ஐஸ்வர்யங்கள் பெருக ஆனி பௌர்ணமி சிறப்பு வழிபாடு!!

தை மாதத்தில் சூரியன் உத்தராயணம் எனப்படும் வடக்கு நோக்கிய தனது பயணத்தை துவங்குகிறது. அந்த சூரியனின் வடக்கு திசை நோக்கிய பயணத்தின் இறுதி மாதமாக ஆனி மாதம் இருக்கிறது. தமிழ் வருட கணக்கின்படி சித்திரை, வைகாசி அடுத்து மூன்றாவது மாதமாக இந்த ஆனி மாதம் வருகிறது. ஆனி மாதம் பல ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விழாக்கள், தினங்கள் கொண்ட மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் வருகின்ற ஒரு சிறப்பான நாள் தான் ஆனி பௌர்ணமி. இந்த ஆனி பௌர்ணமி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆனி மாத பௌர்ணமி தினம் பொதுவாக கேட்டை நட்சத்திர தினத்தில் வருகின்றது. ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று காரைக்காலில் காரைக்கால் அம்மையாரின் தெய்வீக ஆற்றலை போற்றும் விதமாக வருடந்தோறும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. மேலும் கோயில்களில் இறைவனுக்கு முக்கனிகள் படைத்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆனி பௌர்ணமியில் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்வது மிகவும் சிறந்த பலன்களை தரும்.

 இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆனி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆனி பௌர்ணமியில் கிருஷ்ண பகவானுக்கும், கற்புக்கரசியான சாவித்திரி தேவிக்கும் விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பானதாகும்.

முன்னிரவு வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த ஆனி பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்ளலாம். ஆனி பௌர்ணமி தினத்தில் கோவில்களில் பக்தர்கள் அருந்துவதற்கு பழச்சாறு போன்றவற்றை தானம் செய்வது நல்லது. ஆனி மாதம் பௌர்ணமி தினத்தில் மேற்கூறிய முறையில் விரதம் இருந்து தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு ஐஸ்வர்யங்கள் பெருகும்.

பெண்களின் கணவர்களின் ஆயுள்பலம் கூடும். விரும்பிய நபரையே மணமுடிக்கும் அமைப்பு உண்டாகும். நீண்ட காலமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மாணவர்கள் விரும்பிய உயர் கல்வியை கற்கும் சூழல் ஏற்படும். கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வார்கள். உணவு, உடை ஆகியவற்றிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படாது.

Related Stories: