×

குழந்தைச் செல்வம் அருளும் ஸ்ரீ அரங்கநாதன்

பண்ருட்டி திருவதிகை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை ஸ்ரீ அரங்கநாதன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. குரும்புக்கோட்டை மன்னன் என்ற பட்டம் பெயர் கொண்ட 2ம் குலோத்துங்கன் திருவரங்கத்தில் பெண் எடுக்க சென்றபோது இரு வேளையும் திருஅரங்கனை தரிசித்த திருமண பெண்ணுக்கு திருமணத்திற்கு பின் அப்பெருமானை தரிசிப்பது எப்படி என பெண் வீட்டார் கேட்க குலோத்துங்கனும் கவலை வேண்டாம் ஸ்ரீ ரங்கரைப் போல் அதே மாதிரி கோயிலை அதிகாபுரியில் நிறுவிய பின் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார். அவ்வாக்கின்படி காவிரி கொள்ளிடம் இடையே அரங்கன் இருப்பது போல் திருவதிகையில் கருடன் நதி, தென்பெண்ணை ஆறுகள் நடுவில் அதிகாபுரியில் கோயிலை அமைத்தார். கும்பாபிஷேகம் நடந்த பின்பு 2ம் குலோத்துங்கன் திருமணம் நடந்ததாக வரலாறு.அரங்கன் ஆலயம் தோன்றுவதற்கு முன் இவ்விடத்தில் ஐயனார் சிலை இருந்ததாகவும் அவர் காவல் தெய்வமாக வணங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதை நினைவு கூறும் வகையில் மூலவர் சன்னதி மகா மண்டபத்தின் முகப்பில் ஐயனார் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முந்தையே புராதனக் கோவில் இது.

மூலவர் ஸ்ரீ அரங்கன், வார்த்தைகளால் எட்டமுடியாத நெடுமால் இங்கு பாம்பணையில் பள்ளிகொண்டவநாய் அனந்தசயன விமானத்தில் கிழக்கே திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கிறார். சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி பிருகுமஹரிக்ஷி தவம் செய்யும் நிலையில் உள்ளனர்.
தாயார் அரங்க நாயகி, (அமிர்தவல்லி, அதிகவல்லி) என பல திருநாமங்களுடன் தனிக்கோயிலில் எழுந்தருளி உள்ளார். தாயார் மூலவர் 8அடி உயரத்துடன் பிரமண்டமாய் எழுந்தருளி உள்ளார். பக்தர்கள் காணிக்கை யாக அஷ்டோத்திரம் அர்ச்சனை செய்தல், புது மலர்கள் சமர்ப்பித்தல், வஸ்திரங்கள் சாத்துதல், பால் பாயசம் அமுது செய்தல் போன்றவற்றை செய்கின்றனர். ஆண்டாள் சன்னதியில் ஆண்டாள் பல்லவர் கால புடைப்பு சித்திரமாய் காட்சியளிக்கிறார். ராமர் சன்னதி மிகவும் பழமையானது. இங்குள்ள சிற்பங்கள் உயிரோவியமாய் காட்சி அளிக்கின்றன. இங்கு மூலவ, உற்சவ மூர்த்திகளாய் ராமர் எழுந்தருளியுள்ளார்.

சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வாரின் ஒருபுறம் சுதர்சன ஆழ்வாரும், மறுபுறம் யோக நரசிம்மரும் சேவை சாதிக்கின்றனர். எதிரில் திருக்குளமும், அனுமார் சன்னதியும் உள்ளன. மாதாந்திர கிருத்திகையில் சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் சிறப்பாக  நடைபெறுகிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரத்தின்போது மூலவருக்கு (அவதார நட்சத்திரம்) திருமஞ்சனம் நடைபெறுகிறது.

கோயிலின் சிறப்புகள்: குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ அரங்க நாயகியிடம் சகஸ்ரநாம அர்ச்சனையும், பால்பாயசமும் அமுது செய்விப்பதாய் வேண்டி அவ்வாறே பிள்ளை பேற்றை பெற்றயுடன் தங்கள் நேர்த்தி கடனை முடிக்கின்றனர். தாயாரை 108 பிரதட்சனம் செய்கின்றனர். புது வஸ்திரம் சமர்ப்பிக்கின்றனர். ஸ்ரீ வேதாந்த தேசிகரும் ஆறாவமுதம் பொதிந்த கோயில் என்று சிறப்பித்துள்ளார். காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

செல்வது எப்படி?

கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் பண்ருட்டிக்கு முன்னதாக 3 கிலோ மீட்டர் தொலைவில் திருவதிகை அமைந்துள்ளது. பேருந்து வசதி உண்டு.

Tags : Sri Aranganathan ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?