சிறுவனாக வந்து மூதாட்டிக்கு அருளிய குருவாயூரப்பன்

குருவாயூரப்பனின் தீவிர பக்தையாக ஒரு மூதாட்டி இருந்தாள். அவள் அனுதினமும் காலையும், மாலையும் குருவாயூரப்பன் சந்நதிக்கு வந்து, கண்ணனை மன நிறைவோடு வழிபட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாள். ஒரு நாள் அந்த மூதாட்டி இரவு நேர தரிசனம் முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று பெருங்காற்றுடன் கன மழை பெய்தது. அந்நாட்களில் சாலைகளில் சாலை விளக்குகள் கிடையாது என்பதால், எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.

இந்த பெருமழையில் எப்படி வீட்டிற்குச் செல்வது? என்று கலங்கிய மூதாட்டி, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிய படியே தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தாள். அப்போது ஒரு சிறுவன் அங்கு வந்து ‘பாட்டி’ கவலைப்படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன் என்று அழைத்துச் ெசன்றான். இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர். பாட்டியின் வீட்டை அடைந்தனர். மழையில் இருவரும் முழுவதுமாக நனைந்து விட்டனர். மூதாட்டி சிறுவனைப்பார்த்து ‘‘நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு ஏதாவது நான் தரவேண்டும்.

என்ன வேண்டும்! கேள்’’ என்றாள் மூதாட்டி. சிறுவனோ, ‘‘மழையில் என் உடைகள் நனைந்து விட்டது. உங்களின் புடவையில் இருந்து ஒரு பகுதியைத் தாருங்கள்’’ என்றவன் சிறுவன். மூதாட்டி தன்னிடம் இருந்த சிவப்பு நிறப்புடவையில் கொஞ்சத்தைக் கிழித்து சிறுவனிடம் கொடுத்தாள் மூதாட்டி. மறுநாள் அதிகாலையில் குருவாயூரப்பன் சந்நதியைத் திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். முன்தினம் இரவு பட்டு பீதாம்பரம் உடுத்தி நன்றாக அலங்காரம் செய்திருந்த கண்ணனின் திருமேனியில்  சிவப்பு நிற கோவணம் மட்டுமே இருந்தது.

ஆனாலும் அந்த திவ்ய காட்சி அனைவரையும் மயக்கும் விதமாக இருந்தது. காலையில் வழக்கம் போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் இந்தக் காட்சியைக் கண்டு அகமகிழ்ந்து போனாள்.  முன்தினம் இரவு நடந்ததைச் சொன்னதுடன், தான் கிழித்துக் கொடுத்த சிவப்பு நிற புடவையையும் காண்பித்தாள். அவள் கிழித்துக் கொடுத்த ஒரு பகுதியே. குருவாயூரப்பன் இடையில் கோவணமாக காட்சியளித்தது. அன்று முதல் குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் ‘‘சாத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

Related Stories: