதல்வர் ஆவார். சனிபகவான் கொடுக்க எவராலும் தடுக்க முடியாது என்பர்.

பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்க்கொள்ளும் ஒரு காலக்கட்டம் வரும். ஏழரைச்சனி, மற்றும் சனி மகாதசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு விளைவிக்கும், தாக்கங்களை ஏற்படுத்தும் காலங்களாகும்.

பொதுவாக சனிப்பெயர்ச்சி என்றாலே எல்லோரும் பயப்படுவார்கள். அப்படி பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. சனி கிரகத்தினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபட பல எளிய பரிகாரங்கள் உள்ளன.

பரிகாரம்: சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டு விடுங்கள். பின்னர் அந்த அரிசி மாவை எறும்புகள் தூக்கிச் செல்லும். அப்படி எறும்புகள் அதைத் தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசிமாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் சனி பகவானின் கொடும் தன்மை நீங்கி விடும்.

இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு அவை இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும். இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலிமை இழந்து போய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போட்டு வர வேண்டும். ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டகச்சனி, அர்த்தாஷ்டமச்சனி முதலிய எல்லா சனிதோஷங்களும் இப்படிச் செய்வதால் விலகும்.

- ஏ.எஸ். கோவிந்தராஜன்

Tags : Saturn ,
× RELATED சனி பிரதோஷ வழிபாடு