×

இரண்டு குல தெய்வங்களையும் நீங்கள் வழிபட்டால் உங்களது வீட்டில் பிரச்சனையே வராது.

குலதெய்வம் என்று சொன்னாலே ஒரு வீட்டிற்கு ஒரு தெய்வம் தான் இருக்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டு குல தெய்வம் ஒன்று. உங்களின் மனைவியின் குல தெய்வம் ஒன்று. உங்கள் வீட்டின் குலவிருத்திக்கு இரண்டு தெய்வங்களும் காரணம். திருமணம் ஆனபின்பு பெண்ணின் பிறந்த கோத்திரம் மாற்றப்பட்டு, கன்னிகாதானம் செய்து கணவன் வீட்டிற்கு சென்ற பின் எல்லா பழக்கவழக்கங்களையும், பெண் தனது புகுந்த வீட்டின் முறைப்படி மாற்றிக்கொள்ள வேண்டும்.

அப்படித்தான் ஒரு பெண்ணின் குலதெய்வமும் மாறிவிடுகிறது. ஆனால் பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்ததிலிருந்து வழிபட்டு வந்த குலதெய்வத்தை திருமணத்திற்குப் பிறகு முறைப்படி வழிபடாமல் விடுவது சரியா தவறா என்பது நம்மில் சிலருக்கு தெரியாது. திருமணத்திற்கு பிறகு பெண் தன் தாய் வீட்டு குல தெய்வத்தை முறைப்படி வணங்காமல் இருந்தால் தெய்வ குத்தம் ஆகுமா? என்ற சந்தேகத்திற்கு பதில் தான் இந்த பதிவு.

ஒரு வீட்டில் பிரச்சினைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது என்றால், அந்த வீட்டில் நிச்சயம் குலதெய்வக் குறைபாடு அல்லது ஏதாவது ஒரு தெய்வக் குற்றம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். உடல் ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை ஆனால் குழந்தை வரம் கிடைக்க வில்லை என்றாலும் குலதெய்வக் குறைபாடு தான் காரணம். பிரச்சினைகள் நிறைந்திருக்கும் வீட்டில் கணவரது குலதெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். ஆனால் மனைவியின் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட சிலருக்கு ஏற்படாது.

இதற்காக கணவரின் குல தெய்வத்தை வழிபட்டால் பிரச்சனைகள் தீராத என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். இதில் மனைவியின் குல தெய்வத்தை மறந்து தான் தவறு. எப்படி குழந்தை பிறந்தவுடன் கணவரின் குலதெய்வ கோவிலுக்குச் சென்று குழந்தைக்கு முடி இறக்கி, காது குத்தி சடங்கினை செய்கிறோமோ, அதேபோல் மனைவியின் குலதெய்வ கோவிலுக்கும் சென்று அந்த இறைவனை முறைப்படி வழிபட்டு, நன்றி சொல்லி வருவது என்பதும் ஒரு சடங்குதான். இதை நம்மில் பலர் செய்வது இல்லை. குழந்தைக்கான நேர்த்திக்கடனை கணவரின் குலதெய்வத்திற்கு செலுத்துவது நம் முறையாக இருந்தாலும், மனைவியின் குலதெய்வத்தின் ஆசியையும் பெற வேண்டியது நம் குடும்பத்திற்கு அவசியம் தேவை என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் தன் புகுந்த வீட்டு குலதெய்வத்தை மறவாமல் எப்படி மனதார நினைத்து பூஜை செய்து வருகிறார்களோ, அதேபோல் தன் தாய் வீட்டு குல தெய்வத்தையும் மறக்காமல் பூஜை செய்து வழிபட வேண்டும். அதேபோல் கணவரும் தன் மனைவியின் குலதெய்வத்தை மனதார வழிபட்டு வரவேண்டும்.தன் கணவரானவர் ‘தன்னையும், தன் வீட்டு பழக்க வழக்கத்தையும், தன் வீட்டு குல தெய்வத்தையும் மதிக்க தெரிந்தவர் என்ற எண்ணம், மனைவியின் மனதில் வந்து விட்டாலே போதும்’. ஒரு வீட்டில் பிரச்சனை உண்டாக காரணமாக இருக்கும் ஈகோவானது அந்த இடத்திலேயே மறைந்து விடுகிறது. சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் நம் குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள தான்.

நம் சந்தோஷத்திற்கு எது நல்ல வழி வகுக்கின்றதோ, அதன் பின்னால் நாம் செல்வதில் ஒன்றும் தவறில்லை. இதற்காக உங்களது சாஸ்திர சம்பிரதாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் அர்த்தமில்லை. சாஸ்திரம் சம்பிரதாயம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், உங்களது மனைவிக்கும் மனைவியின் பழக்க வழக்கத்திற்கும் ஒரு இடம் கொடுத்து தான் பாருங்களேன். நிச்சயம் உங்களது வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கி சந்தோஷம் பிறக்கும். கணவன், மனைவியிடம் ‘உன் வீட்டு குல தெய்வ கோவிலுக்கு நம் குடும்பத்தோடு சென்று வரலாம் என்று கூறும் ஒரு வார்த்தைக்கு’ மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். தனது மனைவியின் விருப்பத்திற்கும் செவிசாய்க்கும் கணவர் இருக்கும் வீட்டில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இல்லை.

Tags : clan gods ,house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்