×

மணியான ஒரு பாடல் வேண்டும்... அது மணிகண்டன் மீதிருக்க வேண்டும்...

ஐயப்பன் புகழ்பாடும் பாடல்களுக்குச் சொந்தக்காரர் கி. வீரமணி.  சோமு சகோதரர்களை நாம் அறிவோம். சகோதரர்களில் இளையவரான வீரமணி மறைந்துவிட்டதும், அவர்களது குடும்பத்தினரும், அண்ணன் சோமுவும் அவரது மகளும், மகன்களும் இப்போதும் ஐயப்ப கானங்களை மேடைதோறும் இசைத்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர். ‘கலைமாமணி’ சோமுவின் நான்கு குழந்தைகளில் கடைக்குட்டி உஷாபாலாஜி. தந்தை வழியில் . தந்தையுடன் சேர்ந்து இவர் வழங்கி வரும் இசைக் கச்சேரிகள், கேட்பவர்களின் செவிகளை நிறைத்து,  உள்ளத்தைத் தொடுபவை. ஆத்மாவின்  ஆழத்திலிருந்து ஒலிக்கும் இவரது குரலில், பக்தி பொங்கிப்பெருகி வழிந்தோடுகிறது. கோயில் திருவிழா கச்சேரிகள், இசைக் கச்சேரிகள், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகள் என்று ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கும் உஷா பாலாஜியை ஒரு பொன்  மாலைப் பொழுதில் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

‘நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி  வருகிறேன். தினந்தோறும் எலெக்ட்ரிக் ட்ரெயினில் அலுவலகத்துக்குப் போகும் போதும் வரும்போதும் என் தோழிகள் என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார்கள். நானும் பாடுவேன். குறிப்பாக மாணிக்க வீணையேந்தும், ஜெய ஜெய தேவி பாடல்கள். அப்போது கிடைத்த கைதட்டல்களும், பாராட்டுகளும் என்னைப் பரவசப்படுத்தின. குறிப்பாக, என் தோழி ரேவதி கொடுத்த ஊக்கத்தால் கச்சேரி செய்ய ஆரம்பித்தேன்.. முதல் கச்சேரி என் 31வது வயதில் 2001ல் பெருங்களத்தூர் காமாட்சியம்மன் ஆலயத்தில் அரங்கேறியது.

இதோ பதினெட்டு  வருடங்கள் ஓடி விட்டன. தமிழகம் மட்டுமல்லாமல், மும்பை, தில்லியிலும் (ரோஹிணி) அவ்வப்போது கச்சேரிகள் செய்து வருகிறேன். கூடவே ரமா நம்பிராஜன், கீதா சீனிவாசன் போன்றோரிடம் முறைப்படி  கர்நாடக இசை கற்றுக்கொண்டேன். என்னுடன் என் தந்தை சோமுவும் கச்சேரிகளில் பங்கேற்பது எனக்குக் கூடுதல் பலம். இந்த வயதிலும் அவரது ஆர்வமும்  ஊக்குவிப்பும் எனக்குள் பெரிதும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. என் கணவர் பாலாஜி எனக்குப் பெரிதும் பக்கபலமாக இருக்கிறார். என் மகன் தீபக் பாலாஜி, என் கச்சேரிகளுக்கு கீ போர்டு வாசித்து வருவதுடன், தொய்வின்றி நான் இசைப் பயணத்தைத் தொடர உதவி வருகிறார்.’’‘‘ஐயப்பன் பக்திப் பாடல்கள் மட்டுமல்லாமல், அம்மன் பக்திப் பாடல்களையும், திரையிசை பக்திப் பாடல்களையும் என் கச்சேரிகளில் பாடி வருகிறேன்.’’

‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாடிய கச்சேரி மறக்க முடியாதது. அதிலும் கொண்டைமுடி அலங்கரித்து பாடலை நான் பாடியதும் ஒலிப்பதிவு நாடாவிலேயே கேட்ட அபூர்வமான பாடல். இதை மீனாட்சியம்மன் ஆலயத்தில் முதன்முறையாக நேரே கேட்கிறோம். மிக மிக அருமை என்று அனைவரும் கூறினர். அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் தொடர்ந்து கச்சேரிகள் செய்து வருகிறேன். நான் மேடையேறி விட்டாலே. ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’, ‘ஜெயஜெய தேவி துர்கா தேவி சரணம்’, ‘உலகெல்லாம் காத்து நிற்கும் அஷ்டலஷ்மி’, மாணிக்க வீணையேந்தும்’ போன்ற பாடல்களைப் பாடச் சொல்லி ரசிகர்கள் கேட்பார்கள். அதிலும் குறிப்பாக நிறைஞ்ச மனசுக்காரி 108 அம்மன் பாடலை பாடிக் கொண்டு இருக்கும்போதே சிலர் சாமி வந்து ஆடுவார்கள். மேடையேறி என்னைப் பிடித்துக் கொண்டு, நீதான் செல்லாத்தா, நீதான் மாரியாத்தா… உனக்குள்ள எல்லா தெய்வமும் இருக்குது. உன் வாழ்க்கையில கவலையே கிடையாது’ என்றெல்லாம் உச்சஸ்தாயியில் சொல்லும் போது, உண்மையிலேயே மெய்சிலிர்த்துப் போகும்.   
பல்வேறு மடங்களைச் சேர்ந்த ஆன்மிக குருமார்கள் முன்பு பாடியது என் பாக்கியம். குறிப்பாக மும்பை செம்பூரில் சகடபுரம் ஸ்வாமிகள் முன் தொடர்ந்து 3 நாட்கள் பாடியதையும், வடபழநி முருகன் கோயிலில் அப்போது தக்காராக இருந்த திரு.சீர்காழிசிவசிதம்பரமும், இன்னிசையரசி திருமதி.வாணிஜெயராம் அவர்களும் என் கச்சேரியைக் கேட்டு பாராட்டியதையும் மறக்கவே முடியாது.எவ்வளவோ பாடல்கள் நான் பாடினாலும் என்ன வரம் வேண்டும் கேளுங்கள் சபரி மன்னவன் வழங்கிடுவான் பாருங்கள் பாடலும், மணியான ஒரு பாடல் வேண்டும் அது மணிகண்டன் மீதிருக்க வேண்டும் எனும் பாடலும் என் மனதிற்கு நெருக்கமானவை. அதைப்போன்று வன்புலிவாகனன் எனும் ஆல்பத்தில் கருப்பண்ணசாமி பாடலும், ஐயப்பன் தாலாட்டும் எனக்கு  பெயர் பெற்றுத் தந்த பாடல்கள்.

அதேபோன்று தாமிரபரணி புஷ்கரத்தில் அந்த அமைப்பாளர் கோபால கிருஷ்ணன் அவர்கள் 11/2 மணி நேர கச்சேரிக்கு அனுமதி தந்திருந்தார். நல்ல மழை வேறு. என் முதல் இரண்டு பாடல்களைக் கேட்ட அவர் அதை 3 மணி நேரக் கச்சேரியாக மாற்றினார். இயற்கை மழையை அனுபவித்துக்கொண்டே அன்று பக்தர்கள் பக்தி எனும் அருள்மழையிலும் நனைந்தனர்.கச்சேரி ஆரம்பிக்கும் முன்  என் சிறு பூஜை பெட்டியிலுள்ள கடவுள்களுக்கு பூ போட்டும், பக்க வாத்தியங்களைத் தொட்டு வணங்கிவிட்டும் ஆரம்பிப்பேன். என் மிகத் தீவிரமான ரசிகையான ரஞ்சனா நரசிம்மன் தந்த ஷீரடி சாய் போட்டோவை நான் பொக்கிஷமாய் போற்றி வருகிறேன். அதே போன்று சுஜா முரளிதரன் வருடாவருடம் விஷ்ராந்தி முதியோர் இல்லக் கச்சேரியை ஏற்பாடு செய்து தருவதையும் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

‘‘மடிப்பாக்கம் சீதளா தேவி கோயில் குருஜி வழங்கிய கந்தர்வ கான இசைப் பேரரசி தமிழிசைக்குயில், இசையருள் வாரிதி என ஒவ்வொருமுறை கச்சேரியின்போதும் ஒவ்வொருபட்டம் தந்து கெளரவித்தது தேவியின் திருவருள். .ஜோதிடமணி துரைராஜின் குருபெயர்ச்சி யாகம் கச்சேரியில் வழங்கப்பட்ட அருள் இசைத் தென்றல் விருதும் மறக்க முடியாத விருதுகள், காரணம், முன் கூட்டியே எனக்குச் சொல்லாமல், கச்சேரி முடிந்தவுடன் மேடையிலேயே சர்ப்ரைஸாக அந்த விருதுகள் எனக்கு வழங்கப்பட்டதுதான். அனைவரும் நலமுடன் ஆரோக்கியமாக வாழவேண்டும், வெளிநாடுகளிலும் என் இன்னிசை கச்சேரி நடக்க வேண்டும் என்பது என் கச்சேரியின் இறுதி பிரார்த்தனை. முதியோர் இல்லம், வேதபாடசாலைகளுக்கு முடிந்த போதெல்லாம் உதவ வேண்டும் என்பது என் ஆசை என்று பேட்டியை நிறைவு செய்தார். அவர் பூஜையறை மணி அதை ஆமோதிப்பது போல்  இன்னிசை எழுப்பியது.

* ந.பரணிகுமார்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?