×

ஐயப்பன் அருட்கவசம்

கணபதி துதி
 
அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே
இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே
உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே
எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை
ஆட்கொண்டே ஐங்கரனே அருள் புரிவாய்.

காப்பு
 
ஹரிஹர புத்திரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை
சபரி கிரீசனை சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றி பணிந்திடுவோம்
(ஐயப்ப தேவன் கவசம் இதனை அனுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும் தினம் தினம் துதிக்க தீரும் வினை எல்லாம் நாடிய பொருளும் நலமும்  வருமே.

நூல்
 
மண்ணுலகெல்லாம் காத்தருள்  செய்ய மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலிவாகனனே வருக வருக புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக புண்ணிய மூர்த்தியே வருக வருக
 
பூதநாயகா வருக வருக புஷ்கலை பதியே வருக வருக
பொன்னம்பலதுறை ஈசா வருக அடியாரை காக்க அன்புடன் வருக
வருக வருக வாசவன் மைந்தா வருக வருக வீரமணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக வல்வினை போக்கிட வருக வருக
 
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக அச்சம் அகற்றிட அன்பனே வருக
இரு வினை களைந்தே எனையாட்கொள்ள இருமூர்த்தி மைந்தா வருக வருக
பதினென்படியை மனதில் நினைக்க
பண்ணிய பாவம் பொடி பொடியாகும்
ஐயப்ப சரணம் என்றே சொல்லிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே
சபரிகிரிசனை நினைத்தே நீரிட துன்பங்கள் யாவும் தூள் தூள் ஆகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும் பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்
ஐயப்பன் பாதம் அனுதினம் நினைக்க
அவனியில் உள்ளோர் அடிபணிந்தேத்துவார்
 
சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சற்குருநாதா சரணம் சரணம் சுவாமியே சரணம்
 
வேண்டுதல்
 
சிவனார் மகன் என் சிரசினை காக்க நெடுமால் மைந்தன் நெற்றியை காக்க
கஜமுகன் தம்பி என் கண்ணினை காக்க நாரணன் பாலன் நாசியை காக்க
இருமூர்த்தி மைந்தன் என் இருசெவி காக்க வாபரின் தோழன் வாயினை காக்க
பம்பையின் பாலன் பற்களை காக்க நான்
முக பூஜிதன் நாவினை காக்க
 
கலியுக வரதன் என் கழுத்தினை காக்க குமரன் தம்பி என் குரல்வளை காக்க
புஷ்களை நாதன் புஜங்களை காக்க முக்கண்ணன் பாலன் முழங்கையை காக்க
வீரமணிகண்டன் விரல்களை காக்க கயிலைமைந்தன் என் கைகளை காக்க
மணிகண்ட தேவன் மார்பினை காக்க வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க
 
முழுமுதற் கடவுள் என் முதுகினை காக்க இருமுடிபிரியன் என் இடுப்பினைக் காக்க
பிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க தர்மசாஸ்தா என் துடைதனைக் காக்க
முருகன் சோதரன் முழங்கால் காக்க கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க விஜயகுமாரன் விரல்களைக் காக்க
 
அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க
காட்டாள ரூபி காலையில் காக்க நவக்கிரக நாதன் நடுப்பகல் காக்க
மாலின் மகனார் மாலையில் காக்க அரிகர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க எரிமேலி சாஸ்தா என்றுமே காக்க
 
அரியின் மகனார் அனுதினம் காக்க நடராஜ பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க இருமுடி ஈசன் இடப்புறம் காக்க
காக்க காக்க கருணையால் காக்க பார்க்க பார்க்க என்பாவம் பொடிபட
இம்மையும் மறுமையும் இல்லாதொழிந்திட ஈசன் மகன் எனை என்றுமே காக்க
 
கொடிய விஷங்களும் கொள்ளை நோய்களும் குருதியை குடிக்கும் துஷ்டப் பேய்களும்
காந்தமலை தன்னை கருத்தில் கொண்டிட கலங்கி மறைந்திட கருணை புரிவாய்
பில்லி சூனியம் பலவித வஞ்சனை பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சசய்ப் பறக்க வரமெனக் அருள்வாய் பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்
 
வாதம் பித்தம் சிலட்சுமத்துடனே வாந்தியும் பேதியும் வலிப்பும் சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணு காமல் என்றுமே காப்பாய் எரிமேலி தேவா
கல்வியும் செல்வமும் கள்ளமில்லா மனமும் நல்லோர் உணர்வும் நாளும் அருள்வாய்
நல்ல மனதுடன் உனை நான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா
 
காமம் குரோதம் லோபம் மோகம் மதமாச் சர்யமெனும் ஐம்பெரும் பேய்களும்
என்றும் என்னை அணுகிவிடாமல் ஐயப்பா தேவா வரமெனக் கருள்வாய்
சூது பொறாமை பொய் கோபமில்லாமல் சோரம் லோபம் துன்மார்க்கம் அல்லாமல்
வேத நெறிதனை விலகி நில்லாமல் வீரமணிகண்டா வரமெனக் கருள்வாய்
 
மூப்பும் பிணியும் வறுமையும் பசியும் வந்தெனை வாட்டி வதை செய்யாமல்
உள்ளன்புடனே உன்திரு நாமம் அனுதினம் சொல்ல அருள் தருவாயே
 
நமஸ்காரம்
 
அரிகர புத்திரா அன்பா நமோ நமோ
சபரிகிரிசா சாஸ்தா நமோ நமோ
பதினெண் படிவாழ் பரமா நமோ நமோ
ஐங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ
பொன்னம்பலத்துறை புண்ணியா நமோ நமோ புலிப்பால் ஈந்த புதல்வா நமோ நமோ
சுரிகாயுதமுடை சுந்தரா நமோ நமோ மகிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ
 
சரணம் சரணம் சபரிகிரிசா சரணம் சரணம் சத்திய சொருபா
சரணம் சரணம் சர்வ தயாளா சரணம் சரணம் ஸ்வாமியே  சரணம்.

ந.பரணிகுமார்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி