×

இருபத்தேழு வகையான விரத முறைமைகள்

இந்து மதப் புராணங்கள் இருபத்தேழு வகையான விரத முறைமைகளை விளக்கி உரைக்கின்றன. வாயின் உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது ஒருவகை விரத முறைமை ஆகும்; இது ஞானிகளால் கடைபிடிக்கப்படும் முறையாகும். தேன்,  இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளல்; பசுவின் பாலை மட்டும் அருந்தி விரதம் இருத்தல்; உணவு ஏதும் உண்ணாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல்; காலையில் மட்டும் உணவருந்தி விரதம் மேற்கொள்ளல்; பகல் நேர உணவு மட்டும்  உண்டு விரதம் மேற்கொள்ளல்; இரவு நேர உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்;

 மூன்று நாட்கள் தொடர்ந்து காலை  உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; மூன்று நாட்கள்தொடர்ந்து நண்பகல் உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு  உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; 21 நாட்கள் பசும்பால் மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளல்; மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை  உண்டு விரதம் இருத்தல்; இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும்  உண்டு விரதம் இருத்தல்; ஒருநாள் பகல் நேரத்தில் எள்ளுப் புண்ணாக்கு மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் அருந்தி விரதம் மேற்கொள்ளல்; ஒருநாள் மோர் மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளல்;

ஒருநாள் முழுவதும் நீரை மட்டுமே அருந்தி விரதம் மேற்கொள்ளல்; ஒரு நாள் முழுவதும் பொரிமாவு மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என விரதம் இருத்தல்; ஒரு நாள் முழுவதும் வில்வத்தின் இலையையும் நீரையும் மட்டுமே அருந்தி விரதம் மேற்கொள்ளல்;ஒரு நாள் முழுவதும் அரச இளந் தளிர்களையும், நீரையும் அருந்தி விரதம் இருத்தல்;

ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிர்களையும், நீரையும் மட்டும் அருந்தி விரதம் இருத்தல்; இரு வேளை உணவுடன் விரதம் இருத்தல்; முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் விரதம் மேற்கொள்ளல்; அசைவ உணவுகளை நீக்கி காரம் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு உண்டு விரதம் இருத்தல்; பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவற்றை மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் விரதம் இருத்தல் என்பன அத்தகைய இருபத்தேழு வகையான விரத முறைமை ஆகும்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?