×

பணிந்தவர்க்கு வாழ்வருளும் பட்டினத்தார்

13.08.2019

திருவொற்றியூர், சென்னை

மகள் ஒன்று மகன் ஒன்று என இரண்டு பிள்ளைகளுடன் இனிதே வாழ்ந்த, இவர் திருவெண்காட்டு ஈசனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அதன் காரணமாக தனது மகனுக்கு திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமான் என பெயரிட்டார். திருவெண்காடர் என செல்லமாக அழைத்து வந்தனர். மன்னர்களுக்குச் சரிசமமாக மாளிகை எழுப்பி மிகவும் வசதிகளோடு வாழ்ந்து வந்தார். நாடாளும் மன்னரும் அவரை மதித்துப் போற்றி வந்தனர். மகளை செல்வ செழிப்பாக தமது அந்தஸ்துக்கு ஈடான ஒரு வணிகரின் மகனுக்கு மணமுடித்து வைத்தார். அடுத்து தனது மகனுக்கும் மணமுடித்து பார்க்க வேண்டும் என்று சிவநேசர் எண்ணினார்.

இதனால் திருவெண்காடர் பதினாறு வயதில் சிவகலை என்பவரை திருமணம் செய்து கொண்டார். தந்தை வழியில் திருவெண்காடருக்கு நல்ல வசதியான வாழ்க்கை வாய்க்கப் பெறவே அவரும் மிகவும் ஆனந்தமாகவே வாழ்ந்து வந்தார். மணமுடித்து பத்து ஆண்டுகள் கடந்த பின்னும் குழந்தை இல்லை. இந்த கவலை திருவெண்காட்டரை வாட்டியது. மழலை வரம் வேண்டி திருவிடைமருதூர் சென்று ஈசனை வணங்கி விரதம் இருந்து வந்தார். அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் அந்தணத் தம்பதியருக்கு வறுமை பொறுக்க முடியாமல் இருந்து வந்தது.

சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம் கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும், சிவசருமர் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெருவணிகராய் உள்ள திருவெண்காடரிடம் சேர்ப்பிக்குமாறும் அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் வறுமை தீரும் எனவும் கூறவே விழித்தெழுந்த சிவசருமர் மறுநாள் அவ்வாறே நடக்கக் குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடரிடம் கொடுக்க அவரும் ஈசன் ஆணை என அறிந்து குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்குப் பொருள் கொடுத்து உதவுகிறார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகிறார்.

மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. மகனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். பதினைந்து நாட்கள் கடந்து வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான். திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கும், காதற்ற ஊசி ஒன்றும் தான். கப்பலிலோ எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்தது. கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார். திருவெண்காடரான பட்டினத்தார்.

அதைப் படித்த பட்டினத்தாருக்கு புரிந்தது. இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்! எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை. அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பர மாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார். துறவியாகத் திரிந்த அவரால் தனக்கு, அவர் மூலம் கிடைத்த சொத்துக்களை திரும்பக் கேட்டு மடத்திற்கு ஏதும் எழுதி வைத்திடுவானே தம்பி என்று அஞ்சிய அவரது அக்கா, தன் வீட்டுக்கு வந்த திருவெண்காடருக்கு அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுத்தாள். அப்பத்தில் விஷம் இருப்பதை அம்மையப்பன் அளித்த ஞானத்தால் அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது.

அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்தனர். உற்றாரும், ஊராரும் கூடி நிற்க, எந்த வீதியில் பட்டாடையில் வலம் வந்தாரோ, அதே வீதியில் அரையில் ஒரு சிறு துண்டை கட்டிக்கொண்டு மேனியெங்கும் திருநீறு பூசிக்கொண்டு நடந்தார். உதடுகள் உமாபதியின் நாமத்தையே உச்சரித்தன. மகன் சந்நியாசம் போய்விட்டானே என்று மனமுடைந்து படுத்த படுக்கையான அவரது தாயின் முகம் காண வந்தார். பட்டினத்தார். தாயின் உடல் நலம் விசாரித்தார். அப்போது அவரது தாய், ‘‘திருவெண்காடா, நான் கொள்ளிக்கு பிள்ளையத்து கொடி முடிந்து போனேனா...’’கருவில் என்னை சுமந்த தாயே நீ இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவேன் என்றார் பட்டினத்தார்.

அவ்வாறே அவரது தாயார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர் ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப்பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பஞ்சு மெத்தையில் படுத்திருந்த என் தாயின் உடலை காஞ்ச மரத்துண்டுகள் காயப்படுத்துவதா எனக்கேட்டவாறு பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் கீழ்க்கண்ட பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

என்றதும் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார். துறவை மேற்கொண்ட பட்டினத்தார் அங்கேயே இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்து ஊர் ஊராகச்சென்று ஈசனைத் தரிசிக்க ஆரம்பித்தார். அவ்வாறு செல்கையில் உஜ்ஜையினி மகாகாளேஸ்வரர் கோயிலில் தன் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊருக்கு வெளியே வந்த பட்டினத்தார் அங்கிருந்த காட்டுப்பிள்ளையார் கோயிலில் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவ்வூரில் பத்திரகிரியார் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அரண்மனையில் செல்வம் மிகுந்திருந்தது; இது காட்டின் கொள்ளையர்களைக் கவர்ந்தது. அவர்கள் அரண்மனைக்குக் கொள்ளையடிக்கச் சென்றனர்.

செல்கையில் கொள்ளை வெற்றிகரமாய் முடிந்தால் காட்டுப் பிள்ளையாருக்குக் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டு சென்றனர். அவ்விதமே கொள்ளை வெற்றியாய் முடியவே அவ்வழியே சென்ற கொள்ளையர் பிள்ளையாருக்கென ஒரு விலை உயர்ந்த முத்துமாலையைக் காணிக்கைக்கென எடுத்துக் கோயிலில் பிள்ளையார் சந்நதி முன் வீசிவிட்டுச் சென்றனர். அந்த முத்துமாலை அங்கே தியானம் செய்து கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் போய் அழகாய் அமர்ந்து கொண்டது. கொள்ளையரைத் துரத்தி வந்த அரண்மனைக் காவலர் பிள்ளையார் கோயிலில் கழுத்தில் முத்து மாலையுடன் வீற்றிருந்த பட்டினத்தாரிடம் இது எப்படிக் கிடைத்தது என வினவ, நடந்தது எதையும் அறியாத பட்டினத்தார் பதில் சொல்ல முடியாமல் தவிக்க, காவலர்களோ, இவரே, கொள்ளைக் கூட்டத்தலைவர் இப்போது ஏதும் அறியாதது போல் வேஷமிடுகிறார் என நினைத்து அரசரிடம் சென்று நடந்ததைச் சொல்கின்றனர்.

மன்னனும் விசாரிக்கப் பட்டினத்தார் எதுவும் சொல்லவில்லை. உடனே மன்னனுக்குக் கோபம் வந்து, “கள்வனைக் கழுவில் ஏற்றுக!” என்று ஆணையிட்டார். கழுமரம் தயார் செய்யப்பட்டது, பட்டினத்தாரும் கழுவில் ஏற்றப்பட்டார். கழுவில் ஏற்றப்பட்ட நிலையிலும் மனம் தளராது, “விதியின் வலிமையை எண்ணி என் செயலாவது யாதொன்றுமில்லை, இனி தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்” எனத் தொடங்கும் பாடலைப் பாடக் கழுமரம் பற்றி எரிந்தது, இதை அறிந்த அரசன் பட்டினத்தாரின் மகிமையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டான். அரசனைக் கண்ட பட்டினத்தாருக்கு அவனும் ஞான வழியில் செல்லப் பக்குவம் அடைந்திருப்பதும், அவன் மனைவி, கணவனை இல்லாத தருணம் மந்திரியாருடன் மஞ்சம் கொள்வதை ஞானத்தால் உணர்ந்த பட்டினத்தார், அதை மன்னனுக்குச் சூசகமாக உணர்த்தினார்.

மன்னனும் மனைவியைச் சோதித்துப் பார்த்து அவள் தன்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, அரச வாழ்க்கையைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக மாறி அவரைப் பின் தொடர்ந்தார். ராணியோ இறந்து விடுகிறாள். அவள் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து மன்னன் பத்திரகிரியாரையைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். பட்டினத்தாரும் பத்திரகிரியாரும், திருவிடைமருதூர் வந்தடைகின்றனர். அங்கே கோபுர வாசலில் பிச்சை எடுத்து பத்திரகிரியார் தாமும் உண்டு தம் குருவுக்கும் உணவு கொடுத்து வருகிறார். தம்மைச் சுற்றி வந்த நாய்க்கும் பத்திரகிரியார் உணவிட்டு வந்தார். அப்போது ஒரு நாள் பட்டினத்தாரிடம் ஒரு சித்தர் வந்து தருமம் கேட்க, பட்டினத்தார் சிரித்த வண்ணம், “நானோ சந்நியாசி, என்னிடம் கொடுக்க ஏதுமில்லை. அதோ இருக்கிறானே என் சீடன். சம்சாரி.

சோற்றுச் சட்டி மட்டுமில்லாமல் கூடவே ஒரு நாயையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனைக் கேளுங்கள்.” என்று கை காட்டி விடுகிறார். இதை அந்தச் சித்தர் வாயிலாக அறிந்த பத்திரகிரியார் ஆஹா, சந்நியாசியாக மாறிய எனக்கு இந்தச் சோற்றுச் சட்டியும், நாயும் அல்லவோ சம்சாரியாக்கிவிட்டது.” அடுத்த கணம் சோற்றுச் சட்டியைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார் பத்திரகிரியார். அதன் ஒரு துண்டு நாயின் தலையில் வேகமாய்ப் படவே நாய் இறந்து விடுகிறது. அதைக் கண்ட பத்திரகிரியார் திகைத்து நிற்க பட்டினத்தார் தெளிவு படுத்துகிறார்.  பத்திரகிரியாரின் மனைவியே அந்த நாய் எனவும், இப்போது அவள் பாவம் தீர்ந்து விட்டதென்றும், அடுத்த பிறவியில் நல்லதொரு அரசகுடும்பத்தில் பிறந்து மீண்டும் உன்னை நாடி வருவாள்.” என்று சொல்கிறார்.

அதன்படியே அந்தப் பெண் காசிராஜனுக்கு மகளாய்ப் பிறக்கிறாள். காசிராஜனும் மகளுக்கு மணமகன் தேடவேண்டிச் சுயம்வரம் நடத்த ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ, தனது முற்பிறவி குறித்துக்கூறுகிறாள். உடனே மகளை அழைத்துக்கொண்டு காசி ராஜன், பத்திரகிரியாரைத் தேடிக் கண்டு பிடிக்கிறான். தன் பெண்ணை அவரிடம் ஒப்படைத்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான். அவளுக்குத் தன் பூர்வ ஜன்ம நினைவுகள் மறையவே இல்லை என்பதைக் கண்டார் பத்திரகிரியார். அவர் தன் குருநாதரான பட்டினத்தாரைப் பார்த்து, “குருவே, இது என்ன?? என வினவ,’’ “இதுவும் ஈசன் செயல்,” என்று புரிந்து கொண்ட பட்டினத்தார், ஈசன் திருவருளை நினைந்து வேண்ட, அப்போது தோன்றிய பெரும் ஜோதியில், அந்தப் பெண்ணும், பத்திரகிரியாரும் ஐக்கியமாகினர்.

தன் சீடனுக்கு விரைவில் முக்தி கிடைத்ததை நினைத்து பட்டினத்தார் தனக்கும் முக்தி கொடுக்குமாறு ஈசனை வேண்ட, ஈசன் அவரிடம் ஒரு கரும்பைக் கொடுத்தார். அதன் நுனி இனிக்கும் இடத்தில் அவருக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறினார். அந்தக் கரும்பை எடுத்துக் கொண்டு பட்டினத்தார் மீண்டும் திருவெண்காடு, சீர்காழி போன்ற பல தலங்களுக்குச் சென்றார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை. பின்னர் அவர் திருவொற்றியூர் வந்தார். அங்கே தான் கரும்பு இனித்தது. இங்கேயே தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு இருந்த சிலரை அழைத்துத் தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள். மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார். முக்தியும் பெற்றார். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப்பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார்.

நீறில்லா நெற்றி பாழ் ஏன்?

திருநீறுக்கு “ஐஸ்வர்யம்’ என்று பெயர். இதை அணிந்தால் செல்வம் பெருகும். பாண்டிய மன்னருக்கு வெப்பு நோயைப் போக்க சம்பந்தர் திருநீறு கொடுத்து அருள்புரிந்தார். அது போல நாமும் திருநீறு பூசினால் நோய் உண்டாகாது. திருநீறு பூசியதும் சம்பந்தரின் திருநீற்றுப்பதிகத்தை படிப்பது விசேஷமான பலனைக்கொடுக்கும்.

ஆரோக்யம் தரும் தெற்கு வாசல்

“வடக்கு பார்த்த மச்சைக் காட்டிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு மேல்’ என்று ஒரு சுலவடையே சொல்வதுண்டு. தென்றல் வீசுவது தெற்கில் இருந்து தான். தெற்கு பார்த்த வீட்டிற்குள் காற்றோட்டம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்திற்கு குறைவிருக்காது. “வாயு புகாத வீட்டில் வைத்தியம் புகுவான்’ என்பது இதனால் தான்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி