வெற்றி தருவான் விசாக நாயகன்

* வைகாசி விசாகம்: 18-5-2019

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் வெளியான நெருப்பில் இருந்து அவதரித்தவர் முருகப்பெருமான். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு  வைகாசி மாதத்தில் விசாக விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம். வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் வரும் நாளில், நாம் முருகப்பெருமானை  முறையாக வழிபட்டால் வெற்றி நிச்சயம் வந்து சேரும். திருப்பரங்குன்றத்தை முதல் படைவீடாகவும், திருச்செந்தூரை 2ம் படைவீடாகவும், பழநியை  3ம் படைவீடாகவும், திருவேரகம் எனப்படும் சுவாமிமலையை 4ம் படைவீடாகவும், திருத்தணியை 5ம் படைவீடாகவும், பழமுதிர்சோலையை 6ம்  படைவீடாகவும் கொண்ட ஆறுபடை வீட்டு அழகனை வைகாசி விசாகம் அன்று வழிபடுவது சிறப்பானதாகும். அன்றைய தினம் முருகனுக்கு  வாழைப்பழம், கந்தரப்பம் வைத்து வழிபட்டு வந்தால் வாழ்க்கை நன்றாக அமையும்.

வாரியார் சுவாமிகள் ‘முருகு, முருகு என்று நீ உருகு உருகு’ என்பார். அந்த முருகப்பெருமானிடம் மும்மூர்த்திகளும் அடக்கம் என்று சொல்வார்.  காக்கும் கடவுளாகிய முகுந்தன், அழிக்கும் கடவுளாகிய ருத்திரன், படைக்கும் கடவுளாகிய கமலோற்பவன் ஆகிய மூவரின் முதல் எழுத்துகளை ஒன்று  சேர்த்தால் ‘முருகா’ என்ற பொருள் கிடைக்கும். எனவே முருகனை வழிபட்டால் மும்மூர்த்திகளை வழிபட்ட பலன் வந்து சேரும்.

ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து நாம் கொண்டாடுகிறோம். நட்சத்திர அடிப்படையில் வைகாசி  விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசிமகம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.  நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களைக் கொண்டாடும் பொழுது, அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமையும் என்பதை முன்னோர்கள் சொல்லி  வைத்திருக்கிறார்கள். அந்த விதத்தில் விசாக நட்சத்திரம் என்பது முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகும்.

வைகாசி விசாகத்தன்று 18-5-2019ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதும் நல்லது. அன்றைய தினம் முருகப்பெருமான் வீற்றிருக்கும்  ஆலயத்திற்குச் சென்று பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இளநீரால் அபிஷேகம் செய்தால் நன்மக்கட்பேறு உண்டாகும்.  கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் ஆரோக்கியம் சீராகும். இந்த இனிய நாளில் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் பகை விலகும். பாசம்  பெருகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளம் நடைபெறும்.

வருமானம் பெருகும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். அன்றைய தினம் மோர், பானகம், தயிர்சாதம், இளநீர்  போன்றவற்றைத் தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். வைகாசி விசாகத்தன்று வடிவேலன்  சந்நதிக்குச் சென்று, மனமுருகி முருகனின் பாடல்களைப் பாடி வழிபாடு செய்யுங்கள்.

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள்  இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள்   ஜோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம்  திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை  விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் பிறந்தார். வைகாசி விசாக  தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகக்கடவுளின் அவதாரத் திருநாளை ஆன்மிகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர்.  தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே

ஏற்பட்டது முருகனின் தோற்றம்.

சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகன். சரவணப் பொய்கையில்  விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அந்தக் குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்தனர். அந்த ஆறு  குழந்தைகளையும் பராசக்தி எடுத்து அணைக்க அந்த அவை ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தையாக மாறின.

முருகன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், பக்தர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகன் ஆகவும்,  சரவணப் பொய்கையில் இருந்து வந்ததால் சரவணபவன் என்றும், ஆறு முகங்களை கொண்டவராக இருப்பதால் ஆறுமுகன் என்றும்  அழைக்கப்படுகிறார். விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை  வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும்.

துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து  முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம்  ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். விசாக நன்னாளில் பக்தர்கள் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ, நம ஓம் முருகா என்பவற்றில் ஏதாவது ஒன்றை  சொல்லலாம். வைகாசி விரதம் இருப்பவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

 ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து நாம் கொண்டாடுகிறோம். நட்சத்திர அடிப்படையில் வைகாசி  விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசிமகம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.  நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களைக் கொண்டாடும் பொழுது, அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமையும் என்பதை முன்னோர்கள் சொல்லி  வைத்திருக்கிறார்கள். அந்த விதத்தில் விசாக நட்சத்திரம் என்பது

முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகும்.

வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்  சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள்  அகலும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.

முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக  நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவே தான் திருச்செந்தூர் முதல்  தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

அள்ளிக்கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக உள்ள தெய்வமாகவும், கூப்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் வைத்திருப்பதாலும்  முருகப்பெருமான் மீது மக்கள் அளவிற்கு அதிகமாக பக்தி வசப்பட்டுள்ளனர். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்றும், பழத்திற்காக போட்டியிட்டு  பழநி மலையில் குடிகொண்டவன் என்றும், சூரபத்மனை போராடி வெற்றிகொண்ட சத்ரு சம்ஹாரனாகவும் மக்கள் நினைத்து வழிபடும் மகத்தான  தெய்வம் முருகக்கடவுள்.

வடிவேல் முருகனின் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சித்து வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டால் அற்புதப் பலன்கள்  கிடைக்கும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம். ஐந்துமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பது நம்பிக்கை.  மயில் மீது ஏறி விரைந்து வந்து மால்மருகன் உங்களுக்கு வரம் தருவான்.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு மகிமை இருக்கிறது. ஆடி மாதம் என்றால் அது அம்மனுக்கு உகந்தது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது,  கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும், ஐயப்பனுக்கும் உகந்தது. அதுபோல வைகாசி மாதம் முருகப்பெருமான் உருவான  மாதம். இந்த வைகாசி மாதம் முழுவதுமே முருகப்பெருமானின் சக்தி நிறைந்திருக்கிறது. வசிஷ்ட மகரிஷியிடம் மஹாராஷ்டிர தேசத்தின் மன்னனான  விச்வசேனன் என்பவர், “என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?’’ எனக் கேட்டார். நடந்தவை  நடப்பவை  நடக்க இருப்பவை அனைத்தையும் தெள்ளத்  தெளிவாக கூறினார் வசிஷ்ட முனிவர். இதை கேட்ட அரசர் ஆச்சரியம் அடைந்தார். “உங்களால் எப்படி நேரில் பார்த்தது போல் சொல்ல முடிகிறது?.  என்று கேட்டபோது, “வைகாசிமாதம் முழுவதும் விரதம் இருந்ததால் கிடைத்த அருள்” என்றார் வசிஷ்ட மாமுனிவர்.

குடம் பாலில் ஒரு துளி தயிர்பட்டால் அந்த குடம் பாலும் தயிராகி, அந்த தயிரை கடைந்து வெண்ணையாக்கி, வெண்ணையை உருக்கி நெய்யாக்கி,  அது பாலைவிட நல்ல விலை போவது போல, வைகாசி மாதம் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருளால் அந்த பக்தனுக்கு வாழ்வே  சிறப்பாகும்  எந்நாளும் வசந்த காலமாகவே மாறிவிடும்

சூரபத்மன், சிவபெருமானை நினைத்து கடுமையாக தவம் இருந்தான். இந்த தவத்தை ஏற்ற ஈசன், சூரபத்மன் முன் தோன்றி, “உனக்கு என்ன வரம்  வேண்டும்?. என்று கேட்டார். “உயிர் இருக்கும்வரைதான் எதையும் சாதிக்கலாம்.

ஆகவே நாம் மரணம் இல்லா வரத்தை கேட்கலாம்” என்ற எண்ணத்தில், “எனக்கு மரணமே வரக்கூடாது. அத்தகைய வரமே நான் விரும்புவது” என்று  சூரபத்மன் சிவபெருமானிடம் கேட்க, அதற்கு இறைவன், “தோன்றும் யாவும் மறையக் கூடியதே. எல்லோருமே இறவா வரத்தை பெற்றால் உலகமே  தாங்காது. ஆகவே இந்த வரத்தை உனக்கு தர முடியாது” என்றார் ஈசன். “அப்படியா…? சரி. அப்படியானால் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவனால்  எனக்கு மரணம் வரக்கூடாது” என்று சாமர்த்தியமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு கேட்டான் சூரபத்மன். இறைவனும் “அவ்வாறே ஆகட்டும்” என்று  ஆசி வழங்கினார். இந்த வரத்தை பெற்ற பிறகு சூரபத்மனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

அந்த பூலோக மக்களையும், தேவர்களையும் கண்மூடித்தனமாக தொல்லைப்படுத்திகொண்டு இருந்தான். இதனால் பொறுமை இழந்த தேவர்கள்  சிவபெருமானிடம் சென்று தங்களை காப்பாற்றும்படி வேண்டினார்கள். சிவபெருமான், சூரபத்மனை அழிக்க என்ன செய்யலாம் என்று  சிந்தித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அன்னை பார்வதி தேவி, “விநாயகனை அனுப்பினால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்” என்று கூற,  அதற்கு இறைவன், “விநாயகரால் சூரபத்மனை அடக்க முடியுமே அன்றி அழிக்க முடியாது. காரணம், ஒரு பெண்ணால் உருவான ஜீவனால் தமக்கு  மரணம் நேரக்கூடாது என்ற வரத்தை என்னிடம் வாங்கினான்.

அதனால்தான் சொல்கிறேன், உன் சக்தியால் உருவான விநாயகப்பெருமானால் சூரபத்மனை அடக்கி வைக்கமுடியுமே தவிர நிரந்தரமாக தீர்க்க  முடியாது. விரோதத்தையும் நெருப்பையும் வேரோடு அழித்துவிட வேண்டும். இல்லை என்றால் பதுங்கி பாயும் புலிபோல் விஸ்வரூபம் எடுத்துவிடும்.”  என்ற இறைவன், தன் நெற்றிக்கண்ணால் ஆறு தீப்பொறிகளை தோன்றச் செய்து, அந்த தீப்பொறிகளை வாயுபகவானிடமும், அக்னிபகவானிடமும்  தந்து, அந்த தீப்பொறிகளை கங்கையாற்றில் விடும் படி உத்தரவிட்டார் சிவபெருமான். இறைவனின் கட்டளையை ஏற்று, அத்தீப்பொறிகளை  கங்கையில் சேர்ந்தார்கள்.

கங்கை தேவி அந்த தீப்பொறியை இமயமலைசாரலில் உள்ள சரவணப்பொய்கையில் சேர்ந்தார். அந்த சரவணபொய்கையில் இருந்த ஆறு தாமரை  மலர்களில், அந்த தீப்பொறி சேர்ந்து ஆறு குழந்தையாக உருவெடுத்தது. அந்த ஆறு குழந்தைகளை வளர்க்க, ஆறு கார்த்திகை பெண்களை நியமித்தார்  திருமால். கார்த்திகை பெண்களும் முருகப்பெருமானை தங்களின் குழந்தையாகவே பாவித்து வளர்ந்தார்கள். பிறகு சக்திதேவியின் சக்தியால் அந்த  ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாக வடிவெடுத்தது. இதனால் முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற பெயரும் ஏற்பட்டது.

அத்துடன், கார்த்திகை பெண்கள் முருகப்பெருமானை வளர்த்ததால் “கார்த்திகேயன்” என்ற பெயரும் பெற்றார். முருகப்பெருமான் தோன்றியது வைகாசி  மாதம்  விசாகநட்சத்திரம்  பௌர்ணமி திருநாள். சூரபத்மனை அழித்து தேவர்களுக்கு மனநிம்மதியை தந்தார் ஆறுமுகப் பெருமான். அன்றிலிருந்து  இன்றுவரை தம்மை வணங்கும் பக்தர்களுக்கு வெற்றியை தந்து அருட்பாலிக்கிறார். வைகாசி மாதம் முழுவதும் மட்டுமல்லாமல் தினந்தோறும், நம்  தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்கினால் வணங்குபவர்களுக்கு பேராற்றல் கிடைக்கும். முருகப்பெருமானுக்கு முல்லை மலர்  அணிவித்தால் இன்னல்கள் மறையும், தேன் அபிஷேகம் செய்தால் இசை ஞானமும், கல்வியில் ஏற்றமும், இனிய குரலும் கிடைக்கும்.

முருகப்பெருமானின் மகிமைகளை படிக்க படிக்க, கந்தன் அருள் கிட்டும். முருகப்பெருமான் தன் பக்தர்களை காக்க, அவர் நடத்திய அற்புதங்களை  கூறவும்  படிக்கவும் பல பிறவிகள் எடுக்க வேண்டும். அதில் சிலவற்றை படித்தாவது முருகனின் அருளை பெறுவோம். “சுக்குக்கு மிஞ்சிய கஷாயம்  இல்லை  சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” வைகாசி மாதம், விசாகநட்சத்திரத்தில் முருகப்பெருமானையும், வானத்தில் நட்சத்திரமாக  திகழும் கார்த்திகை பெண்களையும் வணங்குவோம். நட்சத்திரங்களுக்கு மகிமை அதிகம். சந்திரன், சூரியனிடமிருந்து ஒளியினைப் பெற்று  பிரதிபலிக்கின்றது.

ஆனால் நட்சத்திரம், தன் சொந்த வெப்பத்தினாலேயே ஒளிர்கின்றது என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். நட்சத்திரத்திற்கு சக்தி அதிகம்  என்பதால்தான் கார்த்திகை பெண்களை வானில் நட்சத்திரமாக ஜொலிக்கும் அந்தஸ்தை தந்தனர் சிவ-சக்தி. முருகப்பெருமானை வணங்கும்போது  நட்சத்திரமாக திகழும் கார்த்திகை பெண்களையும் வணங்கினால், அவர்களின் அருளாசியும் கிடைக்கப்பெற்று நல்ல பலன் கிடைக்கும். முருகனை  வணங்குவோருக்கு முன்னேற்றம் நிச்சயம். கந்தனுக்கு அரோகரா  முருகனுக்கு அரோகரா  வேலனுக்கு அரோகரா! கலியுகத்தின் கண்ட தெய்வமாக  விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது “வேலை” வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும்.

  - ஸ்ரீசரண்

Related Stories: