×

கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்

நீரின் அருமையை புராணங்கள் விளக்கத் தவறுவதில்லை. கங்கை எனும் தேவலோக நதியை கொணர்வதற்காக பகீரதன் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டான். நமது பாரத தேசத்தில் நீரை நீராகப் பார்க்காது தீர்த்தம் என்று ஏற்றம் கொடுத்துப் பார்த்தது. நதியை தெய்வமாக வணங்கியது. நதிகளை பாவம் போக்கி புண்ணியம் சேர்க்கும் புனிதனாகப் பார்த்தது. பெரும் ஞானியர் அனைவரும் நீரை வணங்கியிருக்கின்றனர். அப்படி வணங்கிய தீர்த்தங்கள் யாவும் ரிஷிகளின் பெயராலே பாரதமெங்கும் அழைக்கப்படுகின்றன. அதில் எல்லாவற்றிற்கும் தலையானதாக கருதப்படுவது கங்கை நீரேயாகும். கங்கா தீர்த்தமாகும். அந்த கங்கை பூமிக்கு வந்த கதையை அறிவோம் வாருங்கள்.
மகாபலிச் சக்ரவர்த்தி குனிந்து வாமனரின் அந்த முத்து போன்ற நகங்களுள்ள பாதங்களை கண்டான். மென்மையாக பற்றினான். மெல்ல மேலே பார்க்க வாமனரின் திருமேனி நெடுநெடுவென வளரத் தொடங்கியது. வானம் தாண்டியது. மேலேழ் லோகம் பரவியது. திசையெங்கும் அடைத்து நின்றது. ஒட்டுமொத்த பிரபஞ்சமுமே அவரின் திருமேனியாக உள்ளது பார்த்து தன்னை மறந்தான். ஓரடியில் பூமியை அளந்தார்.

இரண்டாவது அடியில் பிரம்ம லோக பரியந்தம், சகல லோகத்தையும் அளந்து அதையும் தாண்டி நின்றது. பிரம்ம லோகத்தில் பெருமாளின் திருவடியை கண்ட பிரம்மா ஆஹா என வியந்தார். ஸ்தம்பம் போன்றிருந்த அந்த பெரும் பாதத்தில் தன்னுடைய அனுஷ்டானத்திற்காக வைத்திருந்த தீர்த்தத்தை அபிஷேகமாக செய்தார். அந்த தீர்த்தம் அந்த பெரும்பாதத்தின் முழுமைக்கும் போதாமல் நகக் கணுவின் ஓரமாகச் சென்று அபிஷேகமாகியது. அந்த பிரம்ம லோகத்தில் அவளை விஷ்ணுபதி என்று அழைத்தார்கள். சகல ரிஷிகளும் எம்பெருமானின் திருப்பாதத்தையும் அதில் படர்ந்து பாய்ந்தோடிய கங்கையையும் கண்டு தொழுதார்கள். பெரிய ஸ்தம்பம் ஒன்றில் வெற்றிக் கொடி பறந்தால் எப்படியிருக்குமோ அதுபோல கங்கை இங்கு பாதத்தின் நகக்கணுவின் ஓரமாக அலை அலையாக பொங்கிப் பரவினாள்.

பலிச் சக்ரவர்த்தியால் கங்கை பிரம்மாவிடமிருந்து விஷ்ணு திவ்ய பாத ஸ்பரிசம் பட்டு நேராக துருவ லோகத்திற்குள் நுழைந்தாள். துருவ ஸ்வாமியோ ‘என் குலதெய்வத்தினுடைய சரணாகத விந்த தீர்த்தம் என்மீது விழுகிறதே’ என்று ஆனந்தமானான். அருகேயிருக்கும் சப்தரிஷிகளையும் சில்லென நனைத்தாள். இவ்வாறு ஒவ்வொரு உலகத்தையும் புனிதமாக்கிக் கொண்டே நகர்ந்தாள். சொர்க்க லோகத்திற்குள் புகுந்தாள். அவளை ‘‘வா மந்தாகினி’’ என்று அழைத்து துதித்தார்கள்.  விண்ணுலகம் மந்தாகினி... மந்தாகினி... என தலைமேல் கைகூப்பி தொழுதது.

பூவுலத்திற்குள் இறங்காது அங்கேயே சுழித்து சுழன்று கொண்டிருந்தது. பூலோகம் ஏங்கியது. ஏக்கத்தை நிறைவேற்ற சில தலைமுறைகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. சூர்ய வம்சத்தில் வந்தவனான சகரன் எனும் அரசன் சுமதி என்ற பெண்ணை மணந்து  அறுபதாயிரம் பிள்ளைகளை பெற்றான். யுகத்திற்கு யுகம் வம்சத்தை விருத்தி செய்தல் மாறுபடும். ரிஷி கர்ப்பம் என்பது நினைத்த மாத்திரத்தில் கர்ப்பம் தரிப்பது. அடுத்து தவ வலிமையை பொறுத்து எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதுபோன்று சகரனுக்கு அறுபதாயிரம் குழந்தைகள் பிறந்தன. சகரன் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தான். அசுவமேத யாகங்கள் செய்து நாட்டை வளமாக்கினான். அப்போது இந்திரனுக்கு சகரன் தன்னுடைய இந்திர பதவியை பறித்துக் கொண்டுவிடுவானோ என பயந்தான். அசுவமேத யாகத்தில் பயன்படுத்தப்படும் குதிரையை மறைத்தான்.

சகரன் தன்னுடைய அனைத்து பிள்ளைகளையும் யாகக் குதிரையை தேடும்படி அனுப்பினான். பூமண்டலத்தின் மேல்பகுதியில் தேடினார்கள்; கிடைக்காததால் பூமிக்கு கீழேயுள்ள பாதாளத்தை ஊடுறுவி பயணித்தனர். பாதாளத்தில் தவமிருந்த கபில முனிவருக்கு அருகே யாகக் குதிரையை கண்டனர். கோபமானார்கள். இவர்தான் இதை கவர்ந்து வந்திருப்பாரோ என தாக்க தொடங்கிய அந்த கணத்தில் அவர்கள் எரிந்து சாம்பலானார்கள். சகரன் தன் பிள்ளைகளை காணாது வேதனையுற்றான். தேசினி எனும் மங்கைக்கு பிறந்த மற்றொரு மைந்தனான அசமஞ்சனிடம் விஷயத்தை சொன்னான். சமஞ்சன் என்றால் சமர்த்தனமாகப் பேசுவான். காரியம் செய்வான்.

அசமஞ்சன் எனில் பித்துப் பிடித்ததுபோல பேசி, வேலையையும் கெடுப்பான். அசமஞ்சன் இந்திர ஜாலங்கள் செய்வதில் மன்னனாக இருந்தான். திடீரென குழந்தைகளை நதியில் வீசி காணாமல் போகச் செய்து மீண்டும் மீட்டு வருவான். அசமஞ்சன் ஞானப் பாதையில் ஈடுபாடு கொண்டு உலகில் உள்ளவர்கள் தன்னை வெறுக்கும்படி நடித்து இறுதியில் தவமியற்றவும் புறப்பட்டான் என்கிறது வேறொரு புராணம். ஆனால், இவனாலும் அறுபதாயிரம் பிள்ளைகளை மீட்டுக் கொண்டுவர முடியவில்லை. ஆனால், இவனுக்குப் பிறந்த மகனான அம்சுமான் மட்டும் அறுபதாயிரம் பேர்கள் சென்ற பாதைகளை கண்டுபிடித்தான். பாதாளத்தை அடைந்தான். கபில முனிவரை வணங்கினான். என்ன செய்வது என்று பணிவோடு கேட்டான்.    

கபில முனிவர், ‘‘இதுதான் உன் பாட்டனார் சகரன் அசுவமேத யாகம் செய்வதற்காக வைத்திருந்த குதிரை. இந்தச் சாம்பல் குவியல்தான், அறுபதாயிரம் சகர புத்ரர்கள்.  விண்ணுலகில் பாயும் கங்கை இவர்கள் மீது பட்டால் உயிர் பெறுவார்கள்’’ என்று ஆசிர்வதித்தார். குதிரையை மட்டும்தான் அம்சுமானால் மீட்க முடிந்தது. கங்கையை கொண்டு வர முடியவில்லை. அம்சுமான் இறந்து போனான். அவருடைய பேரனும், திலீபனின் மகனுமான பகீரதன்தான், ‘‘நான் எப்படியேனும் கங்கையை கொண்டு வருகிறேன்’’ என்று கடுந்தவமிருந்தான். குளிர்ந்திருந்த கங்கையே பகீரதனின் ஒற்றைக்கால் தவத்தை எண்ணி தவித்துப்போய் பகீரதன் முன் உதித்தாள்.

‘‘நான் வருகிறேன். ஆனால், என் வீழ்ச்சியை தாங்கும் பலம் இங்கு யாருக்கு உண்டு. என் வேகத்தால் பூமியைத் தாண்டி அதல, பாதாள, ரசாதலம் சென்று விட்டால் என்ன செய்வீர்கள்’’ என்றாள். பகீரதன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். காட்சி தந்த ஈசனிடம் தாங்கள்தான் கங்கையை தங்கள் ஜடையில் தரிக்க வேண்டுமென்று கேட்டுப் பணிந்தான். விண்ணுலக நாயகி பூவுலகிற்கு பயணித்தாள். இமயத்தின் மடியில் தவழ்ந்திறங்கியவளை சிவபெருமான் தன்னுடைய ஜடாபாரத்தில் தாங்கினார். இப்போதுதான் மந்தாகினி என்ற பெயருடைய நதி கங்கா என்று பெயர் பெறுகிறது.

கௌஹ் என்றால் பூமி. காம்ஹா என்றால் அடைந்தாள். இதைச் சேர்த்து பொருள் கொண்டால் (கௌஹ்+காம்ஹா) கங்கா என்று வரும். தேவலோக நதி பூமியை அடைந்து கங்கா என்று பெயர் பெற்றாள். பகீரதன் இந்த அரிதான நிகழ்வைக் கண்டு ஆனந்தித்தான். அதேசமயம் அப்பேற்பட்ட கங்கை சிவனுடைய ஜடாபாரத்தில் எப்படி தெரியுமா இருந்தாள். நல்ல பனிக்காலத்தில் அறுகம்புல்லின் நுனியில் முத்துபோன்று நீர்த்துளிகள் சரமாக இருக்கும். அதுபோல ஈசனின் ஜடையின் ஓரத்தில் தாரையாக கொட்டினாள். இமயத்தின் உச்சியில் தோன்றி வந்ததால், அதற்கு அரசனான ஹிமவானுடைய புத்திரியாக தன்னை பாவித்தாள்.

ஹைமவதி என்ற திருப்பெயரிட்டு அழைத்தார்கள். ஈசனுடைய தலையை ஆனந்த மயமாக செய்ததால் அலகநந்தா என அன்போடு அழைத்தனர். அலகம் என்றால் கேசம், ஜடை என்றும், அதை ஆனந்தப் படுத்தியதால் அலகநந்தா என்றனர். கங்கையை தாங்கியதால் ஈசன் கங்காதரனாக அருட்கோலம் காட்டினார். ஆனந்தமாக ஓடியவள் நேரே பாதை அறியாத குழந்தைபோல ஜன்ஹூ என்ற மகரிஷியின் ஆசிரமத்திற்குள் கொலுசு சத்தமோடு நடக்கும் குழந்தைபோல குடுகுடுவென நுழைந்தாள். ஜன்ஹூ கங்கையை சிறு கமண்டலத்தில் தாங்கி வேகம் குறைத்தார். பகீரதன் கேட்டுக் கொண்டதால் கங்கையை விடுவித்தார். இதனால் கங்கைக்கு ஜான்ஹவி என்ற பெயரும் உண்டு. ஜன்ஹூ மகரிஷி, ‘‘இவள் என் மகளைப் போன்றவள்’’ என்று சீராட்டினார்.

இவ்வளவு தடைகளையும் பொறுமையாக தந்தையின் பின்னே நடக்கும் மகள்போல பகீரதனின் பின்னால் அடக்கமாக வந்தாள். பகீரதனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்ததால் இவளுக்கு பாகீரதி என்ற பெயரும் உண்டு. பகீரதன் பாதாளத்திலுள்ள சகர புத்திரர்களின் மீது கங்கையை பாயச் சொன்னாள். அறுபதாயிரம் பேர்களும் உயிர் பெற்றனர். கங்கை பாதாளத்திற்கு பாய்ந்தபோது போகவதி எனும் திருநாமத்தை ஏற்றாள். பகீரதப் பிரயத்தனம் என்பார்களே, அந்த பகீரதன் எத்தனை கஷ்டப்பட்டு கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கேயோ எப்போதே உருவானவளை புராண காலத்திய பகீரதன் கொண்டு வந்தான். அழகாக விளக்கினார். பரீட்சித்தோடு, கங்கையும் சேர்ந்து கேட்டாள்.

பகீரதன் திடீரென்று கங்கை வேண்டுமென நினைக்கவில்லை. பரம்பரை பரம்பரையாக முயற்சித்த விஷயம் பகீரதனால் முடிந்திருக்கிறது. கங்கை பூலோகத்தில் மட்டுமல்லாது, மூவுலகிலும் பாய்ந்து செல்கிறாள். கங்கை ஞான சொரூபமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். யமுனை பக்தியை பிரவாகமாக பொங்கிக் கொண்டிருக்கிறாள். சரஸ்வதியோ வைராக்கிய சொரூபிணியாக விளங்குகிறாள். பக்தி, ஞானம், வைராக்கியம் இந்த மூன்றும் சேர்வதே திரிவேணி சங்கமமாகும். இங்கு வைராக்கியம் எனும் சரஸ்வதி அந்தர்வாகினியாக, சூட்சுமமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். இந்த ஞானரூபமான கங்கையை தரிசித்தாலும், மூழ்கி எழுந்தாலும் போதும். கங்கையை அதனாலேயே தீர்த்த ராஜம் என்பார்கள்.

கிருஷ்ணா
படங்கள்  : சுவாமிநாதன் நடராஜன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?