×

அற்புதங்கள் புரியும் அக்னி வீரனார்

கீழையூர் கண்ணந்தங்குடி

திருச்சிக்கு அருகில், திருப்பராய்த்துறையிலுள்ள கோயிலின் தல விருட்சம் பராய் மரம். அதனாலேயே அத்தலத்தை ‘திருப்பராய்த்துறை’ என்று அழைத்தனர். அத்தகைய அரிதான புராணங்கள் புகழும் தேவதாரு எனும் தெய்வீக மரத்தோடும், சிவனின் அம்சமான அக்னி வீரனாரோடு கீழையூர் கண்ணந்தங்குடி எனும் இத்தலம் திகழ்கிறது.

நாற்பத்தெட்டாயிரம் முனிவர்களும் ஒரே நேரத்தில் பிரம்மனை குறித்து தவமியற்றினர். பிரம்மா திகைத்துப்போனார். ‘இத்தனை எண்ணிக்கையில் இவ்வளவு நீண்டகால தவமா’ என்று மிரண்டார். அவர்கள் முன்பு தோன்றி, 'ஏன் இத்தனை பேர் தவமியற்றுகிறீர்கள்?’’ என்று கேட்டார்.
  ‘‘உலகம் உய்யும் பொருட்டும், வேள்விகள் சிறக்கும் பொருட்டுமே செய்கிறோம். ஆனால், எங்களுக்குத் தேவை அமைதியான ஓர் தலம். மிருகங்களாலோ, மனிதர்களாலோ, இயற்கை சீற்றமான இடி, மின்னல்களாலோ எந்த பாதிப்பும் ஏற்படாத ஓர் தவச்சாலை வேண்டும்’’ என்றனர்.ஈசனின் பூரண சக்தி நிறைவாக உள்ள ஒரு தலத்தை பிரம்மன் கண்டார். அங்கு ஓங்கி வளர்ந்திருந்த பராய் மரங்களுக்குள் பரமன் அருவமாக கிடப்பதைப் பார்த்தார். தர்ப்பைப் புல்லை வளைத்து ஓர் இடம் நோக்கி வீச, அது தாருகாவனத்தில் சென்று வீழ்ந்தது. முனிவர்கள் மகிழ்ந்தனர். அவர்கள் மனமும் தியானத்தில் கவிழ்ந்தது. முனிவர்கள் பராய் தருக்களின் கீழ் பேரானந்தத்தை எய்தினர். அந்தப் புனித மரங்கள் இருந்த வனத்தை ‘தாருகாவனம்’ என்றழைத்தனர்.
 
  அந்தப் புராணச் சுவடுகளின் சான்றாக இன்றும் இந்தப் பராய் மரத்தை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது, கீழையூர் கண்ணந்தங்குடி. இந்தக் கிராம மக்கள் இந்த மரம் அறுநூறு வருடங்களாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த மரத்திற்கடியிலேதான் இந்த ஊரைக் காக்கும் அக்னி வீரனார் அருட்கோலம் பூண்டருள்கிறார். அக்னி வீரனாரின் உருவத்தையும், வந்த விதத்தையும் திகைப்பு அகலாமல் விவரிக்கின்றனர். ‘‘நாங்க சிறு வயசா இருந்தப்போவும் சரி, விவரம் தெரிஞ்சு வாலிபமா வளர்ந்தபோதும் சரி அக்னி வீரனாரை நிறைய தடவை பார்த்திருக்கோம். திடீர்னு சாயங்கால நேரத்துல செம்மன் புழுதி கிளம்பும். இந்தத் தெருவுல சுத்திகிட்டேயிருக்கும். குதிரை வர சத்தம் கேட்கும். சட்டுனு வெள்ளைக் குதிரையில வீரனார் போவாரு. ஒரு சொடுக்கு நேரத்துல வாளை வீசிக்கிட்டு வீரனாட்டம் பாய்ஞ்சு மறஞ்சுடுவாரு. முதல்ல நாங்க யாரோ போகறாங்கன்னு நினைச்சு பெரியவங்ககிட்ட சொன்னபோது ‘வீரனாருடா அது, ஜாக்கிரதை’ன்னாங்க. சாதாரணமா யார் கண்ணுலயும் படமாட்டாரு அவரு. ஏதோ உங்க புண்ணியம் உங்களுக்கு தெரியறாருன்னாங்க. எங்களுக்கு ஒரு கஷ்டம்னா முதல்ல நிக்கறவரே அக்னி வீரனாருதான். அவரை கனவுல கண்டவங்க உடனே பொங்க வச்சு, ஆட்டை பலி கொடுத்து நேத்திக்கடன் செய்வாங்க. இப்பவும் இந்த ஊர்ல இருந்து போனவங்க பல பேரை அவங்க கனவிலே தோன்றி, சொல்லி, இங்க அழைச்சிக்கிட்டு வந்துருக்காரு இந்த அக்னி வீரனாரு’’ என்று அந்த கிராமத்தைக் காக்கும் வீரனாரைப் பற்றி தொடர்ந்து சிலிர்ப்போடு பேசுகிறார்கள்.
 
அதுமட்டுமல்லாது குரல் நெகிழ்ந்து அருமையான ஒரு நாட்டுப்புறப் பாடலை பாடுகிறார்கள். அப்பாடல் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் நீள்கிறது; அவ்வூரின் புகழ் பாடுகிறது; அக்னி வீரனாரின் வீரத்தைப் பேசுகிறது; அவரின் பக்தர்களாக விளங்கிய சமூகத்தவரின் பிரிவுகளை வகைப்படுத்துகிறது. அழகான அர்த்தங்களோடும், அவர்களுக்கென்று அமைந்த உன்னத நாகரிகம் அப்பாடலில் தொனிக்கிறது. வாழ்க்கையை சீரமைக்கும் ஒழுக்கத்தை எளிமையான வரிகள் விவரிக்கின்றன. கேட்கக் கேட்கக் களிப்பூறும் தேனிசை பாயும் நாட்டுபுறப் பாடல் அது.
   சட்டென்று, அந்த பராய் மரத்தைப் பார்க்கும்போது ஒற்றை காலை மடித்து தவம் புரியும் யோகி  போன்றிருக்கிறது. யோகியின் மேனி முழுதும் புரளும் செஞ்சடைகள் போல மரத்தின் அடிப்பாகம் முறுக்கிப் பின்னியிருக்கிறது. அதுதவிர ஈசனின் அருட்சாரல் வீசும் பராய் மரத்தின் கீழ் பேச்சியம்மன் மற்றும் இதர தேவதைகளை நடுக்கற்களை விக்ரகங்களாகப் பாவித்து ஆராதிக்கின்றனர். அக்னி வீரனாருக்கு பராய் மரத்தடியிலேயே கோயில் அமைத்திருக்கின்றனர். இந்த அக்கினி வீரனாரின் சிலையைப் போன்றே திருச்செந்தூர் சந்நதியருகே ஒரு சிலை காணப்படுவதை இவ்வூரார் மெய்சிலிர்க்கச் சொல்கிறார்கள். இந்த அக்னி வீரனார், பாதை மாறிப்போன பலரை நல்வழிக்குத் திருப்பி அவர்களின் வாழ்வைக் காத்திருக்கிறார். பூஜை நேரங்களில் அந்தச் சிறிய கோயிலின் சூழலே மாறிவிடுகிறது. தஞ்சாவூருக்கு அருகேயுள்ள ஒரத்தநாடு எனும் ஊரை அடைந்து அங்கிருந்து 4 கி.மீ. தூரம் பயணிக்க கீழையூர் கண்ணந்தங்குடியை அடையலாம்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?