கல்வி, ஞானம் அருளும் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர்

கடலூர் திருவந்திபுரம்

கடலூர் அருகே கெடிலம் நதிக்கரையில்  அமைந்துள்ள திருவந்திபுரம் அருள்மிகு தேவநாத சுவாமி திருக்கோயில் நடுநாட்டுத் திருப்பதிகள் இரண்டில் ஒன்றாகப் போற்றப்படுகிறது, ராமருக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடந்தபோது அனுமன் இமயமலையில் இருந்து  சஞ்சீவி மலையை சுமந்து வந்த போது அதிலிருந்து விழுந்த சிறு துண்டுதான் இந்த கோயில் எதிரே உள்ள ஔஷதகிரி மலை. இங்கு  கல்விக் கடவுள் என்று சொல்லப்படும் ஹயக்ரீவருக்கு தமிழகத்திலேயே முதன் முறையாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கல்வி, கேள்விகளுக்கு அன்னையான சரஸ்வதிக்கே கல்வியறிவைக் கொடுத்த ஞானத்தின் அதிபதியான ஹயக்கிரீவர்.

இக்கோயிலில் லஷ்மி ஹயக்கீரிவர் என அழைக்கப்படுகிறார். அவரைத் தரிசித்தால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அறிவு பெருகும், குடும்பக் கஷ்டம் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பிரளய காலத்தில்  உலகம் அழியும் சமயம், பிரம்மாவின் தூக்கத்தில் உதித்த அசுரர்கள், வேதங்களைப் பெண் குதிரை வடிவமாக்கி பிரளய வெள்ளத்தில் அதலபாதாளத்தில் ஒளித்து வைக்க, அதனை மீட்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் குதிரைமுக (பரிமுகம்) பெருமாள் (ஹயக்ரீவர்). வேதங்களை மீட்டு வந்ததால் ஞானத்துக்கு அதிபதியாக விளங்குகிறார் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வேதாந்த தேசிகன், தனக்கு ஞானம் வேண்டி இந்த ஔஷதகிரி மலையின் மேல் அமர்ந்து கருட பகவானை நோக்கி தவமிருந்தார்.

அப்போது கருட பகவான், ஞானத்துக்கு அதிபதியான ஹயக்ரீவர் மந்திரத்தை உபதேசித்து, ஹயக்ரீவரை வேண்டி பூஜிக்கச் சொன்னார். அதன்படியே பூஜித்த வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவரும் அருள்பாலித்தார். அதன் பிறகு ‘நவரத்ன மாலை’, ‘மும்மணிக் கோவை’ போன்ற பல தமிழ் நூல்களை எழுதினார் வேதாந்த தேசிகன். அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் தான் இந்த லக்ஷ்மி ஹயக்ரீவர் என்கிறது புராணம். குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமாக ஏதாவது தோஷம் இருந்தால் இங்குள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் கோயிலுக்கு வந்து பேனா, நோட்டு, தேன், ஏலக்காய் மாலை வாங்கி ஹயக்ரீவருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார்கள்.

பூஜை முடிந்ததும் அந்த தேனை குழந்தைகள் நாக்கில் கொஞ்சம் தடவிவிட்டு, ஒரு ஏலக்காயை வாயில் போட்டால் கல்வி தொடர்பான  தோஷமெல்லாம் நிவர்த்தியாகி விடும் என்பது ஐதீகம். கல்வி அறிவு வளரும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோயிலில் கொடுக்கிற லக்ஷ்மி தீர்த்தம் மிகவும் தெய்வீகமானது. மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு ஹயக்ரீவருக்கு ஆராதனை செய்து பக்தர்களுக்கு தீர்த்தமாக கொடுக்கப் படுகிறது.

வேதாந்த தேசிகர் ஆராதனை செய்த தீர்த்தம் அது. அந்த தீர்த்தத்தைப் பருகினால் உடலில் உள்ள சகல பிணிகளும் பறந்துவிடும். கல்வி, ஞானம் நம்மை தேடிவரும் என்று கோயில் பட்டாச்சாரியர்கள் கூறுகின்றனர். தினமும் ஆறு கால பூஜைகள் செய்யப் படுகின்றன. ஹயக்ரீவருக்கு திருவோண நட்சத்திரம் என்பதால், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஜைக்கு உகந்த நாள். இங்கு தினந்தோறும் காலை 8.30-ல் இருந்து 11.30 மணி வரையிலும், மாலை 4.30-ல் இருந்து 7.30 மணி வரையிலும் நடைதிறக்கப்பட்டிருக்கும்.

செல்வது எப்படி?

கடலூரிலிருந்து மேற்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், பண்ருட்டியிலிருந்து கிழக்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் திருவந்திபுரம்  லட்சுமி ஹயக்கிரீவர் கோயில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உண்டு.

Related Stories: