பசும் பால் கொடுத்து சித்தரின் தாகம் தீர்த்த குமராண்டி ஞானியார்

நாஞ்சில் நாட்டின் புராதான இயற்கை அடையாளம் மருந்துவாழ்மலை. ஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகைக்காக மலையை பெயர்த்து எடுத்து இலங்கை கொண்டு சென்றார். அதில் இருந்து விழுந்த துண்டுதான் மருந்துவாழ்மலை. இங்கு எண்ணற்ற மூலிகைகள் உண்டு என்பது கர்ணபரம்பரை கதை. இந்த மலையடிவார கிராமமான குலசேகரபுரத்தில் அமைந்துள்ளது ஞானியார் குமராண்டி சன்னதி. இந்த கோயிலின் வரலாறு சுவாரசியமானது.

குமராண்டி 1852ம் ஆண்டு ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். சகோதரி பிச்சை வீட்டில் வாழ்ந்து வந்தார். தினசரி கன்று காலிகளை மேய்ச்சலுக்காக மருந்துவாழ்மலைக்கு ஓட்டி செல்வது வழக்கம். ஒருநாள் மலையில் இருந்த சித்தர் ஒருவருக்கு தாகம் எடுத்தது. உடனே குமராண்டியிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது தண்ணீர் இன்மையால், பசு ஒன்றிலிருந்து, பாலை கறந்து கொடுத்து சித்தரின் தாகத்தை தீர்த்துள்ளார்.

இதில் மனமகிழ்ச்சி அடைந்த சித்தர் குமராண்டியின் நாவில் ஏதோ எழுதி சென்றுள்ளார். அன்று முதல் படிப்பறிவு இல்லாத குமராண்டி, புத்திசாலியாக மாறி, தீவிர முருக பக்தனாக மாறினார். நாவன்மை மிக்கவராக மாறிய குமராண்டி பிரம்மச்சாரியம் காத்து ஞானியார் பட்டம் பெற்றார். பின்னர் பல தீர்த்த யாத்திரைகள் சென்று 83 வருடங்கள் வாழ்ந்தார். 1908ம் வருடம் வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஏற்கனவே கூறியது போல், ஜீவசமாதி அடைந்தார். சமாதி அடைந்த இடத்தில் சிவன் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் கட்டப்பட்ட கதையும் ஜீவனானது. அவர் சமாதியான இடத்தில் புற்று ஒன்று வளர்ந்துள்ளது. அதன் அருகே வில்வசெடியும் வளர்ந்துள்ளது. புற்றை அகற்றுகையில், சிறிய அளவிலான சிவலிங்கம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. வில்வமரம் மற்றும் சுயம்புவின் காரணமாக சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாகத்திற்கு பிறகு வரும் திருவோண நட்சத்திரத்தன்று குருபூஜை கொண்டாடப்படுகிறது. அன்று முழுவதும் அபிஷேகங்கள், ஆராதனைகள், மலர் அலங்காரங்களுடன் பூஜை நடைபெறும். பல வகை கனிகளுடன் பஞ்சாமிர்தமும், கஞ்சி மற்றும் காய்கறி கூட்டும் பரிமாறப்படுகிறது. திருவிதாங்கூர் ராணியின் நோயை தீர்த்ததால், ஞானியாருக்கு அரச குடும்பம் சார்பில் தங்கம் வேய்ந்த ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டது. ஞானியார் குடும்பத்தை சேர்ந்த தெற்கு பண்ணை வீட்டில் உள்ள இந்த மாலையை குருபூஜை அன்று சிவலிங்கத்திற்கு அணிவிக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது. திருவிதாங்கூர் மட்டுமின்றி எட்டயாபுரம் அரச பரம்பரையுடனும், ஞானியார் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.ேகாயில் முன்பு நன்னீர் செட்டி கிணறு உள்ளது. வற்றாத இந்த கிணற்றில் இருந்து குலசேகரநங்கை அம்மனுக்கு புனிதநீர் கொண்டு செல்லப்படுகிறது.

அளவு குறையாத பதநீர்

ஞானியார்  குமராண்டி ஆண்டுதோறும் வைகாசி விசாகத்திற்கு திருச்செந்தூருக்கும், இதர  வெள்ளிக்கிழமைகளில் மருங்கூர் முருகன் கோயிலுக்கும் செல்வது வழக்கம். அப்படி  செல்லும் போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதுக்குளம் அருகே  பதநீர் கேட்டுள்ளார். குறைவான அளவே இருந்த பதநீரை இறக்கியவர்  அளித்துள்ளார். அப்போது பதநீர் குடிக்க, குடிக்க பதநீரின் அளவு குறையவில்லை. தற்போது அந்த  இடம் ஞானியார்குடியிருப்பு என அழைக்கப்படுவதாகவும், ஈத்தாமொழி அருகே  குமராண்டி தருவை என்ற ஊரும் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: