×

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ளது பிரசித்தி பெற்ற தாருகாவனேஸ்வரர் கோயில்.  மூலவர் -பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்). தாயார்- பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பாள்.  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

கோயில் வரலாறு:   

தாருகாவனம் எனப்படும் இப்பகுதியில் வசித்த ரிஷிகள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்று ஆணவமும், அவர்களது மனைவியர்கள் தாங்களே அனைவரிலும் அழகானவர்கள், கற்புக்கரசிகள் என்று அகங்காரமும் கொண்டிருந்தனர். சிவனும், மகாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர். சிவன் காண்போரைக் கவரும் பேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்திக் கொண்டார். மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி எனும் பெண்ணாக மாறினார். இருவரும் தாருகாவனம் வந்தனர். ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரை பின் தொடர்ந்தனர்.

சிவனது பேரழகைக்கண்டு வியந்த ரிஷிக்களின் மனைவிகள் தங்களது கற்பையும் மறந்து அவர் பின்னே சென்றனர். தங்கள் மனைவியர் பிச்சை எடுக்கும் ஒருவனுடன் சென்றதைக் கண்ட ரிஷிகள், வந்திருப்பது ஏதோ மாயக்காரன் என்றெண்ணி அவரை தாருகாவனத்தை விட்டுச் செல்லும்படி விரட்டினர். இருவரும் செல்ல மறுத்தனர். கோபம் கொண்ட ரிஷிகள் சிவனுடன் சண்டையிட்டனர். ஆனால் சிவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. சிவனை அழிக்க முடியாமல் கலங்கிய மகரிஷிகள் குழம்பி நின்றனர். சிவன் அவர்கள் முன்பு பேரழகனாக காட்சி தந்தார். உண்மை உணர்ந்த மகரிஷிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர்.

சிவன் அவர்களுக்கு குருவாக இருந்து மன்னித்தருளி, சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். பிட்சாடனராக வந்த சிவன் அர்த்த மண்டபத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார். முன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்றுகொண்டு சிவலிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும். பிரகாரத்திலும் பிட்சாடனார் சிலை இருக்கிறது. பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தபோது, சிவலிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமியும் “பராய்த்துறை நாதர்’ என்ற பெயர் பெற்றார். கருவறைக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில் தலவிருட்சம் பராய் மரத்தின் அடியிலும் ஒரு சிவலிங்கம் இருக்கிறது.

அம்பாள் பசும்பொன் மயிலம்மையும், நடராஜரும் தனிதனிச்சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அருளுகின்றனர். கருவறைக்கு பின்புறம் கோஷ்டத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். தெட்சிணாமூர்த்தி தனி மண்டபம் போன்ற அமைப்பில் கோஷ்டத்தில் காட்சி தருகிறார். ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ள விநாயகர் நின்றகோலத்தில் இருக்கிறார். இவரை பரளி விநாயகர் என்கின்றனர். புரட்டாசி மாதம் 18ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 66 வது தேவாரத்தலம் ஆகும். இக்கோயிலில் வைகாசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசியில் முதல் துலா முழுக்கு விழா நடைபெறும்.    
 
முதல் முழுக்கு:  இத்தலத்தின் அருகேயுள்ள காவிரி ஆறு “அகண்ட காவேரி’ என்கின்றனர். மயிலாடுதுறையில் ஐப்பசிமாதம் கடைசி நாளன்று “கடை முழுக்கு’ எனும் துலா ஸ்நானம் நடப்பதுபோல இங்கு ஐப்பசி மாதம் முதல் தேதியில் காவிரி கரையில் “முதல் முழுக்கு’ எனும் துலாஸ்நானம் நடக்கிறது. இந்நாளில் சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார். இந்நாளில் காவேரியில் நீராடி சுவாமியை வணங்கினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பராய்த்துறைநாதரை வணங்கினால் தோல் நோய், புற்றுநோய் நீங்கும், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும், அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?