×

நாளை என்பதில்லை நங்கநல்லூர் நரசிம்மனிடத்தில்

* நலம் தரும் நரசிம்மர் தரிசனம் 18

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமனின் தந்தையான அவருக்கு ஓர் ஆசை இருந்தது. அது பிரஹலாதனுக்காக தூணைப் பிளந்துகொண்டு வந்த ஸ்ரீ நரஸிம்ஹரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல். அதற்கான யாகம் நடத்திக் கொண்டிருந்தார். ஸ்ரீ நரஸிம்ஹ மஹா யக்ஞம். ஜமதக்னி நடத்திய யாகத்தில் எழுந்த அக்னி. தேவலோகம் வரை சென்றது. மெதுவாக ஸ்ரீ விஷ்ணு லோகத்துக்குள் எட்டிப் பார்த்து. அவ்வளவுதான் மறுகணம் உஷ்ணமான யாகத் தீயின் நடுவே உக்கிரமான கோலத்தோடு தோன்றினார் ஸ்ரீ நரசிம்மர்.

ஸ்ரீ  நரஸிம்மரைக் கண்டு பரவசப்பட்டார் ஜமதக்னி முனிவர். அதே சமயம் தான் தரிசித்த ஸ்ரீ நரஸிம்மரை பிறரும் தரிசிக்க வேண்டும் என்று எண்ணினார். அதையே வரமாகக் கேட்டார். அதோடு சினம் நீங்கிய சாந்த வடிவினராய் அருள்பாலிக்கும்படி வேண்டினார். அப்படியே ஆகட்டும் என்று ஆசியளித்த ஸ்ரீ  நரஸிம்மர் அமைதி தவழும் திருமுகத்தினராய் திருமகள் இணைந்திருக்க ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்மராய் இங்கே திருக்கோயில் கொண்டு எழுந்தருளினார். அன்றைய தட்சிண தீபாலயம் இன்றைய நங்கைநல்லூர் என்ற பெயரோடு விளங்குகிறது. நங்கை என்ற பெயர் ஸ்ரீ மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் திருத்தலம் என்ற பொருளில் நங்கைநல்லூர் என அழைக்கப்பட்டு நங்கநல்லூராக மருவியுள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் விளங்கிய ஸ்ரீ  லக்ஷ்மி நரஸிம்மரின் ஆலயம் காலப்போக்கில் பூமிக்குள் புதையுண்டது. பக்தனுக்காக தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட ஸ்ரீ நரசிம்மர் பல காலம் கடந்த பின்னர் பூமிக்குள்லிருந்து வெளிவந்து காட்சி தர மனம் கொண்டார். அதன் விளைவாக, தன்னைப் பூஜிக்கப் பயன்படுத்திய தூபக் கால், தீபத்தட்டு, மணி போன்றவற்றை பூமிக்குமேல் வெளிப்படுத்தினார். அதைக் கண்டவர்கள் அதிசயிக்க ஆய்வாளர்களோ எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை அவை என்றார்கள். அதைத் தொடர்ந்து அப்பகுதி கவனமாகத் தோண்டப்பட்டது. சங்கு சக்ரதாரியாக வெளிப்பட்ட மஹாவிஷ்ணுவின் விக்ரகம், சிதைந்த ஆலயம் இருந்ததை நிரூபிக்க, மிக விரைவாக எழுந்தது ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்ம  நவநீதகிருஷ்ணன் ஆலயம்.

