ஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள் 7 : ஆபத்து காத்த செல்வி

கீழப்பாவூர், நெல்லை

   

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் கிராமத்தில் அருட் பாலிக்கிறாள் ஆபத்து காத்த அம்மன். கீழப்பாவூர் கிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். ஊருக்கு நாலா புறங்களிலும் உள்ள குளங்களில் உள்ள தண்ணீரை நம்பி தான் அப்பகுதி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் விடாத பெய்த கனமழையின் காரணமாக கீழப்பாவூர் பெரிய குளம் நிரம்பியது.

குளத்தின் கரையையொட்டியுள்ள விவசாய நிலங்கள் ஊர் பண்ணையாருக்கு சொந்தமானவை. பண்ணையாரின் பணியாளர்களில் ஒருவரான முத்துக்காளை காலை சூரிய உதயத்தைக் கண்டதும், விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோளில் மண்வெட்டியுடன் நிலம் நோக்கிச் சென்றான். மதியம் உணவுக்கு பின் வானம் மேகமூட்டமாக இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசியது. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் வரும் என்பார்கள் உழைப்பவனுக்கு வராதா என்ன? முத்துக்காளைக்கும் தூக்கம் வந்தது. தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து வயலோரம் நின்ற ஆலமரத்தின் அடியில் விரித்து படுத்து உறங்கலானான். மழை பெய்யலானது. பதட்டத்துடன் எழுந்த முத்துக்காளை மண்வெட்டியுடன் குளம் நோக்கி சென்றான். குளத்தின் கரையின் தென்புறத்து மடையை திறந்து விட்டான். அப்போது குளத்தின் ஒரு கரை பகுதி உடைந்து தண்ணீர் வெளியேறத் துவங்கியது.

முத்துக்காளை பதறியபடி கடவுளை வேண்டிக்கொண்டே தனது பணியில் அதிவேகமாக ஈடுபட்டான். அப்போது பச்சை நிறத்தில் கண்டாங்கி சேலைக்கட்டி நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் அந்த இடம் வந்தாள். ‘‘என்னப்பா, கொட்டும் மழையில வேலை செய்யுறியே, உன் உடம்புக்கு ஏதாவது சீக்கு வந்திடப்போகுதுப்பா, போய் ஒதுங்கி நின்னு’’  என்றாள்.

‘‘நான், என் உடம்ப பார்த்தா, ஊருக்குள்ள எத்தனையோ சாதி சனங்க இருக்காவ, அவங்க நிலைமை என்னவாகும். விதைச்ச நெல்லும், முளைச்ச பயிரும் வீணா போகும். எனக்கும், என் குடும்பத்துக்கும் படியளக்கிற எசமான் எம் மேல நம்பிக்கை வச்சிருக்காரு. அந்த நம்பிக்கை மண்ணா போகும் ஆத்தா, அதனால என்னால ஏலுற வரைக்கும் குளம் உட படாம அடைக்கணும். இந்த வழியா யாராச்சும் ஆடு, மாடு பத்திட்டு போன அவிங்ககிட்ட சங்கதிய சொல்லி, ஊருலயிருந்து வூட்டுக்கு ஒரு ஆம்பிளய மம்பட்டியோட வரச்சொல்லுனும்.’’ என்றான்.

‘‘சரிப்பா, நான் குளத்த பாத்துக்கிறேன். நீ போய் ஊருலயிருந்து ஆளுங்கள கூட்டியிட்டு வா,’’ என்று அந்த பெண் கூறியதும். கொட்டும் மழையிலும் சத்தமாக சிரித்தான் முத்துக்காளை.

‘‘ஏம்பா, சிரிக்கிற,’’

‘‘பின்ன, என்னாத்தா, உங்களால எப்படி ஆத்தா முடியும்.’’

‘‘இந்தா, இப்ப பாரு’’ என்ற படி தண்ணீர் உடைப்பு எடுத்து வெளியே வந்துக்கொண்டிருந்த பகுதியில் அந்த பெண், தனது வலது கால் பாதத்தை வைத்தாள். தண்ணீர் வெளியேறுவது நின்றது. குளத்தில் கரை முட்ட தண்ணீர் நிரம்பியிருந்த, நேரம் அதிகமாக அதிகமாக மழையும் வேகமாக பெய்து கொண்டிருந்தது. குளத்து உடைப்பு நின்றதை கண்டு வியப்பில் ஆழ்ந்த முத்துக்காளைக்கு ஆச்சரியம் ஒரு புறம் இருந்தாலும், ஒரு புறம் பெரும் மழையோ, அல்லது இடி, மின்னலோ வந்து, அதகண்டு பயந்து இந்த பொம்பள, இங்கே இருந்து போயிட்டா குளம் உடைஞ்சுடுமோ என்ற அச்சமும் அவனிடம் எழுந்தது.

அந்த நேரம் அந்த பெண் பேசினாள்.

‘‘முத்துக்காளை, நீ ஊருக்குள்ள போய் ஆளுங்கள கூட்டிட்டு வா, நான் குளத்து கரை உடையாம பார்த்துக்கிறேன்.’’ என்றாள். அப்போது முத்துக்காளை கேட்டான். ‘‘அம்மா, நான் உங்கள, என்ன பெத்த ஆத்தாவாகவும், அதுக்கும் மேல நான் கும்பிடுற சாமியாவும் நினைச்சி கேக்கிறேன். நான் வரும் முன்னாடி, இங்கே இருந்து போயிட மாட்டீங்களே,’’

‘‘ம்…ம்…ம்ஹூம் போக மாட்டேன்’’ என்றாள் அந்த பெண்.

‘‘அப்படிண்ணா, நீங்க சத்தியம் பண்ணுங்க, ’’

‘‘சத்தியமா நான் போக மாட்டேன்.’’

‘‘என் வல கையில அடிச்சி சத்தியம் செய்யு ஆத்தா.’’

என்றவன் தொடர்ந்தான்,

‘‘நான் சாதியில குறைஞ்சவன்னு நினைச்சி, கையில அடிச்சி சத்தியம் பண்ண தயங்குறீங்களோ, சரி ஆத்தா உன்னை நம்பி தான் போறேன்’’ என்றான்.

அப்போது அந்த பெண்,

‘‘நில்லு, உன் வலது கையை நீட்டு,’’ என்று கூறியபடி முத்துக்காளையின் வலது கையில் அடித்து,

‘‘நீ வரும் வரை இந்த இடத்தை விட்டு நான் நகரவும் மாட்டேன். குளம் உடைய விடவும் மாட்டேன்.’’  என்று சத்தியம்

செய்தாள்.

சத்தியத்தை வாங்கிய முத்துக்காளை வேகமாக விரைந்தான் ஊருக்குள். பண்ணையார் வீட்டுக்கு வந்தான்.

‘‘ஐயா, ஐயா என்று கத்தியபடியே

ஓடி வந்தான்.’’

மாலை பொழுது, மழையின் காரணமாக அந்தி கருக்கல் போல இருளத் தொடங்கியது. முத்துக்காளையின் குரலுக்கு பதில் கொடுத்தார் பண்ணையார், ‘‘ஏலே, காள, வண்டி பெறைக்கு வா, இங்க தான் இருக்கேன்’’ என்றார் பண்ணையார். வண்டி பெறைக்குள் போன முத்துக்காளையிடம் ஒரு துணியை கொடுத்து,

‘‘ஏலே, துண்ட புடி, முதல்ல தலையை துவத்து,’’ சிறிது நேரத்திற்கு பின்னர்.

‘‘ம்.. இப்ப சொல்லுலே, என்ன நடந்தது,’’ நடந்ததை கூறினான்.

அப்படியா என்றார் பண்ணையார்,

‘‘ஆமாங்க, எசமான், நான் போய் ஆட்கள திரட்டிட்டு குளத்துக்கு போறேன்.’’ என்ற முத்துக்காளையை  ‘‘ஏலே, காளயா, நீ ஆளயும் திரட்ட வேண்டாம், குளத்துக்கும் போக வேண்டாம்.’’

‘‘என்ன எசமான் சொல்லுதியே,’’

‘‘ஆமாலே, பத்து ஆம்புளங்க ஒண்ணா சேர்ந்தா கூட பண்ண முடியாத வேலய, ஒத்த பொம்பளயா நிண்ணு செய்யுறாங்கண்ணா, அது சாதாரண பொம்பளயா இருக்க முடியாது.

ஏதோ தெய்வ சக்தி தான். அங்கே இருக்கு. நீ போகும் வரைக்கும் அந்த அம்மா அங்கிருந்து போக மாட்டாங்கள்ளே,’’

‘‘ஆமாங்க எசமான். என் உள்ளங்க கையில அடிச்சி சத்தியம் பண்ணியிருக்காக.’’ என்றான் முத்துக்காளை.

‘‘அப்படிண்ணா, அந்த அம்மா அங்கிருந்து போகமாட்டாங்க, குளத்தையும் உடைய விடமாட்டாங்க. நாளைக்கு வௌ்ளன போய் பார்ப்போம். இத யாருகிட்டயும் சொல்லிட்டு திரியாத, பேசாமா, வூட்ல உள்ளத திண்ணுகிட்டு, படுத்துறங்கு, என்ன? ’’ என்று கூறிய பண்ணையாரிடம்

‘‘சரிங்க எசமான்’’ என்று பதில் கூறியபடி அங்கிருந்து வெளியேறினான் முத்துக்காளை.

மறுநாள் காலையில் அங்கு போனபோது குளத்தின் கரையில் பெண்ணின் பாத சுவடு பெரிய அளவில் இருந்தது. குளம் உடைபடாமல் வெள்ளத்தால் ஏற்பட இருந்த பேராபத்தில் இருந்து நம்மை காத்தது அம்மன் தான் என்று கருதிய பண்ணையார் மற்றும் அவ்வூர் மக்கள், அவ்விடத்தில் குளத்தின் அருகே வயல் வெளிகளுக்கு இடையே செம்மண்ணால் ஆளுயரத்திற்கு ஓர் அறையை எழுப்பி, அதனுள் அம்மன் சிலை வைத்து, பனை ஓலையால் கூரை வேய்த்து கோயிலை உருவாக்கினர். ஆபத்தில் இருந்து காத்ததால் ஆபத்து காத்த செல்வி என்றும் ஆபத்து காத்த அம்மன் என்றும் பெயரிட்டு அந்த அம்மனை வணங்கி வந்தனர்.

பிற்காலத்தின் பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தின் போது, தென்காசி சிற்றரசனின் மகளை அருகே உள்ள சிற்றரசனுக்கு மண முடித்துக் கொடுத்திருந்தார். ஒரு நாள் இளவரசிக்கும், அவரது மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலில் யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறிய இளவரசி தன்னந்தனியாக கால்நடையாய் நடந்து தந்தை வீடு செல்ல புறப்பட்டாள். கீழப்பாவூர் அருகே வரும்போது மூன்று கள்வர்கள் இளவரசியிடம் நகையை பறிக்க முயன்றனர். அவர்களுக்கு அஞ்சி இளவரசி ஆபத்து காத்த அம்மன் சிலை முன்னே நின்று, அம்மா, நீ சக்தியுள்ள தெய்வம் என்றால் என்னை இந்த ஆபத்தில் இருந்து காப்பாத்து என்று மண்டியிட்டு அம்மனின் பாதம் தொட்டு கதறினாள்.

அப்போது ஒரு கள்ளன் ஓடி வந்து, இளவரசியை வாளால் வெட்ட முயன்றான். இளவரசி எழுந்து சிலைக்கு பின்னால் போய் கீழே அமர்ந்து ஒளிந்தாள். மீண்டும் கள்ளன் ஒருவன் வெட்ட, சிலை மீது கீறல் விழுந்தது. அதே நேரம் கள்ளன், கை, கால் செயலிழந்து மயக்கமுற்று விழுந்தான். மற்ற இரண்டு கள்வர்களும் அதனைக்கண்டு ஓடினர். அவர்கள் ஓடுவதைக்கண்ட இளவரசி பயபக்தியுடன் அம்மா, என்று தன்னையறியாமல் கத்தினாள். இதனிடையே இளவரசியின் கணவரான சிற்றரசன், தனது வீரர்கள் சகிதமாக மனைவியை தேடி வந்தான். இளவரசியின் சத்தம் கேட்டு அவ்விடம் வந்தான். அம்மனின் சக்தியை எடுத்துக்கூறினாள் இளவரசி.

ஆபத்தில் இருந்து மகளை காப்பாற்றிய அம்மனுக்கு தென்காசி பாண்டிய மன்னன், புது சிலையும் அமைத்து கோயிலும் கட்டியதாக கூறப்படுகிறது. மூலவர் ஆபத்து காத்த செல்வி, கோயிலின் வாசல், வடக்கு பார்த்து வாசல் உள்ளமையால் அம்மன் வடக்கு வா செல்வி என்றும் அழைக்கப்படுகிறாள். இக்கோயிலில் விநாயகர், கருப்பசாமி, சப்த கன்னியர்கள் அருட்பாலிக்கின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இக்கோயிலில் கொடை விழா நடைபெறுகிறது. இக்கோயில் கீழப்பாவூர் பஸ் நிலையத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவில் வயல்களுக்கு நடுவே, பெரியகுளம் அருகே அமைந்துள்ளது.

படங்கள்: ரா. பரமகுமார்

Related Stories: