கடன் பிரச்சனைகள் தீர, வியாபாரம் தொழில் சிறக்க உதவும் நரசிம்மர் விரதம்

மனிதர்களுக்கு இறை நம்பிக்கை இருப்பது தவறானது அல்ல. பெரும்பாலான மக்கள் தவறு செய்யாமல் இருப்பதற்கு இந்த இறை நம்பிக்கையே காரணமாக இருக்கிறது. ஒருவரிடம் உண்மையான இறை பக்தி இருக்குமானால் அவருக்கு எப்போதும் இறைவன் உதவ காத்திருக்கிறார். அப்படி இறைவனின் அருளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் நீங்க உருவாக்கப்பட்டது தான் விரதம் மேற்கொள்ளும் முறை. அந்த வகையில் சக்தி வாய்ந்த தெய்வமான நரசிம்மருக்கு மேற்கொள்ளப்படும் “நரசிம்மர் விரதம்” தரும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மாதந்தோறும் வரும் “ஸ்வாதி” நட்சத்திர தினத்தன்று நரசிம்மரை வழிபடுவது நற்பலன்களை தரும். நரசிம்மர் விரதம் இருப்பதற்கு சிறந்த தினம் வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினம் ஆகும். இந்த தினமே பொதுவாக நரசிம்மர் அவதரித்த நரசிம்ம ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. மிகுந்த நன்மைகளை தரும் இந்த விரதம் மேற்கொள்ளும் முறைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

நரசிம்மர் விரதம் மேற்கொள்ளும் தினத்தன்று அதிகாலையில் துயிலெழுந்து, குளித்து முடித்து விட வேண்டும். பின்பு வீட்டை நீரை ஊற்றி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பூஜையறையில் பெருமாள் படத்திற்கு வாசம் மிக்க பூக்கள் சாற்றி, விளக்கெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். பின்பு பகல் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் நரசிம்மர் மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபட வேண்டும். மாலையில் கோயிலுக்கு சென்று லட்சுமி நரசிம்மர் ஸ்வாமிக்கு செவ்வரளி மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்றவற்றை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

மேலும் ‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்” என்கிற இந்த சுலோகத்தை கூறி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்றி காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

நரசிம்மரை வழிபட்டு முடித்ததும், அவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை வீட்டில் நீங்களும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். இந்த முறை படி நரசிம்மர் விரதத்தை மேற்கொண்டால் 48 நாட்களுக்குள் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். உங்கள் விருப்பங்கள் நிறைவேற தொடங்கிய பின்பு நரசிம்மர் கோவிலுக்கு சென்று, நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி, துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். இதனால் உங்களின் தீராத கடன் பிரச்சனைகள் சிறிது சிறிதாக நீங்கும். நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் குணமாகும். திருமணத்தடை, தாமதம் போன்றவை நீங்கும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் உள்ள பிரச்சனைகள் பண முடை நீங்கும்.

Related Stories: