மழலை வேதம்

கண்ணா கனியமுதே

கட்டிக்கரும்பே

கண்ணில் வருவாயே!

கண்ணுக்கு இமையாய்

காக்கிறேன் - உன்

கண்ணில் என்னை பார்க்கிறேன்!

 

குழந்தையை கண்டால்

கண்ணனின் காட்சி

மனதில் என்றும் உந்தன் ஆட்சி!

உன்னால்  வாழ்கின்றேன் - உன்

சிறப்பை பாடுகின்றேன்!

நீ தான் என்றும் என் தெய்வம் - இரு

கண்ணில் ஆடும் என் செல்வம்!

 

மழலை கேட்டு மனதில் மகிழ்ந்தேன்

மடியில் அமர்த்தி உலகை மறந்தேன்!

உன் முகம் பார்த்திருப்பேன்

நிழலாய் துணை வருவேன்!

நீ பாடினால் குயில் கேட்குமே

நீ பேசினால் கிளி  தோற்குமே!

 

சின்ன விழி கண்ணனை

சிறப்பாய் குளிப்பாட்டி

சிகைக்கு சாம்பிராணி தூபமிட்டு

கண்ணுக்கு மை தீட்டி

நுதலில் பொட்டு வைத்து

தொட்டிலில் போட்டு தாலாட்டினால்

தூங்குவது போல் நடிப்பான்!

தொட்டிலை விட்டு நகர்ந்தால்

தூக்கச் சொல்லி அழுவான்!

சின்னவன் குறும்புகள் ஆயிரம்

பாடினால் வளரும் பாசுரம்!

 

பூவிழி கண்ணா! பூவுடல் மன்னா

தத்தி தத்தி பேசும் பேச்சினிலே

உள்ளங்கள் பூக்கும் அன்பினிலே

தத்தி தத்தி நடக்கும் அழகினிலே!

தாளங்கள் சேரும் சுருதியினிலே!

தவழ்ந்து வரும் தங்க ரதமே

தாய் மடியில் அமர்ந்து ஊர்வலமே!

தவத்தால் கிடைத்த வரமே -  உன்

மழலை  இன்பம் தரும் வேதமே!

 

வேணுகானம் கேட்கிறது

வெள்ளி வாசல் திறக்கிறது

குருவாயூர் குழந்தை சிரிக்கிறது

கார்மேகம் கருணை பொழிகிறது!

 வாழ்க்கையே விளையாட்டெனில்

விளையாட்டே வாழ்க்கை உனக்கு!

- விஷ்ணுதாசன்

Related Stories: