×

கார்த்திகை தீப பலன்கள் என்னென்ன?

தீப ஒளி என்றாலே நம் மனதில் உள்ள இருளை நீக்கி வெளிச்சத்தை தருவதுதான். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் குறிப்பாக கார்த்திகை தீபம் கொண்டாடும் இந்த தினத்திற்கு என்று பல புராணக் கதைகள் உள்ளது.

ஒருமுறை பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவர்கள் என்ற போட்டி வந்தபோது சிவபெருமான் அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியை முடிவுக்குக் கொண்டுவர அடி முடியை காண முடியாத அளவிற்கு ஜோதியாக காட்சி அளித்தார். அந்த ஜோதியை தான் அடிமுடி காண முடியாத ‘அண்ணாமலையானே’ என்று கூறுவார்கள். ‘அருணாச்சலா’ என்பதற்கு புனிதமான ஒளிப்பிழம்பு மலை என்ற பொருளும் உண்டு. சிவன் ஜோதி பிழம்பாக காட்சியளித்த அந்த நாளை தான் கார்த்திகை தீபத் திருவிழாவாக திருவண்ணாமலையின் மீது தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றோம். இதன்மூலம் அகங்காரம், பொறாமை, ஆணவம் என்ற தீமைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்த கார்த்திகை திருநாளுக்கு மற்றும் ஒரு புராணக் கதையும் உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு ராஜாவிற்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு உடன்பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லை. தன் அரண்மனையில் இருந்த யானை ஒன்றை ஆசையோடு வளர்த்து வந்தாள். தன் திருமணத்திற்கு பிறகு யானையை பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தன் சகோதரனை பிரிந்த மன வருத்தத்தை இதன்மூலம் அவள் அடைந்தாள்.

இதன்மூலம் கஜ விளக்கு ஏற்றும் பழக்கம் வந்தது. இதன் காரணமாக அந்தப் பெண் யானை வாழ, அரசன் வாழ, பிறந்த வீடு நன்றாக இருக்க கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திதியில் விளக்கு ஏற்றியதாக செவிவழி வரலாறு கூறப்படுகிறது. இதன்படி நம் வீடும், நம் குடும்பத்தை சார்ந்தவர்களும் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக இந்த வழிபாடு கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் கூறலாம். இந்த கார்த்திகை தீபமானது ஒளியின் ரூபம் சிவனுக்கும், அக்கினியின் உருவமான முருகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகுதான், நம் வீடுகளில் தீபம் ஏற்றப்பட வேண்டும்.

கார்த்திகை தீபத்தின் முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படவேண்டும். இரண்டாம் நாள் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. மூன்றாம் நாள் கொல்லைப்புறம், குப்பைத்தொட்டி, மாட்டுக்கொட்டகை இவைகளில் அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது பாரம்பரிய வழக்கம்.

Tags : Karthik Deepa ,
× RELATED கார்த்திகை தீப சங்காபிஷேகம்