லண்டன் பக்தரின் வாழ்வில் சாய்பாபா செய்த அற்புதம்

சித்தர்கள், ஞானிகள் போன்றோர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்து மறைந்த விட்டவர்கள் என்கிற ஒரு எண்ணம் தான் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. மேலும் அந்த சித்தர்களின் அற்புதங்கள் நிகழ்த்தியதற்கான சான்றுகள் நம்பும்படி இல்லை என்றும் சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். மேற்கூறிய கருத்துக்களை எல்லாம் பொய்யாக்கும் விதமாக வாழ்ந்து, கடந்த நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் சித்தி நிலை அடைந்தவர் தான் சீரடி சாய்பாபா. அவர் செய்த பல அற்புதங்கள் பற்றிய குறிப்புகள் அக்கால அரசாங்கத்தின் கோப்புகளிலேயே குறிப்பிடப்பட்டிருப்பது அவரின் தெய்வீக ஆற்றலுக்கு சாட்சியாகும்.

சித்த புருஷரான அந்த சாயி பாபா தான் வாழும் காலத்தில் மட்டுமல்லாது தான் சமாதி அடைந்து 100 ஆண்டுகளை கடந்த பின்பும் தனது உண்மையான பக்தர்களின் குறைகளை தீர்த்தவண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் வசிக்கின்ற ஒரு பக்தரின் வாழ்வில் சாய்பாபா நிகழ்த்திய அற்புதம் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம். இலங்கையில் பிறந்து தற்போது லண்டன் மாநகரத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு தனது 39வது வயதில் தான் திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் அவரது கணவருக்கும், அவருக்கும் நல்ல அன்னோன்யம் இருந்தபோதும், திருமணம் ஆகிய இரண்டு வருடங்களில் தம்பதிகள் இருவரிடையே பிரிவு ஏற்பட்டுவிட்டது. காரணம் அப்பெண்மணி 40 வயது கடந்துவிட்டதால் அவருக்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லாமல் போய்விட்டது என அவர் கணவர் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். இதனையடுத்து அந்தப் பெண்மணியும், அவரது கணவரும் ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனை செய்துகொண்டபோது தம்பதிகள் இருவருக்கும் உடல் ரீதியாக எந்த ஒரு குறைபாடும் இல்லை என்றும், அவர்கள் இருவரும் தாராளமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த மருத்துவ பரிசோதனைகளின் முடிவில் தெரியவந்தது.

இருந்தபோதும் அதை அவரது கணவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரும் அவரது தாயாரும் அந்தப் பெண்மணியை குறை கூறியதோடு, அந்தப் பெண்மணியின் கணவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் அறிந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்த நேரத்தில்தான் அப்பெண்மணி ஒரு ஆன்மீக இதழில் சீரடி சாய் பாபாவின் மகிமையை குறித்து படிக்கத் தொடங்கினார். மேலும் அந்த இதழில் தீவிர சாய்பாபா உபாசகர் ஒருவர் பக்தர்கள் அனைவரும் பயன்பெற கூட்டுப்பிரார்த்தனை நடத்தும் விவரம் அறிந்து, அவரை தொடர்பு கொண்டு தனது மனக்குறையை அப்பெண்மணி கூறியிருக்கிறார்.

அவரின் குறையை கேட்டு ஆறுதல் கூறிய அந்த உபாசகர், அப்பெண்மணிக்காக வாரந்தோறும் வியாழக்கிழமை தினத்தில் நடக்கின்ற கூட்டுப் பிரார்த்தனையில் அப்பெண்மணிக்கு விரைவில் குழந்தை வரம் கிடைப்பதற்காக சாய் பக்தர்கள் அனைத்தும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர் சாய்பாபாவின் பூரண அருளாசிகள் கிடைக்கப்பெற்ற அந்தக் கூட்டுப் பிரார்த்தனையின் விளைவாக தற்போது அப்பெண்மணி கருவுற்றிருப்பதாகவும், இத்தனை நாட்கள் குழந்தை பிறக்காத மன வருத்தத்தில் இருந்த தனது கணவர் மகிழ்ச்சியாக இருப்பதோடு, தன்னை மிகவும் அன்புடன் கவனித்துக் கொள்வதாகவும் கணவரின் தாயாரும் மிகுந்த அக்கறையுடன் தனக்கான தேவைகளை நிறைவேற்றி தருவதாகவும் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் இந்தியா வந்து சீரடி சாய் பாபாவை தரிசிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்காக கூட்டு பிரார்த்தனை செய்த சாய் பக்தர்களுக்கும், சாய் பாபாவிற்கு தான் என்றென்றும் நன்றியுடையவளாக இருப்பதாகவும் கூறினார்.

Related Stories: