மறுமை சாத்தியம் இல்லையா?

இஸ்லாமிய வாழ்வியல்

இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மக்காவில் தம் சத்திய அழைப்புப் பணியைத் தொடங்கியபோது மறுமைக் கொள்கைக்கு முன்னுரிமை அளித்துப் பரப்புரை செய்தார்கள். அதாவது, மரணத்திற்குப் பிறகு மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள்...மறுமையில் தம் செயல்களுக்கு இறைவனிடம் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியபோது அது மக்கா நகர மக்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியது.“மறுமை வருமாம்...அது வந்துவிட்டால் முற்கால, பிற்கால மனிதர்கள் அனைவரும் உயிருடன் வருவார்களாம்....மண்ணறையில் அடக்கப்பட்டு மக்கி மண்ணாகி உருக்குலைந்துபோன மனிதர்கள் மீண்டும் எழுந்துவருவார்களாம்.. இதெல்லாம் நடக்குமா என்று வியப்புடனும் பரிகாசத்துடனும் பேசவும் கேட்கவும் செய்தனர்.வானம்-பூமியைப் படைத்த இறைவனுக்கு மறுமையைக் கொண்டு வருவதொன்றும் இயலாத செயல் அல்ல என்று இறைவன் அவர்களுக்கு மறுப்பும் விளக்கமும் அளித்தான்.

“அவர்கள் எதைக் குறித்துத் தங்களுக்குள் வினவுகிறார்கள்?

மறுமை எனும் மகத்தான செய்தியைக் குறித்துதான் அவர்கள் வினவுகிறார்கள்.

அதன் விஷயத்தில் அவர்கள் முரண்பட்ட கருத்துகளில் இருக்கிறார்கள்.

அவ்வாறில்லை. (மறுமையை நிராகரிப்பதன் விளைவை) மிக விரைவில் அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.

(மறுமையை நிகழச் செய்யும் ஆற்றல் நமக்கு இல்லையா என்ன? இதோ) பூமியை நாம் விரிப்பாக ஆக்கவில்லையா?

மேலும் மலைகளை முளைகளாக ஆக்கி பூமியை நாம் உறுதிப்படுத்தவில்லையா?

மேலும் ஆண்-பெண் இணைகளாக உங்களை நாம் படைத்திருக்கின்றோம்.

மேலும் உங்களின் தூக்கத்தை அமைதி அளிக்கக்கூடியதாய் ஆக்கியிருக்கின்றோம்.

மேலும் இரவை ஆடையாக ஆக்கியிருக்கின்றோம்.

மேலும் வாழ்வாதாரத்தைத் தேடும் நேரமாகப் பகலை ஆக்கியிருக்கின்றோம்.

மேலும் உங்களுக்கு மேலே வலுவான ஏழு வானங்களை நாம் படைத்திருக்கிறோம்.

மேலும் ஒளியை உமிழும் விளக்கையும் நாம் அமைத்திருக்கின்றோம்.

கொட்டும் மழையை மேகங்களிலிருந்து பொழிவிக்கவும் செய்தோம்.

அதன் மூலம் நாம் தானியங்களையும் தாவரங்களையும் வெளிக்கொணர்ந்தோம்.

அடர்ந்த தோட்டங்களையும் உருவாக்கினோம்.” (குர்ஆன் 78:1-16)

இவற்றை எல்லாம் செய்த இறைவனுக்கு மறுமையைக் கொண்டு வருவதும் சாத்தியம்தான் என்று குர்ஆன் அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.

மனிதர்கள் கண் எதிரே அன்றாடம் காணும் இயற்கையின் சான்றுகளையே ஆதாரங்களாய்ச் சமர்ப்பித்து இறைவனின் ஆற்றலைச் சிந்திக்கும்படி தூண்டுகிறது.வாழ்வு எப்படி உண்மையோ, இரவு - பகல் மாறி மாறி வருவது எப்படி உண்மையோ, ஆண் - பெண் படைக்கப்பட்டிருப்பது எப்படி உண்மையோ, மழை பொழிவதும் தாவரங்கள் வளர்வதும் எப்படி உண்மையோ அப்படி மறுமை வருவதும் உண்மைதான் என்று அழுத்தமாக அருள்மறை கூறுகிறது.ஆகவே மறுமை உண்டு, அது உண்மை என்று நம்புவோம். இம்மையில் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்ந்து மறுமையிலும் ஈடேற்றம் அடைவோம்.

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“திண்ணமாக மறுமை எனும் தீர்ப்பு நாள் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நேரமாக உள்ளது. எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் (மண்ணறை களிலிருந்து வெளியேறி) கூட்டம் கூட்டமாய் வருவீர்கள்.” (குர்ஆன் 78:17-18)

Related Stories: