நல்ல குணங்களை கொண்ட ஆண், கணவராக கிடைக்க வேண்டி பெண்கள் அனுஷ்டிக்கும் நந்தா விரதம்

ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. திருமணம் செய்யும் வயதுகளில் இருக்கும் பல ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் தங்களின் எதிர்கால வாழ்க்கை துணை பற்றிய பல எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் பலருக்கும் அவர்களுக்கு வாய்த்த வாழ்க்கை துணை எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்கும் போது ஏமாற்றம் அடைகின்றனர். தங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவதற்கு சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருளை பெற இருக்க வேண்டிய “நந்தா விரதம்” குறித்து முன்னோர்கள் கூறியுள்ளனர். நந்தா விரதம் இருக்கும் முறை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

பூமியில் மனித குலத்தில் பிறந்த பார்வதி தேவி சிவ பெருமானையே தனது கணவராக அடைய விரும்பி, இந்த நந்தா விரதத்தை அனுஷ்டித்து, தன் விருப்பம் போலவே சிவனையே கணவராக அடைந்தாள். இந்த நந்தா விரதம் பொதுவாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நல்ல குணங்களை கொண்ட ஆண் கணவராக கிடைக்க வேண்டி மேற்கொள்ளும் விரதமாகும். ஆனால் ஆண்களும் தங்களின் மனதிற்கினிய பெண்ணை மனைவியாக அடைய இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவன் மற்றும் பார்வதி தேவியை வணங்குவதால் விரும்பிய பலன் கிடைக்கும்.இந்த நந்த விரதத்தை அனுஷ்டிப்பதற்கு சிறந்த காலமாக இருப்பது “பங்குனி மாத வளர்பிறை சப்தமி” தினமாகும். இத்தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட வேண்டும். பின்பு அதிகாலை சூரியனை நமஸ்கரித்து “ஓம் நம சிவாய” மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் மந்திர உரு ஜெபிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் வெறும் நீர் தவிர வேறு எவற்றையும் உண்ணாமலும், அருந்தாமலும் விரதம் இருப்பது நல்லது.

அன்றைய தினம் காலையில் வீட்டிலேயே ஏதேனும் ஒரு இனிப்பு உணவை தயாரித்து, பூஜையறையில் சிவபெருமானுக்கு நிவேதனமாக வைத்து வணங்க வேண்டும். பின்பு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வெள்ளை நிற மலர்கள் மற்றும் வில்வ இலைகள் சிவபெருமானுக்கு சமர்ப்பித்து வணங்க வேண்டும். பின்பு வீட்டிற்கு திரும்பி காலை முதல் மாலை வரை சிவமந்திரங்கள் ஜெபம் மற்றும் சிவபுராணம் படித்தால் என சிவசிந்தனையிலேயே கழிக்க வேண்டும். பிறகு மாலையிலும் சிவன் கோயிலுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும். நந்தா விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் இவ்விரதம் இருந்து மாலை கோயிலில் சிவபெருமானை வழிபட்ட பின்பு சிவனுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தை பிரசாதமாக சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த விரதத்தின் முழுமையான பலனை பெறுவதற்கு விரதம் மேற்கொண்ட பிறகு வரும் ஏதேனும் ஒரு நாளில் உங்களின் பொருளதார சக்திக்கு ஏற்ப ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் யாசகர்களுக்கு அன்னதானம் அளிக்க விரதத்தின் பலன் உங்களுக்கு உடனடியாக கிடைக்கும்.

Related Stories: