பரவசம் தரும் பஞ்ச நரசிம்மர்கள்

*நலம் தரும் நரசிம்மர் 10

முருகனுக்குத் தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் இருப்பதுபோல, விநாயகருக்கு மகாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக் கோயில்கள் இருப்பதுபோல நரசிம்மருக்கும் ஆந்திர மாநிலத்தில் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள் தலங்கள் அமைந்துள்ளன. புராதனம் மிக்க கிருஷ்ணா நதிக்கரையில் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அந்தத் தலங்கள்: மங்களகிரி, வேதாத்ரி, மட்டப்பல்லி, வாடப்பல்லி மற்றும் கேதவரம்.

முதலில் மங்களகிரியை தரிசிப்போம்.  நரசிம்மர் கொலுவிருக்கும் இந்த மலையை பத்ரகிரி, பீமாத்ரி என்றெல்லாமும் அழைக்கிறார்கள். மலையடி வாரத்திலும் மலை உச்சியிலும் பல லட்சுமி நரசிம்மர் கோயில்கள் உள்ளன. மலை உச்சியில் அமைந்துள்ள கோயிலில் பெருமாள் பானக நரசிம்மராக எழுந்தருளியுள்ளார். விஜயவாடாவிலிருந்து18 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த மங்களகிரி. விக்கிரகம் எதுவும் இல்லாமல் 15 செ.மீ. அளவில் வாய்போன்ற அகண்ட துவாரம் மட்டும் தான். அதற்கு வெள்ளியில் நரசிம்மர் போல் கவசம் போட்டு வைத்திருக்கிறார்கள்.

நமுச்சி என்ற அசுரன் பிரம்மாவை வேண்டி, ஈரமான அல்லது காய்ந்த பொருட்களால் தனக்கு அழிவு ஏற்படக் கூடாது என்ற வரம் பெற்றான். இந்த பலத்தில் அவன் இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் பெருந்தொல்லை கொடுத்து வந்தான். எந்த ஆயுதத்தாலும் அவனை அழிக்க முடியவில்லை. இந்திரன் மகாவிஷ்ணுவை சரணடைந்து தங்களைக் காப்பாற்ற வேண்டினான். விஷ்ணு, கடுங்கோபத்துடன் தனது சக்ராயுதத்தை ஏவினார். அது கடலில் மூழ்கி நுரையில் புரண்டது. ஈரம் போலவும், காய்ந்தது போலவும் காட்சியளிக்கும் நுரை கொண்ட சக்கரம் வேகமாகப் பாய்ந்து வந்தது. இதையறிந்த நமுச்சி, பயந்து, ஒரு குகையில் போய் ஒளிந்தான்.

தன் உடம்பை சுருக்கிக் கொண்டு, தப்பிக்க எண்ணினான். ஆனால், சக்ராயுதம் மிகப்பெரும் வடிவெடுத்து குகைக்குள் காற்றே புகாதபடி தடுத்தது. நமுச்சி மூச்சுத் திணறி சாய்ந்தான். அப்போது தன் வடிவை சிறிதாக்கி உள்ளே நுழைந்து அவனது தலையை அறுத்தது சக்கரம். நமுச்சியை வதம் செய்த பிறகும் கூட, விஷ்ணுவின் உக்கிரம் தணியவில்லை. தேவர்கள் அவரைப் பணிவுடன் வணங்கி கோபம் தீர வேண்டினர்.

அவரும் அமிர்தம் பருகி சாந்தமானார். அதன்பிறகு, விஷ்ணு தனது உக்கிர சக்தியான நரசிம்ம வடிவத்தில் அந்த மலையில் அகன்ற வாயுடன் தங்கினார். துவாபரயுகத்தில் அவரைச் சாந்தப்படுத்த வாயில் நெய் ஊற்றினர். திரேதாயுகத்தில் பால் குடித்தார். கலியுகத்தில் வெல்லம், எலுமிச்சை சாறு கலந்த பானகம் குடித்து வருகிறார். நரசிம்மர் சிலை அகன்ற பித்தளை வாயுடன் காணப்படுகிறது. பெரிய சட்டிகளில் பானகம் தயாரிக்கிறார்கள். நான்கைந்து சட்டி பானகத்தை நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றுகிறார் அர்ச்சகர். அப்போது மடக் மடக் என மிடறல் சத்தம் கேட்கிறது! ஆனால், குறிப்பிட்ட பாதிஅளவு குடித்ததும் அந்த சத்தம் நின்று விடுகிறது. உடனேஊற்றுவதை நிறுத்திவிட்டு சட்டியில் இருக்கும் மீதி பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுகிறார்கள்.

