×

ஆகம நெறியில் ஐயப்பன்

* இரத்தின.கேசவன்

சிவாகமங்கள் ஆகிய பூர்வகாரணாகமம், சுப்பிரபேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன் பற்றிய குறிப்புகள் உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள் என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள் பற்றிப் பேசுகின்றது. மதகஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, சௌந்தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள் பதினாறாக அது கூறுகின்றது.

இந்த ஆகமங்கள் மற்றும் பத்ததிகளின் படி சில மாறுபாடான கருத்துகளும் உள்ளன. சாஸ்தாவின் பரிவாரங்களாக மஹாகாளன், கோப்தா, பிங்களாட்சன், வீரசேனன், சாம்பவன், த்ரிநேத்ரன், சூலி, தட்சன், பீமரூபன் ஆகியோரையும் கொடியாக யானை மற்றும் கோழியையும் தியான ரத்னாவளி காட்டுகிறது. அது சௌந்திகராஜன் புதல்வியான பூர்ணா மற்றும் அம்பரராஜன் புதல்வியான புஷ்கலா ஆகியோர் ஐயப்பனின் இரு மனைவியர் என்றும் சொல்கிறது. இது இவ்வாறாக சில்பரத்னம் இப்பெருமான் மேகவர்ணர் என்றும் அவருக்கு பிரமை என்ற மனைவியும் சத்யகன் என்ற புதல்வனும் உண்டு என்றும் கூறுகிறது. பூர்வகாரணாகமம் ஐயப்பனின் நிறம் கறுப்பு என்கிறது. சுப்ரபேதம் என்ற சைவாகமம் ஐயப்பனை பெருவயிறர் என்றும் மதனா, வர்ணினி என்ற மனைவியரை உடையவர் என்றும் கரியமேனியர் என்றும் கூறுகிறது. இதே வேளை, அம்சுமான ஆகமம் ஹரிஹர சாஸ்தா என்ற ஐயன் முக்கண்ணும் சாந்தரூபமும் கொண்டவர். வெண்பட்டாடை சாற்றிய திருமேனியர். தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவர் என்று கூறுகிறது. எனினும் பொதுவாக ஐயனாரையும் ஐயப்பனையும் பொன்மேனியராகவே காட்டும் வழக்கமே இருக்கிறது.

இவ்வாறாக, ஐயனார் -ஐயப்பன் வணக்கம் பல்வகைப் பட்டு பலவாறாக பலராலும் பல்வேறு நிலைகளில் செய்யப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். அவரை கிராமதேவதையாகவும் காவல் தெய்வமாகவும் கண்டிருக்கிறார்கள். அவரே முழுமுதற்பொருள் என்று பூஜை செய்தும் வாழ்ந்திருக்கிறார்கள். ஆக, ஐயன் அவரவர் தத்தம் அறிவின் வண்ணம் எப்படி எப்படி வணங்குகிறார்களோ அப்படி அப்படிக் காட்சி தந்து அவரவர் நிலைக்கேற்ப அருளி வந்திருக்கிறார் என்றே கருத முடிகின்றது.

பொதுவான வழக்கில் உள்ள கதையின் படி ‘நேபாளதேசத்து அரசனான பலஞனின் மகளான புஷ்கலையை அவனின் வேண்டு கோளின் படி ஐயன் மணந்தார் என்றும், வஞ்சி மாநகராண்ட பிஞ்ஞகன் என்ற அரசனின் வேண்டுகோளை ஏற்று அவனின் மகள் புஷ்கலையை ஐயன் ஏற்றார் என்றும்’ சொல்லப்படுகிறது. இவர்கள் ஸத்தியபூரணர் என்ற முனிகுமாரத்திகள் என்றும் சில நூல்கள் சொல்வதாக அறியக்கிடக்கிறது.

பி.என் பரசுராமன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?