மயிலை பச்சையம்மன்

கயிலை நாதன் கபாலீஸ்வரனாக வீற்றிருக்கும் தலம் சென்னை மயிலாப்பூர். இந்த மயிலாப்பூரில் பச்சையம்மன் ஆரம்பக்காலம் முதல் வணங்கப்பட்டு வருகிறாள். நாகேஸ்வரராவ் பூங்காவிற்குத் தெற்கில் சிறிய திருக்கோயிலாக இன்று இருக்கும் இத்திருக்கோயில் முதலில் வனப்பகுதியில் சோலையில் - நதிக்கரையில் இருந்திருக்கவேண்டும். மாநகர விரிவாக்கத்தில் சோலைப்பகுதிகள் சுருங்கி குடியிருப்புப் பகுதியாக மாறி இருக்கவேண்டும் எனக் கருதப்படுகிறது.

சுருக்கப்பட்டுள்ள கோயில் பரப்புக்குள் வாழ்முனி சுமார் 7 அடி உயரத்துடன் புடைப்புச் சிற்பம் போல் அமைந்து உள்ளார். மூலவர் கருவறைக்கு முன்புறம் விநாயகர் மற்றும் முருகன் மாடத்தில் எழுந்தருளியுள்ளனர். சுமார் 6 அடிக்கு மேல் உயரம் கொண்ட மூலமூர்த்தி பச்சையம்மனின் அபிஷேக மூர்த்தி மிகச்சிறியதாக உள்ளது. கருவறைக்கு நேரே வீரமுத்துவும் மற்றும் குழந்தையுடன் வீராட்சியும் உள்ளனர்.

தனி சந்நதியில் மன்னார்சாமி வடக்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார். பெரிய அரசமரத்தின் கீழ் தட்சணாமூர்த்தி, வாராஹி, தன்வந்திரி, ராமானுஜர், ஆஞ்சநேயர், மஹாவிஷ்ணு, பூரணை புஷ்கலையுடன் தர்மசாஸ்தா, நர்த்தன விநாயகர், துர்கை சரஸ்வதி முதலிய சிலை விக்கிரகங்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் கோயிலுக்கு வரவழைக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ, சக்தி வழிபாட்டில் தெய்வ வேறுபாடுகள் இல்லை என்ற நோக்கத்தை உறுதி செய்யவோ நிறுவப்பட்டுள்ளன.

அதேபோல் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதோடு பௌர்ணமி பூஜை சண்டி ஹோமம் போன்றவை சிறப்பாக நடத்தப்படுகின்றன. மயிலை ஸ்ரீ பச்சையம்மன் கோயில் என அழைக்கப்பட்டாலும் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட வாராஹி போன்ற தேவதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  மயிலாப்பூர் டாக்டர் ரங்காரோடில் கிழக்கு அபிராமபுரம் முதல் பிரதான சாலையில் பச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது திருக்கோயில் தரிசனம் காலை 7-00 மணி முதல் 10-00 மணி வரையும் தரிசனத்திற்குத் திறந்திருக்கும். மாலை 5.00மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

Related Stories: