மனநலம் காப்பார் மத்தளேஸ்வரர்

மேலச்சேரி, விழுப்புரம்

அல்லல் போக்கும் அரன் குடி கொண்டுள்ள எண்ணற்றத் தலங்களில் ஒன்று மேலச்சேரி! மலைப்பாங்கான இவ்விடத்தில் மிருதங்கப் பருவதம் என்னும் மத்தள மலையின் நடுவே குடையப்பட்டு, இச்சிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது! மத்தளம் போன்ற இம்மலையின் நடுவே குடைந்து உருவாக்கப்பட்டதால் இது ஒரு அதியற்புதமானக் குடவறைக் கோயிலாகும்! மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்று அமைக்கப்பட்டதே இந்தக் குடவறைக் கோயிலாகும்! இந்த மத்தள மலையின் மையத்தில் இறைவன் எழுந்து அருள்பாலிப்பதால் இவருக்கு மத்தளேஸ்வரர் என்கிற பெயர் ஏற்பட்டது!

தமிழகத்தில் எண்ணற்றக் குடைவறைக் கோயில்களை உருவாக்கியப் பெருமை ‘‘விசித்திர சித்தன்’’ என்று வர்ணிக்கப்பட்ட முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனுக்கு உண்டு! கி.பி. 7ம் நூற்றாண்டில் தொண்டைநாட்டின் பெரும் பகுதியை ஆட்சி புரிந்தவன் இவன்! இவனது வம்சா வழியில் வந்த சிங்கபுரத்து சந்திராதித்யன் என்பவன் இங்கு குடைவறைக் கோயிலைக் கட்டியுள்ளான். இதற்கு ‘‘ சிகாரி பல்லவேஸ்வரம்’’ என்று பெயரிட்டுள்ளான்.

இம்மன்னனது கிரந்த எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு ஒன்றும் இங்கு காணப்படுகிறது. இச்சிவாலயத்தோடு இத்தலத்திற்கு அருகில் இருக்கும் சிங்கவரம் ரங்கநாதர் ஆலயத்தையும் இம்மன்னன் குடைவறைக் கோயிலாக அமைத்துள்ளான் என்பது போற்றுதலுக்குரியது. இவ்விரு குடைவறை ஆலயங்களும் சைவ - வைணவ ஒற்றுமையைச் செவ்வனே பறைசாற்றுகின்றது. இவ்விரு ஆலயங்களும் பல்லவக் கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

சிம்மபுரம் என்றழைக்கப்பட்ட செஞ்சிமலை மீது கோட்டை அமைத்து, செஞ்சியை ஆண்ட குறுநில மன்னனான தேசிங்கு ராஜா, இப்பகுதியை கோயில் கொண்டு அருளும் தனது குல தெய்வமான சிங்கவரம் ரங்கநாதரோடு, இம்மேலச்சேரி மத்தளேஸ்வரரையும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதோடு, திருப்பணிகள் பலவும் இங்கு செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!ஊரில் வடபால் உள்ளது சன்னியாசி ஏரி. இதன் நடுவே இயற்கையாக அமைந்துள்ளது மிருதங்க பர்வதம் என்னும் மத்தள மலை! மேற்கு பார்த்த இம்மலையின் மேற்புறம் முருகன் ஆலயம் ஒன்று உள்ளது. கீழ்புறம் மேற்கு முகமாகக் கலைப் பொக்கிஷமாகத் திகழ்கிறது  மத்தளேஸ்வரர் ஆலயம். ஆலயத்தின் வெளியே ஏரியில் நீராழி மண்டபம் உள்ளது. முன்புறம் பிற்காலத்தில் கட்டப்பெற்ற கல் மண்டபம் ஒன்றும் காணப்படுகின்றது. சந்நதிக்கு நேராக 18 அடி உயரம் கொண்ட கல்லால் ஆன தீபஸ்தம்பம் உள்ளது.

சதங்கைகள் கோர்த்த மாலையணிந்து, கால்களை மடக்கி, அமர்ந்தபடி கம்பீரமாக காட்சியளிக்கின்றார் நந்திதேவர்! இவரின் கீழே சிவலிங்கம் ஒன்றும் அரிதாகக் காணப்பெறுகின்றது!மகா மண்டபம், இடை மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது இந்தக் குடைவறைக் கோயில்.

கருவறையில்... 5 அடி உயரம் கொண்ட பாணமும், 7 அடி, சுற்றளவில், எட்டு கோணத்தில் ஆன ஆவுடையாரும் கொண்ட அற்புத லிங்கத் திருமேனியாக அருட்காட்சி அளிக்கின்றார்  மத்தளேஸ்வரர்! கம்பீரத் தோற்றம் கண்டு மனம் பூரிப்படைகின்றது. லிங்கத்தின் மேல் கூரையில் தாமரை மலர் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.இடை மண்டபத்தின் வலப்புறம் பாறையில் அழகிய புடைப்புச் சிற்பமாக அருள்மழைப் பொழிகின்றாள் அன்னை  பிரகன் நாயகி! தலையில் நீண்ட கிரீடம், காதுகளில் மகர குண்டலங்கள், வலது கரத்தில் தாமரை மலரேந்தி எழில் சிந்துகின்றாள்!

இடப்புறம் வள்ளி- தெய்வானையுடன்  ஷண்முகர் வீற்றருள்கின்றார். அருகே பலகைக் கல்லில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து, அருள்புரியும் தல கணபதி கவினுற வடிக்கப்பட்டுள்ளார்!அதோடு  பைரவர்,  சண்டிகேஸ்வரர், விஷ்ணு பாதம் ஆகிய சிலாரூபங்களும் இங்கு காணப்

பெறுகின்றது.!கிரந்த எழுத்திலான கல்வெட்டுகளும் சுவர்களில் காணக் கிடைக்கின்றன! அற்புதமான ஆலயம்! எனினும் காலக் கரங்களால் சிதைக்கப்பட்டுள்ளது. உடன் திருப்பணி செய்யவேண்டிய அவசிய நிலையில் உள்ளது.ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று சிறப்பு அபிஷேக - அலங்காரங்கள் நடைபெறுகின்றன. மாசி சிவராத்திரியும் விசேடமாகக் கொண்டாடப்படுகின்ற பிரதி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியில் கிரிவலமும் சிறப்புற அனுஷ்டிக்கப்படுகின்றது!

இங்கு ஸ்வாமி - அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, அகல் விளக்கேற்றி பிரார்த்தனை செய்ய... அனைத்து துயரங்களும் நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் காணலாம்! அதோடு சகல சௌபாக்கியங்களும் பெற்றிடலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்!விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து வடமேற்கே 5.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மேலச்சேரி! செஞ்சியிலிருந்து இங்கு வர பஸ் மற்றும் ஆட்டோ வசதியுள்ளது!

- M.  கணேஷ்

Related Stories: