பன்னிரு சிவாலயங்களில் 6வது கோயில் கிராதமூர்த்தி. 5ம் கோயிலான ெபான்மனையில் இருந்து சித்திரங்கோடு குமாரபுரம், முட்டைக்காடு செல்லும் வழியில் சுமார் 12 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது. நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் தக்கலையில் இருந்து சுருளக்கோடு செல்லும் வழியில் முட்டைக்காடு சந்திப்பில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் தொடர்பான தலபுராணக் கதை மகாபாரதத்துடன் தொடர்பு உடையது. பாசுபதாஸ்திரம் வேண்டித் தவம் செய்த அர்ஜூனன் கிராதனாக (வேடன்) இருந்த சிவனுடன் மோதி தோற்ற நிகழ்வுடன் தொடர்புடையது.
முட்டைக்காடு சந்திப்பிலேயே இந்த கோயிலின் தோரணவாயில் உள்ளது. கோயில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது.உயரமான பெரிய மதில் வெளிப்பிரகாரம், திறந்த வெளி உள்பிரகாரம், கருவறையைச்சுற்றிய உட்பிரகாரம், முன்மண்டபம், நந்தி மண்டபம், திருச்சுற்று மண்டபம், விமானம் என்னும் அமைப்புடையது. கோயிலில் சென்று நீராடும் குளம் உண்டு. மூலவரான மகாதேவர் கிராதமூர்த்தி இருக்கும் கருவறை மூன்று சிறு மண்டபங்களைக்கொண்டது. கல்லால் ஆனது கருவறை விமானம் மூன்று அடுக்குகள் உடையது. விமானத்தில் தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி, விஷ்ணு நரசிம்மர், யோக நரசிம்மர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். மூலவர் லிங்க வடிவினர். ஆவுடையில் இருக்கிறார்.