கேது திசை காலத்தில் நன்மைகள் ஏற்பட செய்ய வேண்டிய வழிபாடு முறைகள்

“கொடுப்பதில் ராகுவும் கெடுப்பதில் கேதுவும் சிறந்தவர்” என சிலர் கூறுவதுண்டு. பொருள் சார்ந்த சுக போகங்களை ராகு பகவான் தந்தாலும் அந்த சுகங்களை தடுத்து அவற்றிலெல்லாம் உண்மையான மகிழ்ச்சி இல்லை எனும் ஞானத்தை தரும் ஞானகாரகனாக கேது பகவான் இருக்கிறார். அந்த கேது பகவானின் கேது திசை நடக்கும் காலத்தில் நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரது ஜாதகத்தில் சாயா கிரகமான கேது திசை 7 வருட காலம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் கேது கிரகம் நல்ல நிலையில் இருந்தாலும், அந்த கேது கிரகம் இருக்கும் இடத்தை சுப கிரகங்கள் பார்த்தாலும் கேது கிரகத்தால் அதிகமான பாதகங்கள் ஏற்படாது. மாறாக கேது ஜாதக கட்டத்தில் பாதகமான இடங்களில் இருந்தாலும், பாப கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது அக்கிரகங்களின் பார்வைபட்டாலும் பாதக பலன்கள் அதிகம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.

கேது திசை காலத்தில் கேது பகவானால் பாதக பலன்கள் அதிகம் ஏற்படாமல் இருக்க ஸ்ரீகாளஹத்தி, திருப்பாம்புரநாதர் போன்ற கோயில்களுக்கு சென்று கேது பகவானுக்கு சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்கள் கொண்ட வஸ்திரம் சாற்றி, பால், நெய் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் கேது பகவானுக்கு எருக்கம் பூ மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, பால் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை நைவேத்தியம் செய்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கேது பகவானை வழிபட வேண்டும்.

கேது திசை நடைபெறும் காலத்தில் உங்களால் இயன்ற போதெல்லாம் உங்கள் சக்திக்கு ஏற்ப அன்னதானம் செய்து வருவது கேது திசை பாதிப்புகளை போக்குவதற்கு சிறந்த பரிகாரமாக இருக்கும். கேது பகவான் மற்றும் அக்கிரகத்தின் அதிதேவதையான சித்திரகுப்தன் மற்றும் விநாயகர் பெருமானுக்கு 27 வெள்ளை கொண்டை கடலைகளை மாலையாக கோர்த்து அணிவித்து வந்தாலும் கேது திசை காலத்தில் பாதகங்கள் நீங்கி நன்மைகள் அதிகம் உண்டாகும்.

Related Stories: