எடைச்சித்தூர் அய்யனார்

‘‘அப்பா  அய்யனாரே... உம்புள்ளைங்க  ஒன்ன நம்பி வந்திருக்கு. அதுங்க கொழந்தைக் குட்டியோட நல்லபடியா வாழணும். காத்துக் கருப்பு அண்டாம, கண் திருஷ்டி இல்லாம பாத்துக்கோப்பா. பில்லி, சூனியம், செய்வினை ஏதுமிருந்தா சரிபண்ணிடு.ஒரு தடவ பரிவாரத்தோட போய் அதுக இருக்கற இடத்தப் பாத்து குத்தங் குறை ஏதாவது இருந்தா சரி பண்ணிட்டு வாப்பா” என தெரிந்த நபரிடம் சிபாரிசுக்காக பேசுவது போன்றே பேசுகிறார், அய்யனார் கோயில் பூசாரி. சுழலும் கற்பூரத்தட்டின் வெளிச்சத்தில் கருவறையில் இருக்கும் அய்யனாரைப் பார்க்கும் போது கொள்ளுத்தாத்தாவைப் பார்ப்பது போன்ற ஒரு அச்சம் கலந்த மரியாதையும் அன்பும் சங்கமித்த உணர்வு ஏற்படுவது உண்மை.சுள்ளென வெயில் அடித்தாலும், அடர்ந்து நிற்கும் மரங்களின் தயவால் வெப்பம் தெரியவில்லை. கோயிலின் வெளியே வந்து பார்க்கும் போது கேள்விகள் முளைக்கின்றன. ‘ஏன் அய்யனாரெல்லாம் காட்டுக்கு நடுவுல இருக்காங்க; இந்த கோயில்ல இத்தன பெரியதா ரெண்டு யானை சிலைங்க இருக்கே, யார் செஞ்சது; சின்னதும் பெருசுமா வேலி வெச்சக் கணக்கா ஆயிரம் யானை சிலைங்க இருக்கே இது எல்லாம் எப்படி வந்துச்சு....?’

கேள்விகள் முளைவிட்டதை புரிந்து கொண்ட ஒரு பெரியவர் விளக்கம் கொடுத்தார்: ‘‘அய்யனார் சாமிதான். ஒவ்வொரு ஊருலயும் அய்யனார் இருக்குறார். அத்தனை பேரும் நம்ம முன்னோர்கள். தன்னோட குலத்தைக் காப்பாத்த யாரேனும் ஒருத்தர், வேல் கம்போட போராடி, குலம் காத்திருப்பாங்க இல்ல? அவங்களை நன்றியோட நினைக்க ஆரம்பிச்சி, அப்படியே கடவுளா மாறினவங்கதான் இவங்க. இன்னைக்கும் தன் கொடி கொத்துங்க இருந்தாலும் காப்பாத்தும் இவங்கள சாமியா கும்பிடற வம்சங்கள் நாடு முழுக்க இருக்கு. இந்த அய்யனாரும் அப்படி பல நூறு ஆண்டுக்கு முன்னால இந்த கிராமத்தக் காப்பாத்தன நம் முன்னோராதான் இருக்கணும். இன்னைக்கும் இவர் மக்களைக் காப்பாத்திக்கிட்டு இருக்காரு.

‘‘இந்த ரெண்டு யானையும் இங்க வந்தது பெரிய கதை. இந்த சின்ன யானையை உளுந்தூர்பேட்டைக்கு பக்கத்துல இருக்கற எடைக்கல் கிராமத்துல செஞ்சாங்க. அந்த காலத்துல பாரவண்டி மூலமாதான் சுமை ஏத்தியாருவாங்க. இந்த யானையைக் கொண்டு வரதுக்குள்ள எட்டு மாடுங்க பூட்டி இழுக்கற பல வண்டிங்க உடைஞ்சி போச்சாம். எப்படியோ கஷ்டப்பட்டு இதைக் கொண்டாந்துட்டாங்க. பெரிய யானையைச் செய்ய சொல்லி இருந்தது

இப்போதைய டி. குன்னத்தூர்ல. சின்ன யானையக் கொண்டாறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போச்சு. பெரிய யானைய எப்படி கோயிலுக்கு கொண்டாறது! கொடுத்த பணம் போனாப் போவுது. நம்ம கோயிலுக்கு ஒரு யானையே போதும்னு ஊரு முடிவு செஞ்சது.

‘அட நான் எங்க இருக்கணும்னு எனக்குத் தெரியும் அத நீங்க முடிவு செய்யக்கூடாது’ ன்னு நினைச்சது போல, பெரிய யானை! அன்னைக்கு ராத்திரிக்கு சொல்லி வெச்சாமாதிரி ஊருல எல்லாருக்கும் ஒரு கனவு. ‘வர்ற பௌர்ணமி அன்னைக்கு ஊருல எல்லாரும் சுத்தபத்தமா வாசல் தெளிச்சி, அரிசி, வெல்லம், தேங்காப்பழம் எல்லாம் வாசல்ல வெச்சிட்டு கதவ மூடிக்கணும். நான் கோயிலுக்கு வந்து சேந்துடறேன்’னு பெரிய கல்யானை கனவுல சொல்லுச்சாம்.‘‘மறுநாள் காலைல தீயா சேதி பரவுச்சி. கனவுல யானை சொன்ன மாதிரியே செஞ்சு ஊர் அடங்குச்சு. கலகலன்னு மணியோசையோட யானை வர்ற சத்தம் எல்லாருக்கும் கேட்டுச்சு. அந்த நேரத்துல ஒரு அய்யர் வீட்டுக் கொழந்த வயிறு வலிக்குதுன்னு அழ, அதக் கூட்டியாந்து தெருவுல விட்ட அம்மாக்காரி நின்னு பார்த்தா... வீதி நெடுக ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் இருந்த அரிசி பழத்த எல்லாம் தின்னுகிட்டே வந்தது யானை! அப்படியே அலறியபடி, குழந்தையை அப்படியே விட்டுட்டு, வீட்டுக்குள்ள ஓடிட்டா. அழுதுக்கிட்டு நின்ன குழந்தைய தும்பிக்கைல தூக்கிக்கிட்டு கோயிலுக்கு வந்து நின்னுச்சு யானை.

‘‘குழந்தைய யானை தூக்கிகிட்டு வந்த விஷயம் ஊருக்குள் பரவி கோயிலுக்கு வந்து பாத்தா.... யானையும் குழந்தையும் பாதி கல்லாவும் பாதி உயிராவும் மாறி நிக்குதுங்க. என் குழந்தைய குடுத்துடுன்னு பெத்தவ கெஞ்சினா. ‘தெய்வ வாக்குக்கு மதிப்பு தரணும். நான் முதல்லயே சொன்னதை மீறி நீ வெளிய வந்ததும் தப்பு, குழந்தையை விட்டுட்டு போனதும் தப்பு. ஆனாலும் கவலைப் படாத. இந்த பாலகனை அய்யனார் தன் குழந்தையா ஏத்துக்கிட்டார். இது தான் விதி’ன்னு யானை சொல்லி, அப்படியே முழுதும் கல்லாய் மாறிடுச்சு.‘‘அந்த சோகத்தோட அய்யருங்க குடும்பமெல்லாம் ஊர காலிப்பண்ணிட்டு போயிட்டாங்க. ஆனா, இந்த யானைகளுக்கு அபிஷேகம் செய்யற உரிமை அக்ரஹாரத் தெருவுல வாழறவங்களுக்கு மட்டும்தான். மூணு டின் நல்லெண்ணெய் கொண்டாந்து யானைக்கு அபிஷேகம் செய்வாங்க. அதுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. அவுங்க கொண்டு வரும் சட்டியில எண்ணய ஊத்தி, ஏணில ஏறி, அவர்தான் யானைய குளிப்பாட்டுவாரு.  ‘‘இந்த அய்யனாருக்கு வேண்டிக்கிட்டு, இந்த யானைக்கு அபிஷேகம் செஞ்சா நம்ம குறைய தீர்க்க இந்த யானைல ஏறி அய்யனார் நம்ம வீடு தேடி வருவாங்கறது எங்க நம்பிக்கை. இந்த கோயில்ல திருட வந்தவன் பார்வைய அய்யனார் பறிச்சிட்டார். அவன் தன் தப்ப உணர்ந்து மன்னிப்பு கேட்டதும் பார்வை திரும்ப கிடைச்சிது. அதுக்கு நன்றி தெரிவிக்கிற விதமா வெச்சது தான் இந்த  நூற்றுக் கணக்கான குட்டி கல்யானைங்க. இந்த கிராமத்த சுத்தி இருக்கற மக்கள் எந்த நல்லது கெட்டதுன்னாலும் அய்யனாரு காதுல போடாம எதுவும் செய்ய மாட்டாங்க.’’

 

சுமார் அரை ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் கோயிலைச் சுற்றி வித விதமான சிலைகள். யானைகள், குதிரைகள், நாய்கள்... ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் கதை இருக்கிறது. வரிசையாய் வேல், சூலங்கள் நடப்பட்டு வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகின்றன. சுதையாய் நிற்கும் குதிரைகள், யானைகளுக்கு முன்னே இரண்டு கல்யானைகளும் கம்பீரமாய் நிற்கின்றன. வெளி மண்டபத்தில் பூதங்களும் துவாரபாலகர்களையும் காணலாம். முன்மண்டபத்தில் உற்சவர் சிலைகளும் வள்ளி-தெய்வானை சமேதராய் முருகனும் இருக்கிறார்கள். கருவறையில் பூரணை-புஷ்கலை சமேதராய் அய்யனார் வீற்றிருக்கிறார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவரை தரிசிக்க சுற்றுயுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வருகிறார்கள்.

இவர் என்ன தருவார்? குடும்பத்தின் மூத்த உறுப்பினராய் இருந்து எல்லாமும் தருவார். அந்த பூசாரி நம் சார்பில் அய்யனாரிடம் முறையிடுவது மந்திரமாய் மாறி நம் குடும்பத்தைக் காக்கும்! பணம், பொருள், நிலம் என பிறரால் ஏமாற்றமடைந்தவர்கள் இவரிடம் முறையிட்டு தீர்வு காண்கிறார்கள் என்பது கண்கூடு.கடலூர்மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில் மங்கலம் பேட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த அய்யனார் கோயில். மங்கலம்பேட்டையிலிருந்து ஆட்டோ வசதிகள் இருக்கின்றன. ஆலய தொடர்புக்கு: 9585646043.

Related Stories: