கனககிரீஸ்வரர் மலையின் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கின்றார். அம்பாள் ஆலயத்தின் பின்புறமாக தென்மேற்கு பகுதியில் 500 அடி உயரத்தில் கனக கிரி என்ற பெயரைக் கொண்ட மலையில் உச்சியில் ஈசன் அமர்ந்திருக்கின்றார். அம்பிகை பெரிய நாயகிக்கு இங்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்பாள் ஈசனை சரிபாதியாக அடைவதற்கு இந்த இடத்தில் தவம் இருந்ததால் திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்தால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அம்பாளின் தவத்தில் மயங்கிய சிவன் பங்குனி உத்திரத்தன்று, மலையில் இருந்து கீழே இறங்கி வந்து அம்பாளை திருமணம் செய்தார் என்பது ஐதீகம்.
சுடுநீர் அபிஷேகம்
மலையின் உச்சியில் வேடன் ஒருவன் கிழங்கினை வெட்டி எடுப்பதற்கு கோடாரியால் பூமியை தோன்றிய போது அந்த இடத்திலிருந்து இரத்தம் வெளியேறியது. அந்த இடத்தில் என்ன இருக்கின்றது என்பதை தோண்டி பார்த்த வேடனுக்கு லிங்கம் ஒன்று கிடைத்தது. ஆனால் அதிலிருந்து வெளிவந்த இரத்தமானது நிற்கவே இல்லை. அந்த இரத்தத்தை நிறுத்துவதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும் இரத்தம் பாய்ந்து கொண்டே இருந்தது. கடைசியாக வெந்நீரை எடுத்து லிங்கத்தின் மீது வேடன் ஊற்றினான். அப்போதுதான் இந்த இரத்தமானது நின்றது. அன்று முதல் இன்று வரை சிவனுக்கு வெந்நீரில் தான் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த வேடன் கதைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை செவி வழியாக கேட்கப்பட்ட கதைதான் இது.
மலையின் உச்சியில் உள்ள கனககிரீஸ்வரர் திருக்கோவிலில் மூலஸ்தானத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். இதற்கான ஒரு கதையும் உண்டு. ஒருமுறை இந்த கோவிலின் வழியாக போருக்குச் சென்ற பல்லவ மன்னன் இச்சிவன் கோவிலின் பெருமையை பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றான். பல்லவ மன்னன், தான் போரில் வெற்றி பெற்றால் மலையின் மேல் உள்ள சிவனுக்கு பெரிய கோயில் கட்டி தருவதாக வேண்டிக் கொண்டான். போரில் வெற்றி கண்ட பல்லவ மன்னன் தன் வேண்டுதலை மறந்து விட்டான். பிறகு மன்னனுக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டது. அப்போதுதான் ஈசனுக்கு, கோவில் கட்டி தருவதாக சொன்னது நினைவுக்கு வந்தது. பல்லவ மன்னன் சிவனுக்காக கோயிலை கட்டிய போது வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் திடீரென்று காணாமல் போய்விட்டது. வருத்தத்தில் இருந்த பல்லவ மன்னன் காசியிலிருந்து மற்றொரு லிங்கத்தைக் கொண்டு வந்து அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுகணமே சுயம்புலிங்கம் திரும்பவும் காட்சி தந்தது. கடவுளை மறந்த பல்லவ மன்னனை, ஈசன் மறந்து இருக்கிறார் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பல்லவ மன்னன் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு கனககிரிஸ்வரர் என்ற பெயர் வைத்து அதே கருவறையில் இரண்டு மூலவர்கள் வைத்து இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.
தல வரலாறு
ஒரு முறை பிருங்கி முனிவர் சக்தியை விட்டுவிட்டு சிவனை மட்டும் வண்டு ரூபத்தில் வந்து தரிசித்ததன் காரணமாக சக்தி கோபமடைந்து சிவனின் ஒரு பாதியில் தான் கலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, சக்தியானவள் சிவனை விட்டு பிரிந்து சென்றாள். இதற்காக சிவன் சக்தியிடம், ‘சக்தியான நீ பூலோகத்தில் காஞ்சிபுரம் என்னுமிடத்தில் காஞ்சி காமாட்சியாக தவமிருந்து காத்திரு. காலம் கனிந்து வரும் சமயத்தில் உன்னை மணந்து கொள்கிறேன் என்று வாக்களித்தார். பின்னர் திருவண்ணாமலைக்கு வந்து வழிபாடு செய்யும்போது என் உருவில் இடப்பக்கத்தில் உனக்கு இடம் தருகின்றேன் என்றும் வாக்களித்தார்.’ சிவபெருமான் கூறியபடி சக்தி தேவியும் காஞ்சிபுரத்தில் தவம் இருந்தபோது ஏகாம்பரநாதரை மணந்தார். அடுத்ததாக தேவி திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டபத்தில் கனககிரீஸ்வரை வணங்கி தவமிருந்தார். இதனால்தான் இந்த தளம் தேவிகாபுரம் என்ற பெயரை பெற்றுள்ளது. இங்கிருந்து திருவண்ணாமலைக்குச் சென்று சிவனின் இடது பக்கத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது.
பலன்கள்
திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள அம்பாளை வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஈசனை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும்.
தரிசன நேரம்:
மலையின் மேல் உள்ள கோயில் காலை 8.00AM – 10.00AM
மலையின் கீழே உள்ள அம்மன் கோயில் காலை 6.00AM – 12.00PM மாலை 5.00PM – 8.00PM