×

கிருஷ்ண தரிசனம்

சங்கில் பால் அருந்தும் கிருஷ்ணன்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள வேணுகோபாலன் கோயிலில் ருக்மிணி - சத்யபாமாவுடன் வேணுகோபாலன் நின்ற கோலத்தில் அருள்கிறார். வேணுகோபாலன் சிலை நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று வேணுகோபாலனுக்கு கண் திறப்பு மற்றும் சங்கில் பால் புகட்டும் வைபவம் நடக்கின்றன.

பக்தனுக்கு புதையலை காட்டிய கிருஷ்ணன்

திருவண்ணாமலை அருகேயுள்ள செங்கம் எனும் ஊரில் வேணுகோபாலன், பார்த்தசாரதி, செம்பொன்ரங்கபெருமாள் ஆகிய பெயர்களுடன், பத்மாவதி, ஆண்டாளுடன் கண்ணன் அருட்பாலிக்கிறார். தன் பரம பக்தனான ஏழை ஒருவனுக்கு புதையலைக் காட்டிய கிருஷ்ணன் இவர்.

திருப்பதிக்கு நிகரான தலம்


கடலூர், புதுப்பாளையத்தில் ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்த கண்ணன் ராஜகோபாலனாக செங்கமலவல்லி நாச்சியாருடன் அருட்பாலிக்கிறார். இத்தலத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் திருப்பதி பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட காணிக்கைகளை இத்தலத்தில் சேர்த்து வேண்டுதலை நிறைவேற்றலாம் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கால்நடைகளை காக்கும் கண்ணன்

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் மூலவர் கோபிநாதராகவும், உற்சவர் கிருஷ்ணராகவும் தாயார் கோபம்மாளாகவும் அருட்பாலிக்கிறார். மரங்கள் மற்றும் கால்நடைகளைக் காப்பதில் இந்த கண்ணன் நிகரற்றவன்.

சிரித்த முக கிருஷ்ணன்

சென்னை ஆதம்பாக்கம் சாந்தி நகரில் உள்ளது பாண்டுரங்கன் கோயிலில் கருவறையில் சிரித்த முகத்துடன் அருள்கிறான் கண்ணன். பண்டரிபுரத்தில் உள்ளது போலவே இருக்கிறது இக்கோயிலின் கோபுர அமைப்பு.  

சூரியன் வணங்கும் கிருஷ்ணன்

மதுரை, திருப்பாலை எனும் ஊரில் வெண்ணெயுண்ட மாயவன் ராதாகிருஷ்ணனாக அருளும் கோயில் உள்ளது. மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தன் கிரணங்களால் கண்ணனை வணங்கும் தலம் இது. கண்ணனின் பிராணநாடியாக விளங்கும் ராதைக்கு இங்கே தனி சந்நதி உள்ளது. வேண்டுவதையெல்லாம் நிறைவேற்றித் தருகிறான் இந்தக் கண்ணன்.

பூக்காத, காய்க்காத புளியமரம்

மதுரை குராயூர் கள்ளிக்குடியில் உள்ள கோயிலில் கிருஷ்ணன், வேணுகோபாலசுவாமி எனும் திருநாமத்துடன் கண்ணன் பாமா,ருக்மிணியுடன் அருள்கிறார் ஆலய நந்தவனத்திலுள்ள புளியமரம், பூப்பதும் இல்லை, காய்ப்பதும் இல்லை. குழந்தைகள் கல்வியில் சிறக்க, இங்கே மாவிளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

தேவர்களுக்கு சாபவிமோசனம்

கண்ணன் நவநீத கிருஷ்ணனாக, திருநெல்வேலி மாவட்டம் மருதூரில் கோயில் கொண்டுள்ளான். தாமிரபரணியில் நீராடி இந்த பாலகிருஷ்ணனை தரிசித்து பால்பாயசம், வெண்ணெய் நிவேதித்தால் மழலைப் பேறு கிட்டுகிறது. சாபத்தால் மருத மரங்களான தேவர்களுக்கு சாபவிமோசனம் தந்து இத்தலத்தில் நிலை கொள்ள வைத்திருக்கிறான் இந்தக் கண்ணன்.

தங்கத்தை உரசிப் பார்க்கும் கல்லால் ஆனவன்

சென்னை மயிலாப்பூரில் டாக்டர் ரங்கா சாலையில் ஆலயம் கொண்டுள்ளான் கண்ணன். தங்கத்தை உரசிப் பார்க்கும் கல்லால் ஆனவன் இந்த கண்ணன். ஆலயத்தின் சார்பில் பல்வேறு தர்மகாரியங்கள் நடைபெறுகின்றன. கிருஷ்ண ஜெயந்தியின் போது ஆலயம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.

அஷ்டபுஜ பால மதன வேணுகோபாலன், இந்தப் பெயரில் கண்ணன் அருளும் கோயில், சேலம் மாவட்டம் பேளூரில் உள்ளது. இங்கே பெருமாள் எட்டு கைகளுடன் அருட்பாலிக்கிறார். ராமாயணத்தில் சீதாபிராட்டியைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவை, சிறகுகள் வெட்டப்பட்ட நிலையில் இங்கு தரிசிக்கலாம். இந்த பெருமாள் வலது கன்னம் ஆண்களைப் போல சொரசொரப்புடனும் இடது கன்னம் பெண்களைப் போல வழுவழுப்பாகவும் கொண்டுள்ளார்.

பரமக்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இளையான்குடியில் உள்ள கோயிலின் மூலவரும் வேணுகோபாலன்தான். புல்லாங்குழல் நாத ஆறுதலாக பக்தர்களின் எல்லா கவலைகளையும் கலைத்து நிம்மதியைத் தருபவர் இவர்.

தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கன் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித தோற்றத்தில் பாண்டுரங்கனையும் ருக்மாயியையும் அலங்கரிக்கின்றனர். ஆலயம் முழுவதும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண்ணனின் திருவிளையாடல்களை தஞ்சாவூர் ஓவியங்களாகவும் ம்யூரல் சிற்பங்களாகவும் தரிசிக்கலாம்.

சென்னை  - நங்கநல்லூரில் உள்ளது உத்தரகுருவாயூரப்பன் ஆலயம். இங்கு கிருஷ்ண ஜெயந்தியன்று இரவு பன்னிரெண்டு மணிக்கு முதலில் மகாமாயாவிற்கு பூஜைசெய்து பின் அடுத்த நிமிடம் கண்ணனுக்கு தீபாராதனை செய்து பூஜை செய்யப்படுகிறது.

காஞ்சிபுரத்திலேயே திருப்பாடகம் எனும் தலத்தில் பாண்டவதூதர் எனும் திருநாமத்தோடு கிருஷ்ணர் அருள்கிறார். ருக்மணி, சத்யபாமாவோடு சேவை சாதிக்கிறார். ஜெனமேஜெய மகராஜாவுக்கும் ஹரித முனிவருக்கும் இங்கே கிருஷ்ணனின் காட்சி கிடைத்தது.

சென்னை - புதுச்சேரி இ.சி.ஆர். ரோடில் கல்பாக்கத்தை அடுத்து விட்டலாபுரம் எனும் தலம் உள்ளது. மூலவராக விட்டலனும் ருக்மாயியும் சேவை சாதிக்கின்றனர். பிரிவின் எல்லைக்கே போன தம்பதியரின் வேதனை போக்கி, அவர்களை ஒன்றாக்கி மகிழ்வளிக்கிறார்கள் இந்தக் கோயில் தம்பதியர்.

- ந.பரணிகுமார்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?