வெல்லமும், பானக நீரும், தேங்காய் உடைத்த தண்ணீரும் கொட்டிக்கிடந்தாலும், நரசிம்மர் சந்நதியில் ஒரு ஈயையோ எறும்பையோ பார்க்க முடியாது என்பது பேரதிசயம்!மலைஅடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர் கோயில் முன் 153 அடி உயர கோபுரம் உள்ளது. 49 அடி அகலமுடைய இந்தக் கோபுரம் 11 நிலைகளைக் கொண்டது. இது தவிர மேற்கு, வடக்கு, தெற்கு திசை நோக்கியும் கோபுரங்கள் உள்ளன. வடக்கு கோபுரத்தை வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசலுக்காக திறக்கின்றனர்.

இங்குள்ள லட்சுமி நரசிம்மரை பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் பிரதிஷ்டை செய்தார். இந்த நரசிம்மருக்கு 108 சாளக்கிராம கற்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரமும் திருப்பதி பெருமாள் போல, நகைகளுடன் திவ்யமாக காட்சியளிக்கிறார் இந்த மூலவர். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் சமர்ப்பித்த தட்சிணவிருத்த சங்கு, மன்னருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நரசிம்மரிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாரத முனிவர் ஒரு அரசியின் சாபம் காரணமாக  பால் மரமாக இங்கே நிற்பதாக ஐதீகம். இந்த மரத்தை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.வேதாத்ரி வேதாத்ரி, வேதஸ்ச்ருங்கம், நிகமாத்ரி, வேதகிரி என்றெல்லாம் பெயர் கொண்ட இந்த மலைக் கோயிலின் நாயகன் யோகாநந்தப் பெருமாள். நான்மறைகளும் மலையாகி அவற்றால் போற்றப்படுபவனே இந்த பெருமாள். தாயார் ராஜ்யலட்சுமி. அருகில் உள்ள நதிக்குள் பெரிய சாளக்கிராம மூர்த்தியிருப்பதாக ஐதீகம்.

சோமாசுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்து நான்கு வேதங்களையும் திருடிக் கொண்டு கடலுக்கு அடியில் சென்று மறைந்தான். இதனால், படைக்கும் தொழிலைச் செய்ய முடியாமல் தவித்த பிரம்மா, ஸ்ரீமன்நாராயணனிடம் முறையிட்டார். பெருமாள் மச்சாவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று சோமாசுரனை அழித்து, வேதங்களை மீட்டு வந்தார். அவை மனித வடிவில் தோன்றி பெருமாளுக்கு நன்றி தெரிவித்தன.

தங்கள் இடத்தில், பெருமாளும் உடன் எழுந்தருள வேண்டும் என வேண்டுகோள் வைத்தன. ஆனால், தற்போது அவ்வாறு செய்ய இயலாது என்றும், நரசிம்ம அவதார காலத்தில் இரண்யனை அழித்த பிறகு, அங்கு வருவதாகவும் பெருமாள் உறுதியளித்தார். வேதங்கள் கிருஷ்ணவேணி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம மலையில் தங்கின. அவர்களைப் போலவே கிருஷ்ணவேணி தானும் பெருமாளை தரிசிக்க விரும்புவதாக தெரிவித்தாள். வேதங்களும், கிருஷ்ணவேணியும் சில யுகங்களாக தவமிருந்தன.

நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள், தான் ஏற்கெனவே உறுதியளித்தபடி இரண்யனை அழித்த பிறகு அங்கு வந்தார். வேதங்கள் தங்கிய இடமாதலால் “வேதாத்ரி’’ என்று பெயரிட்டு அங்கேயே தங்கினார். அவரது உக்ரம் தாங்க முடியாததாக இருந்தது. எனவே,அவரை “ஜ்வாலா நரசிம்மர்’ என்றனர். இதன் பிறகு, பிரம்மா சத்தியலோகத்தில் இருந்து வேதாத்ரிக்கு வந்தார். வேதங்களை தன்னுடன் அழைத்துச் செல்லும்போது, கிருஷ்ணவேணி நதியில் கிடைத்த நரசிம்மரின் சாளக்கிராமத்துடன் திரும்பினார். ஆனால், அந்தக் கல்லின் உக்ரத்தை தாளமுடியாமல், மீண்டும் கிருஷ்ணவேணி நதியிலேயே வைத்து விட்டார்.

பிற்காலத்தில், தசரதருக்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்த ரிஷ்யசிருங்க முனிவர் வேதாத்ரி வந்தார். அவர் அங்கிருந்த நரசிம்மரின் உக்ரத்தைத் தணிக்கும் வகையில், மகாலட்சுமி தாயாரைப் பிரதிஷ்டை செய்தார். இதனால், உக்ரநரசிம்மர் லட்சுமிநரசிம்மராக மாறினார். லட்சுமிநரசிம்மரைத் தரிசிக்க கருடாழ்வார் வைகுண்டத்தில் இருந்து வந்தார். அவர், தன்னுடன் நரசிம்மரின் ஒரு வடிவத்தை எடுத்துச் சென்று வேதாத்ரி அருகில் உள்ள ஒருமலையில் வைத்தார். அந்த மலை “கருடாத்ரி’ எனப்படுகிறது. இங்குள்ள நரசிம்மருக்கு “வீரநரசிம்மர்’’ என்பது திருநாமம். ஆக, வேதாத்ரியில் ஜ்வாலாநரசிம்மர், வீரநரசிம்மர், சாளக்கிராமநரசிம்மர், லட்சுமிநரசிம்மர், கருவறையில் யோகானந்த நரசிம்மர் என ஐந்து நரசிம்மர்கள் வீற்றருள்கின்றனர்.

இந்த நரசிம்மரை வழிபட்டால் கலியுகத்தில் நமக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்று வியாசமுனிவர் கூறியிருக்கிறார். 900 ஆண்டுகளுக்கு முன், ரெட்டி

மன்னர்கள் இந்தக் கோயிலை கட்டியுள்ளனர். புலவர் எர்ர பிரகதா, கவிஞர் சர்வ பவ்ம நாதா, வியாக்ய கார நாராயண தீர்த்தலு ஆகியோர் இந்த நரசிம்மர் குறித்து பாடியுள்ளனர். ஸ்தோத்திர தண்டகம், காசிக்காண்டம் ஆகிய நூல்களில் இந்த நரசிம்மர் பற்றி கூறப்பட்டிருக்கிறது.

வேதாத்ரி அடிவாரக்கோயிலில் இருந்து 285 படிகள் ஏறினால் சுயம்பு நரசிம்மர் புற்றுவடிவில் இருப்பதைக் காணலாம். இங்கு ஆஞ்சநேயருக்கும் சுதைச் சிற்பம் உள்ளது. திருமணம் ஆகாத பெண்கள் இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிறு கட்டுகின்றனர். நதியில் பாதுகாப்பாக நீராட படித்துறை வசதி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பெருமாள் நோய்கள் அனைத்தையும் போக்கடித்து பரிபூரண ஆரோக்யம் கொடுப்பவர். இவனது இடையில் ஒரு உடைவாள் உண்டு. அதை வைத்து பெருமாள் அறுவை சிகிச்சையும் செய்கிறார் என்று சொல்வார்கள். ‘பேஷஜம் பிஷக்’ என்கிறபடி மருந்தும் இவனே, மருத்துவனும் இவனே.  ‘பிரதமோதைவ்யோ பிஷக்’ என்று வேதம் இவனை முதல் மருத்துவனாகக் கொண்டாடுகிறது.

கேதவரம்

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள வாடபல்லியில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. 11ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கேதவர்மா என்ற மன்னரின் பெயரால் இவ்வூருக்கு இப்பெயர் வந்தது. இவரது பக்கத்து நாட்டை ஆட்சி செய்த யாதவ மன்னர் ஒருவரின் கனவில், நரசிம்மர் தோன்றி கேதவரம் மலையில் ஓரிடத்தில் தான் இருப்பதை உணர்த்தினார். இந்தத் தகவலை கேதவர்மாவுக்கு தெரிவித்தார் யாதவமன்னர். கேதவர்மா மலையில் ஏறி சுயம்புவடிவ நரசிம்ம வடிவம் இருப்பதை பார்த்தார். உடனடியாக அங்கு கோயில் கட்டினார். அங்கு போதிய இடம் இல்லாததால், அடிவாரத்தில் ஒரு கோயில் கட்டி விழாக்களை நடத்தினார். அடிவாரக்கோயிலில் லட்சுமியுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சந்நதியும் உள்ளது.

இந்த தலத்தில் ஸ்ரீகிருஷ்ணவேணி உத்திர வாஹினியாய் எம்பெருமானின் வடக்கு பக்கத்தில் ஓடுகிறாள். பெருமாளோ பர்வதத்தின் மேலேயும், நதிக்கரையிலுமாக இரு மூர்த்திகளாக வீற்றிருக்கிறான். இங்கு பெருமாள் கேதவரநாதனாக வணங்கப்படுகிறான்.

மட்டபல்லி

நல்கொண்டா மாவட்டத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. முற்காலத்தில் மிக அடர்த்தியான வனமாக இருந்தது; இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. வனத்திற்குள் கிருஷ்ணாநதி மிக அமைதியாகப் பரந்து விரிந்து பாய்ந்து கொண்டிருக்கிறது. பரத்வாஜ முனிவரும், அவரது சீடர்களும், பிற ரிஷிகளும் தங்கியிருந்து, ஒரு குகைக்குள் அருட்பாலித்த நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

அடர்ந்த காடாக இருந்ததால், நரசிம்மர் இருப்பதே யாருக்கும் தெரியாமல் போனது. கலியுகத்தில், அநியாயம் பெருகும்போது, மக்கள் தங்களை காத்துக் கொள்ள இந்த நரசிம்மர் வெளிப்படுவார் என ஆரூடம் கூறினார் பரத்வாஜர். அதன்படி, ஒருசமயம், தங்கெடா என்ற பகுதியை ஆண்ட அனுமலா மச்சிரெட்டி என்ற மன்னரின் கனவில் நரசிம்மர் தோன்றினார். ‘மன்னா! நான் உன் ஆட்சிக்குட்பட்ட மட்டபல்லியிலுள்ள குகையில் இருக்கிறேன். எனக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய்,’ என்று கூறி மறைந்தார்.

 மறுநாளே, மன்னர் அந்தக் குகையைகண்டுபிடிக்க உத்தரவிட்டார். பலவாறு தேடியும் குகை இருந்த இடம் தெரியவில்லை. மன்னரின் மனதில் கவலை ஏற்பட்டது. அவரும் சேர்ந்து தேடியதால் களைப்பு மேலிட அப்படியே உறங்கி விட்டார். அப்போதும், நரசிம்மர் கனவில் வந்தார். ‘மன்னா! என்னை நெருங்கி விட்டாய்.நீ தேடும் குகை ஒரு மரத்தின் பின்னே, செடிகொடிகளால் மூடப்பட்டு கிடக்கிறது,’ என்றார். மகிழ்ந்த மன்னர், உடனடியாகப் பணியைத் துவக்கவே, குகை தெரிந்தது.

அந்தக் குகைக்குள் நுழைந்து பார்த்தபோது, ஆதிசேஷன் குடை பிடிக்க, சங்கு சக்கரதாரியாக, கதாயுதம் தாங்கி, அமர்ந்த நிலையில் நரசிம்மர் சிலையைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார். அந்தச் சிலையை அதே குகையில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். தன் நாட்டு மக்கள் வழிபடும் வகையில் பாதையும் அமைத்துக் கொடுத்தார்.

இந்த நரசிம்மர் ஒரு அடி உயரத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளார்.

கருவறை குகை போன்ற அமைப்பில் உள்ளது. நுழைவு மேல்வாசலில், லட்சுமி நரசிம்மர் சுதைச்சிற்பமும், கஜலட்சுமியின் சிற்பமும் உள்ளன. கருவறையின் மேல்பகுதி பாறையால் ஆனது. எனவே, குனிந்தபடிதான் கருவறைக்குள் செல்ல முடியும். மூலவர் யோகானந்த நரசிம்மர், பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளார். அந்த சிற்பத்தின் மேலுள்ள பாறை, ஆதிசேஷனைப் போல உள்ளதால், பாம்பு குடைபிடிப்பது போலத் தெரிகிறது. பத்மாசனத்தில் அமர்ந்துள்ள நரசிம்மர் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். கீழ் இடதுகையை மூட்டுப்பகுதியில் வைத்துள்ளார். கீழ் வலதுகை மறைந்திருக்கிறது. இடதுபுறம் அலங்கரிக்கப்பட்ட மூன்று திருநாமங்களும், இரண்டு கண்களும் உள்ளன. இதை நரசிம்ம பக்தனான பிரகலாதனின் வடிவம் என்கின்றனர்.

நரசிம்மரின் திருவடியில் சக்ரி என்ற பக்தர் ஒரு அடி நீள செவ்வகப் பாறை வடிவில் உள்ளார். தனக்கு முக்தி கிடைக்க பெருமாளின் திருவடியை சரணடைந்தவர் இவர். எனவே, தான் வேறு, அந்த பக்தன் வேறல்ல என்பதை எடுத்துக்காட்ட பெருமாள் அவனை தன் காலடியில் பாறையாக வைத்துக் கொண்டார். இருவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

நரசிம்மருக்கு அருகில் ஒன்றரை அடி உயர லட்சுமி தாயார் தாமரை மலரில் அமர்ந்துள்ள சிற்பத்தை தரிசிக்கலாம். மற்றொரு லட்சுமி சிற்பமும் பாறையில் வடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சிற்பங்கள் தெளிவாக இல்லை. எனவே, 1975ல், உலோகத்தாலான ராஜ்யலட்சுமி தாயார் சிற்பம் வைக்கப்பட்டது. ராஜ்யம் ஆள்பவள் என்பதால் அவளது சிரசில் மகுடம் சூட்டப்பட்டுள்ளது.

சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் மற்றும் உற்சவர் சிலைகள் சுவாமியின் முன் உள்ளன. சுவாமியின் வலதுபுற பாறையில் 12க்கு பதிலாக 11 ஆழ்வார்களின் சிற்பங்கள் மட்டும் உள்ளன. இதில் ஏழு ஆழ்வார்கள் மேற்காகவும், நால்வர் கிழக்காகவும் உள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இருளில் மறைந்திருக்கலாம் எனச் சொல்கிறார்கள். கருவறை முன்புள்ள முக்தி மண்டபத்தில் 21 தூண்கள் உள்ளன. பொதுவாக நரசிம்மர் முன் கருடன் காட்சி அளிப்பார்.

இங்கு கருடனுடன் ஆஞ்சநேயரும் தனி சந்நதியில் இணைந்திருக்கிறார். அழகான ஊஞ்சல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. முக்தி மண்டபத்தின் இடப்பகுதியில் கோதாதேவி (ஆண்டாள்) சந்நதி, பிருகு, அத்திரி, கஷ்யபர், வைகானச ஆசார்யலு சந்நதிகள் உள்ளன.

வாடப்பல்லி

நல்கொண்டா மாவட்டத்தில்தான் இத்திருத்தலமும் அமைந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகத்திய முனிவர், சில விக்ரகங்களை அன்னபூர்ணா காலடியில் வைத்துவிட்டு மூன்று உலகங்களுக்கும் சென்றார். பூலோகம் வந்த அவர், கிருஷ்ணா மற்றும் மூசி நதிகள் இணையும் இடத்திற்கு வந்தார். அப்போது அசரீரி ஒலித்தது:

‘அகத்தியரே! இந்த நதிகள் சேருமிடத்தில் நரசிம்மரின் விக்ரகம் ஒன்று உள்ளது.

அதை இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்த பிறகு, உங்கள் பயணத்தைத் தொடருங்கள்,’ என்றது. அகத்தியர் சைவராயினும், இந்த இறைக்கட்டளையை ஏற்று, அந்த இடத்தில் நரசிம்மரை பிரதிஷ்டை செய்தார். இதையறிந்த வியாச மகரிஷி இங்கு வந்தார். நரசிம்மர் மிகவும் உக்ரமாக இருந்தார். ஆமாம், அவர் உஷ்ணமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தார்! இரண்யனை வதம் செய்த கையோடு, உக்ரம் தணியும் முன், அவர் இங்கு வந்திருக்கவேண்டும், அதனால் தான் பெருமூச்சு வெளிப்படுகிறது என்று ஊகித்தார் மகரிஷி.

நீண்டகாலத்துக்குப் பிறகு மன்னர்களுக்கு இந்த நரசிம்மரின் வரலாறு தெரிய வந்தது. அவர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இதன் பிறகு கோயில் சிதிலமடைந்து, சிலையும் புதைந்து போனது. நான்காம் நூற்றாண்டில் மீண்டும் இந்தக் கோயில் பற்றிய விவரம் வெளியே தெரிய வந்தது. ரெட்டி ராசுலு என்பவர் இப்பகுதியில் ஒரு நகரத்தை உருவாக்கினார்.

இதற்காக, ஆங்காங்கே குழிகள் தோண்டிய போது, உள்ளிருந்த விக்ரகம் வெளிப்பட்டது. கி.பி.1377ல், இங்கு அவர் ஒரு கோயிலைக் கட்டி, அதில் நரசிம்மரை பிரதிஷ்டை செய்தார். அப்போதும், நரசிம்மரிடமிருந்து உஷ்ண மூச்சுக் காற்று வெளிப்படுவதை அறிந்த அர்ச்சகர், இதைச் சோதிப்பதற்காக மூக்கின் அருகில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தார். தீபம் அலைந்தது!  அதேநேரம், அவரது பாதத்துக்கு அருகில் ஏற்றி வைத்த தீபம் நிலையாக எரிந்தது. இப்போதும், இந்த விளக்குகள் இவ்வாறு எரியும் அதிசயத்தைக் காணலாம்.

(தரிசனம் தொடரும்)

ந.பரணிகுமார்

Related Stories: