×

சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்

* அருகன்குளம், நெல்லை

நெல்லை மாநகரில் தாமிரபரணி நதி பாய்ந்தோடும் அழகான பகுதிகளில் ஒன்று  அருகன்குளம். இவ்வூரில் ஜடாயு மோட்சம் கொடுத்த ஜடாயு துறை மண்டபத்தின்  அருகே அமைந்துள்ள திருத்தலம் தான் சோமசுந்தர விநாயகப்பெருமான் திருத்தலம். இயற்கையோடு அமையப் பெற்ற இத்திருத்தலத்தில் ஒரு அரச மரத்தடியில் அமர்ந்து அருட் பாலிக்கிறார் சோம சுந்தர விநாயகர்.கோயில் சிலைகள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ சேதமானால் அந்த சிலைகளை கோயிலில் வைத்து பூஜை செய்வதில்லை. அதனை ஆற்றிலோ, குளத்திலோ விட்டுவிடுவார்கள்.

அந்த வகையில் நெல்லை டவுனில் உள்ள ஒரு விநாயகர் சிலை இயற்கை சீற்றத்தால் சேதப்படவே  தனை கோயிலில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்பதற்காக, அப்பகுதி மக்கள் அந்தச்சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்து அருகன்குளம் பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றின் கசத்திற்குள் போட்டு விட்டனர்.(கசம் - ஆழமான பகுதி) நாட்கள் சில நகர்ந்த நிலையில் அந்த ஆற்றின்கரையின் இருக்கும் பிண்ட ராமர் கோயிலுக்கு வழக்கமாக அதிகாலை நீராடிவிட்டு தரிசனம் செய்ய வரும் சோமசுந்தர சிவாச்சாரியார், கனவில் சென்ற விநாயகப்பெருமான்,‘‘சோமசுந்தரம் நான் ஆற்றுக்குள்ளே இருக்கேன், என்னை எடுத்து வெளியே கொண்டு வந்து ஆற்றங்கரையில் வைத்து என்னை பூஜை செய்து வா, உன்னையும், என்னை பூஜிக்கும் யாவரையும் நல்ல முறையில் வைப்பேன். என்று கூறினார்.

அதிகாலை 5 மணிக்கு அவர் கண்ட கனவானது அவரைத் திடுக்கிட வைத்தது. அன்று காலையில் வழக்கம்போல் தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு கரையில் நின்று சிவனை வணங்கி நின்றார். அந்நேரம் ஓர் அசரீரி ஒலித்தது.‘‘சோமசுந்தரம் நான் உள்ளே தானப்பா இருக்கிறேன்’’ என்றது.மனம் நொந்த சோமசுந்தரர் ‘‘நீர் உள்ளே இருப்பதை நான் எவ்வாறு அறிவேன்’’ என்று கூறினார்.உடனே ...? ‘‘நீ ஆற்றுக்குள் இறங்கி வா.!’’‘‘நான் மேலே வந்து உனக்கு காட்சி கொடுக்கிறேன்’’ என்று கூறினார் விநாயகர்.சோமசுந்தரர் ஊருக்கு சென்று மக்களை திரட்டிக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தார்.இவர்கள் அனைவரும் ஆற்றுக்குள் இறங்க விநாயகர் சிலையானதுஇருக்குமிடத்தின் சூழலை காண்பித்து கொடுத்தது.வானத்தின் மேல் கருடன் வட்டமிட விநாயகர் மேலெழும்பி வந்தார்.

தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து விநாயகரை கரையில் வைத்து பார்த்தபோது விநாயகர் சிலையானது பின்னப்பட்டிருந்தது (சேதப்படுத்தப்பட்டிருந்தது) ... அவருடன் வந்த ஊர்மக்கள் சிலையைப் பார்த்ததும் ஏளனமாக  பேசத் தொடங்கினர்.மனம் நொந்தார் சோமசுந்தரர். ‘‘இறைவா, இது உன் சோதனையா’’ என்று அழுதார் அந்தத் தாமிரபரணி நதிக்கரையில் ...அவர் அருகில் இருந்த அவரது மனைவியார்.சுவாமி நமக்கு இதேபோல் ஊனமுற்ற ஒரு குழந்தை பிறந்தால் நாம் என்ன செய்வோம் அதை அரவணைப்போடு வளர்க்கத்தானே செய்வோம். அதேபோல் இந்த சிலையை வைத்து நாம் வணங்குவோம் என்று கூறினார்.உடனேயே சோமசுந்தரர் ஆற்றங்கரையில் ஒரு அரச மரத்தடியில்  அந்த விநாயகரை பிரதிஷ்டை செய்தார்.சோமசுந்தரர் கையினால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவ்விநாயகர் இன்று சோம சுந்தர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.போக்குவரத்து அதிகமாக இல்லாத காலகட்டத்தில் ஆற்றைக் கடந்துதான் ...பாளையங்கோட்டை க்கு செல்ல வேண்டும். அருகன்குளத்தைச் சேர்ந்த ஒருவர் பாளையங்கோட்டையில் இருந்து. அருகன் குளம் வரும்போது அவர் கையில் நிறைய பணம் இருந்தது அதை கண்ட திருடர்கள் அவரை கொன்று விட்டு அந்த பணத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று நினைத்தனர்.

கயவர்கள் விரட்ட மனம் பதறிய அந்த நபர் ஆற்றில் இறங்கினார் ஆற்றுக்குள் இறங்கியவுடன் அவர் கண்ணில் தென்பட்டார் சோமசுந்தர விநாயகர்.‘‘ஐந்து கரத்தோனே என்னை ஆட்கொள்ளப்பா’’ என்ற அபயக் குரல் கொடுத்தார்.கஜமுக நாதன் மதயானை ரூபம் கொண்டு அந்தத்திருடர்களை பயமுறுத்த. திருடர்கள் அஞ்சி ஓடினர்.ஆற்றின் படித்துறையிலிருந்து வெளியே வந்த அந்த நபர் தன் கையில் இருந்த பணத்தை விநாயகர் முன்வைத்தார். உடனே அவ்வழியே வந்த சிறுவன், அந்த நபரை நோக்கி  மழையில் நனைந்து இருக்கேன் எனக்கு ஒரு கொட்டகை போட்டு கொடுப்பா என்று கூறினான். சில நிமிடங்களில் அச்சிறுவன் அவ்விடம் விட்டு அகன்றான்.சிறுவன் வடிவில் சோமசுந்தரம் விநாயகர் தான் வந்து கூறுகிறார் என்று எண்ணிய அந்த நபர் விநாயகப்பெருமானுக்கு ஒரு கொட்டகை போட்டு கொடுத்தார்.இக்கோயிலில் அதிகமாக நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தாமிரபரணி புஷ்கர விழாவின்போது இக்கோயிலில் தாமிரபரணி அன்னை, அகத்திய முனிவர் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.நெல்லையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத் திருக்கோயில்.நெல்லை சந்திப்பில் இருந்தும் தாழையூத்து சங்கர்நகரில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளன.

- ச.சுடலை ரத்தினம்
படங்கள்: ப.முத்துராமலிங்கம்.

Tags : Somasundara Vinayakar ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?