எழில் மிக்க ஐந்து நிலை ராஜ கோபுரம் 55.5 அடி கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. கோபுரத்தின் முன்னுள்ள மண்டபத்தின் மேல் தெற்கே ஸ்ரீ  ரங்கநாதன் பள்ளி கொண்டிருக்க, வடக்கே காளியன் தலைமீது ஆடுகிறான் ஸ்ரீ கிருஷ்ணன். கிழக்கில் ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் அருட்பாலிக்க உள்ளே நுழையும் போதே ஆசி பெற்றுச் செல்வது போல் உணர முடிகிறது.  13.2.2008 அன்று ஸ்ரீ  அஹோபிலமடம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்வாமிகளால் இத்திருக்கோயிலின் திருத்தேர் மங்களாசாஸனம் ெசய்யப்பட்டது என்று குறிப்பிடத்தக்கது. இத்திருத்கோயிலின் கருவறை, ஸ்தம்ப (தூண்) வடிவில் காட்சியளிக்கிறது, தூணைப் பிளந்து கொண்டு வந்து ஸ்ரீ நரசிம்மனுக்கு தூண் வடிவிலே கருவறை அமைந்திருப்பது சிறப்பு, இங்குள்ள துவஜஸ்தம்பம் (கொடிமரம்) மற்றும் ஸ்ரீ நிவாஸப் பெருமாள் உற்சவமூர்த்தி விக்ரகங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரால் நன்கொடையாக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு திருக்கரங்களோடு விளங்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மேலிரு திருக்கரங்களால் சங்கு சக்கரம் தாங்கியவராக, வலதுகீழ் திருக்கரத்தில் அபய முத்திரையுடன் இடது கீழ் திருக்கரம் மடி மீது எழிலே உருவாக வீற்றிருக்கும் ஸ்ரீ மஹாலட்சுமியை அணைத்துக் கொண்டு திருவருட்பாலிக்கிறார். ஸ்ரீ  லக்ஷ்மீ நரசிம்மரை வணங்கிவிட்டு நகர்ந்தால் இடப்புறம் காட்சி தருகிறார் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், வலப்புறம் உள்ள சந்நதியில் ஸ்ரீ கோதண்டராமன் அருட்பாலிக்கிறார். மேலும், ஸ்ரீ நிவாஸப் பெருமாள், சஞ்சீவி ஆஞ்சநேயர், ஸ்ரீ  ஆழ்வார்கள், ஸ்ரீ  ஆசார்யர்கள் ஸ்ரீ ஆண்டாள் ஆகியோருக்கு தனித்தனி சந்நதிகள் அமைந்துள்ளன.

சீர்மிகு தேர் வடிவில் அமைந்த தனிச் சந்நதியில் காட்சி தருகிறார். ஸ்ரீ சக்கரத்தாழ்வார் (ஸ்ரீ  ஸூதர்சன பகவான்). இவரது சந்நதியில் அனைத்துமே சக்கர வடிவில் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பு. பதினாறு வகைச் செல்வங்களையும் குறிப்பிடும் வகையில் பதினாறு திருக்கரங்களில் பதினாறு வகையான ஆயுதங்களைத் தாங்கியிருக்கிறார் ஸ்ரீ ஸுதர்சனர், ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களிலும் அவரை விட்டுப் பிரியாமல் இருக்கும் பேறு பெற்றவர் ஸ்ரீ க்கரத்தாழ்வார் என்பதால் மிக உயர்ந்தவர்.

ஸ்ரீ  ஸுதர்சனரின் பின்புறம் வீற்றிருக்கிறார் ஸ்ரீ  யோக நரஸிம்மர், பஞ்சபூதங்களும் தனக்குக் கட்டுப்பட்டவை என உணர்த்தும் வழியாக பஞ்சமுக நாகத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். நான்கு வேதங்களும் நான்கு சக்கரங்களாக இவரது திருக்கரங்களில் திகழ்கின்றன. ஸ்ரீ  சுதர்சனரின் நான்கு வேதங்கள், பஞ்ச பூதங்கள், அஷ்டலக்ஷ்மிகள், எட்டு திக்பாலர்கள் என்று இவர்களை வழிபடுவோர்க்கு பதினாறு வகைச் செல்வங்கள் கிடைக்கின்றன.  சுதர்சனர் ஸ்ரீ யோக நரசிம்மர் சந்நதியைச் சுற்றி வந்து வணங்கிட துன்பங்கள் உருண்டோடி வாழ்வில் யோகம் வந்து சேரும் என்கின்றனர்.

பிராகாரத்தில் வலம் வரும்போது வெண்ணெய் பூசிய மேனியராய் காட்சி தருகிறார் அமெரிக்க ஆஞ்சநேயர். ஸ்ரீ ராமனுக்காக கடலைத் தாண்டிக் கடந்தவர் ஸ்ரீ ஹனுமான். இங்கு அமைந்துள்ள இவரை வணங்கி பலர் கடல் கடந்து வெளிநாடுகளில் வேலை கிடைத்துச் சென்றிருப்பதால் இவர் அமெரிக்க ஆஞ்சநேயராகி விட்டார். பூமிக்கடியிலிருந்து கிடைந்த ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பிரயோக சக்கரம் இங்கு பிரார்த்தனை சக்கரமாக அமைந்துள்ளது.  ஒவ்வொரு மஹாபிரதோஷ தினத்தன்றும் நடைபெறும் விசேஷ திருவாராதனம் சிறப்பு மிக்கதொன்றாகும். திருமாங்கல்யச் சரடு உத்ஸவம் எனும் திருக்கல்யாண உத்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 3-வது வெள்ளியன்று கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் எம்பெருமான் ஸ்ரீ  லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீ  மஹாலட்சுமியும் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றனர். தாயாருக்கு பத்தாயிரத்துக்கும் மேலான திருமாங்கல்யச் சரடுகள் சாத்தப்பட்டு பின்னர் சுமங்கலிகளுக்கும் கன்னியருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. மங்களங்கள் அனைத்துக்கும் அன்னையின் திருமாங்கல்ய சரடு காப்பாகக் கருதப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பன்று நடைபெறும் விசேஷ அலங்காரத் திருமஞ்சனத்தில் மஞ்சள் காப்பு, சர்க்கரைக்காப்பு, பழக்காப்பு மற்றும் சந்தனக் காப்பு சேவையில் எம் பெருமான் மூலவரை தரிசிப்பது கண் கொள்ளாக்காட்சி. இதில் சர்க்கரைக் காப்பிற்கு தனிச்சிறப்புண்டு. அதேபோல் ஆடி மாதம் நடைபெறும் திருப்பவித்ர உற்சவத்தில் பெருமாளுக்கு பவித்ரமாலை சமர்ப்பித்து அலங்காரம் செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.

மற்ற எந்த ஒரு ஆலயங்களும் செய்யாத ஓர் அற்புத சேவையை இந்த ஆலயம் செயல்படுத்தி வருகிறது, மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிமாதம் 10ம் தேதியன்று ரூ.200/- வீதமும், தீபாவளி மற்றும் பொங்கல் திருநாட்களில் ரூ.500/-ம் சிறப்பு உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது. இந்த மகத்தான கைங்கரியத்திற்கு உதவ நினைப்போர்கள் 96772 62183 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பிறந்த நாள் அல்லது திருமண நாள் பற்றி அர்ச்சகரிடம் தெரிவித்தால் ஜாதி, மத, இன பாகுபாடு இன்றி நரசிம்மரின் சந்நதியில் தக்க மரியாதை செய்யப்படுகிறது.

காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். சென்னை மடிப்பாக்கம் கூட்டு ரோட்டிலிருந்து மூவரசம்பேட்டை குளக்கரை வழியாக ஆலயத்திற்கு வரலாம்.
இத்தகைய திருத்தலத்தில் ஆண்டு முழுவதும் நடைபெறும் அனைத்து உற்சவங்களிலும் பங்கு கொண்டு பகவானின் கடாக்ஷத்திற்கு பாத்திரர்களாவோம்.

(தரிசனம் தொடரும்)
ந.பரணிகுமார்

Tags : Nanganallur Narasimman ,
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்