நோய்கள், துர்மரணங்கள் ஏற்படாமல் தடுக்கும் தன்வந்திரி விரதம்

பிறப்பு மற்றும் இறப்பு என்பது பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இயற்கையின் நீதியாகும். அதிலும் மனிதர்கள் பிறந்தது முதல் வாழ்வில் பலவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவர் உலகில் சிறப்பாக வாழ செல்வம் எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு நோய்களின் பாதிப்பிற்குள்ளாகாத ஆரோக்கியமான உடல்நிலையும் அவசியமாகும். இந்து மதத்தில் நோய்களை நீக்கும் தெய்வமாக “தன்வந்திரி பகவான்” கருதப்படுகிறார். அந்த தன்வந்திரி பகவானுக்கு மேற்கொள்ளும் “தன்வந்திரி விரதம்” பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

புராணங்களில் தேவர்கள் மற்றும் அசுரர்கள் இறவா நிலை தரும் அமிர்தத்தை பெற பாற்கடலை கடைந்த சம்பவத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம். இப்படி கடையும் போது மனிதர்கள், தேவர்கள் பயன்பெற பல பொருட்கள் கிடைத்த பின்பு இறுதியாக மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டவரான தன்வந்திரி பகவான் மனிதர்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைவருக்கும் இறவா நிலையை தரும் அமிர்த கலசம் மற்றும் நோய்களை போக்கும் பல மருத்துவ மூலிகைகளுடன் தோன்றினார். நோய்களை போக்கி, உடல்நலத்தை காக்கும் மூலிகைகளை உலகத்தாரின் பயன்பாட்டிற்கு வெளிக்கொணர்ந்ததால் தன்வந்திரி பகவான் மருத்துவ கடவுளாக வணங்கப்படுகிறார். இந்த தன்வந்திரி பகவானுக்கு மேற்கொள்ளும் விரதமே தன்வந்திரி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் தேய்பிறை திரியாதசி தினத்தில் தன்வந்திரி விரதம் மேற்கொள்ளலாம் என்றாலும் தன்வந்திரி விரதம் மேற்கொள்வதற்கு சிறந்த தினமாக கருதப்படுவது ஐப்பசி மாதத்தில் வருகிற தேய்பிறை திரியாதசி தினமாகும்.

இந்த ஐப்பசி மாத தேய்பிறை திரியாதசி தினத்தன்று அதிகாலையில் எழுந்து மஞ்சள்தூள், துளசி ஆகியவற்றை குளிக்கும் நீரில் இட்டு, நன்கு கலக்கி கொண்டு அந்நீரால் தலைக்கு ஊற்றி குளித்துவிட்டு, சுத்தமான ஆடைகளை உடுத்திகொண்டு, வீட்டின் பூஜையறையில் தன்வந்திரி பகவானின் படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து , விளக்கெண்ணெய் தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, துளசி இலைகள், வெற்றிலை போன்ற மருத்துவ குணமிக்க செடிகளின் இலைகளை நைவேத்தியமாக வைத்து தன்வந்த்ரி பகவானுக்குரிய மந்திரங்களை கூறி வணங்க வேண்டும்.

அன்றைய தினம் முழுவதும் உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து தன்வந்திரி வரலாறு படித்தல் மற்றும் அவருக்குரிய அஸ்டோத்திரங்கள், துதிகள் ஆகியவற்றை துதித்து அவரை வழிபட வேண்டும். அன்று மாலைப் பொழுது சாயும் முன்பாக கடல், ஏரி, கோயில் குளக்கரை போன்ற நீர்நிலை தீர்த்தக் கட்டங்களுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தன்வந்திரியையும் யம தர்மராஜனையும் வழிபாடு செய்ய வேண்டும்.

பின்பு விவசாய விளைநிலத்தில் சிறிது உழுத பிறகு வெளிப்படும் மண் சிறிது எடுத்து ஒரு சோம்பு பசும்பாலில் போட்டு, இலவம் பஞ்சு மரக் குச்சியைக் கொண்டு நன்கு கலக்கித் தன்வந்திரி விரதமிருப்பவர்கள் தங்கள் உடல்மேல் தெளித்துக்கொள்ள வேண்டும். இந்த விரத நாளன்று வறியவர்களுக்கு வஸ்திர தானம் செய்தாலும் யமனை குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டக துதி படிப்பதாலும் கொடுமையான நோய்கள் நம்மை பீடிக்காமல் மரணங்கள், துர்மரணங்களில் இருந்து மீண்டு, தீர்க்கமான ஆயுளை பெற தன்வந்த்ரி பகவானும், எம தர்மரும் ஆசிர்வதிப்பதாக ஐதீகம். இந்த விரதத்தை நெடுநாள் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறையில் பணியாற்றுபவர்களும் மேற்கொண்டு தன்வந்திரி பகவானின் நல்லருளை பெறலாம்.

Related Stories: