×

பித்ரு தோஷம், குல சாபம் நீங்க சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம்

இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் நம் ஒவ்வொருவரின் இப்பிறவி வாழ்க்கை அமைவது நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டே அமைவதாக கூறுகிறது. உலகில் மற்ற எந்த ஒரு உறவுகளையும் காட்டிலும் மகத்தான உறவு நமது பெற்றோர்களின் உறவாகும். தங்கள் குழந்தைகளுக்காக வாழ்வில் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பான்மை கொண்டவர்களாக பெற்றோர்கள் இருக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு அவர்கள் மறைந்த பிறகு இறுதி சடங்கு செய்யாத நிலை சில பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. இதனால் பித்ரு தோஷம் உண்டாகி அவர்களின் எதிர்கால சந்ததியினரை பலவகைகளில் பாதிக்கிறது.

இந்த பித்ரு தோஷம் தீர்ந்து நற்பலன்கள் ஏற்படுவதற்கான சிறந்த பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். தங்களின் பெற்றோர்கள் இறந்த சமயம் அவர்களின் வாரிசுகள் (ஆண் – பெண் இருவரும்) கூப்பிடு தூரத்தில் வசித்தாலும் வேண்டுமென்றே தங்களின் பெற்றோரின் இறுதி சடங்கிற்கு வராமல் தவிர்த்து விடுவதாலும், பெற்றோர்களின் இறுதி சடங்கிற்கு வந்த போதும் சொத்து பிரச்சனை மற்றும் இன்ன பிற காரணங்களுக்காக சண்டையிட்டு அந்த கோபத்தில் பெற்றோருக்கான ஈமைக் கிரியைகளை செய்யாமல் தவிர்த்து விடுபவர்களும் பித்ரு தோஷம் அடைவதாக பெரியோர்கள் கூறுகின்றனர். வெளியூர் வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் பயணத் தடை, தாமதம் காரணங்களால் தங்களின் பெற்றோர் இறுதி சடங்கு முடிந்த பின்பு வந்தாலும் அவர்களுக்கு பித்ருதோஷம் ஏற்படுவதில்லை.

தை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண், பெண் இருவரும் தங்களின் முற்பிறவியில் தந்தைக்கான ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்களாகவும், கார்த்திகை மாதத்தில் பிறந்த ஆண், பெண் இருவரும் முற்பிறவியில் தங்களின் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்களாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய காரணங்களால் ஏற்படும் பித்ரு தோஷத்தை போக்க கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.  ஒரு அமாவாசை தினத்தில் 100 கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்கு சென்று, அங்கு அந்த சந்தனத்தை உரசி எடுத்து, அந்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்ய சொல்ல வேண்டும். சிவனுக்கு செய்யப்படும் அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் நீங்கும்.

சிவன் கோவிலில் மேற்கூறிய பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் 100 கிராம் பச்சரிசி, ஒரு அகத்திக்கீரை கட்டு, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தில் ஒரு பசு மாட்டிற்கு உண்ணக் கொடுக்க உங்களின் பித்ரு தோஷம் நீங்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 9 அமாவாசை தினத்தில் செய்வதால் பித்ரு தோஷங்கள், சாபங்கள் முழுமையாக நீங்கி வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும்.

Tags :
× RELATED சுந்தர வேடம்