நீராடிய பின் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும் ஏன் ?

குளித்த பின் முதலில் முதுகைத்தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை.

இதில் நம்பத்தகுந்த சுவாரசியமான ஒர் விஷயம் அடங்கியிருக்கின்றது. நாம் குளிப்பதற்காக தலையில் நீரூற்றும் போது ஸ்ரீதேவியும் மூதேவியும் உடலிலிருந்து வெளியேறுகின்றனர். பின்னர் குளித்து முடித்ததும் நமது உடலில் எந்த பாகத்தில் முதலாவது ஈரம் துடைத்து சுத்தமாகின்றதோ அப்பாகத்தில் மூதேவி நுழைந்து விடுவாள். ஏனென்றால் இப்போராட்டத்தில் வெற்றியடைவது தீமையான மூதேவியே. தீமைகள் செய்யும் மூதேவி முந்தி வருகிறாள். நன்மைகள் செய்யும் ஸ்ரீதேவி மெதுவாகவே வந்து நம்மிடம் வாசம் செய்வாள். அதனால் முதலில் முதுகை துடைத்து முந்தி வரும் மூதேவியை முதுகில் வைத்துக்கொண்டு, இரண்டாவதாக முகம் துடைக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் அங்கு ஸ்ரீதேவி புகுந்து நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள். நாமும் அன்றைய தினம் முழுவதும் முக மலர்ச்சியோடு திகழலாம். மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்து இறுக்கமான முகத்துடனே, அன்றைய நாளை கழிக்க வேண்டியது தான். அதாவது அன்றைய நாள் அம்போ ! அதனால் முதலில் முதுகைத் துடைத்த பின் முகம் துடைக்க வேண்டுமென்ற போதனை பின் தலை முறைகளுக்கு அளித்துள்ளனர் முன்னோர்கள்.இதைக் கேட்டதும் முற்றிலும் மூட நம்பிக்கை என்றெண்ணி தள்ளி விட வேண்டாம். இந்த நம்பிக்கையின் பின்னால் ஒரு மகத்தான அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.

இல்லாவிடில் இந்த போதனையை விட்டுச் சென்றிருக்க மாட்டார்கள் முன்னோர்கள்.குளிக்கும் போதும் நம் உடலின் எல்லா பாகங்களிலும் குளிர் பரவுகின்றது. மிக அதிகமான குளிர் அனுபவப்படுவது முதுகில் ஆகும். முதுகெலும்பில் அதிக நேரம் குளிர் ஏற்க வேண்டியது வந்தால் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. இதனால் உண்டாகும் தீங்கைத் தவிர்க்கவே குளித்த உடன் முதுகைத்துடைக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளனர்.

ஆனால் ஒரு வாளி குழாய்த்தண்ணீரில் குளித்து முடிப்பவர்களுக்கு இந்த சாஸ்திரம் பொருந்தாது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து முழுமையாக தலை குளிப்பவர்களுக்காக வகுக்கப்பட்ட விதி இது.

- கார்த்திக் ஷண்முகம்

Related Stories: