×

துன்பமில்லா வாழ்வருளும் துல்ஜா பவானி

துல்ஜாபூரில் அமைந்திருக்கும் துல்ஜா பவானி கோயில் 51 சக்தி பீடங்களில் உத்பலாபீடமாக போற்றப்படுகிறது. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில்.கடல் மட்டத்திலிருந்து 270 அடி உயரத்தில் சஹ்யாத்ரி மலையில் இந்த சக்திபீடம் அமைந்துள்ளது. ஆலயம் அமைந்துள்ள தெருவின் பெயரே பவானிதான்! கி.பி.1398ல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.90 கருங்கற் படிகளில் ஏறி கோயிலை அடைய வேண்டும்.ஷாஹாஜி வாயில், ராஜமாதா ஜிஜாவி வாயில் என்று இரண்டு முக்கிய நுழைவாயில்கள்.ஷாஹாஜி வாயிலில் நுழைந்தவுடன் படி இறங்கும் இடத்தில் வலதுபுறமாக கல்லோல தீர்த்தம். 40 அடி நீளம் 15 அடி அகலத்தில் ஒரு திருக்குளம். அதில் ஒரு கோமுகத்திலிருந்து சுத்தமான குளிர்ந்த நீர் 24 மணி நேரமும் பொழிகிறது. பல நதிகளிலிருந்து இந்தக் குளத்துக்குத் தண்ணீர் வருவதால், ஏகப்பட்ட பக்தர்கள் கூட்டத்தால் ஒரே இரைச்சல்! கல்லோலம் என்றால் இரைச்சல்! அதனால் இத்தீர்த்தம் கல்லோலம் என்றே அழைக்கப்படுகிறது. இதில் நீராடலாம்.தீர்த்தம் தெளித்துக் கொள்ளலாம். பாத்திரங்களில் நீரை எடுத்துக் கொள்ளலாம். சித்தி விநாயகர், ஆதிமாதா மாதங்கிதேவி, அன்னபூரணிதேவி ஆகியோருக்கு தனித்தனி சந்நதிகள். இவர்களை வணங்கி, பிறகு பவானி மாதாவின் தனிக்கோயிலை அடையலாம்.

நான்கு பக்கமும் அகலமான பிராகாரம். சந்நதிக்கு எதிரில் பெரிய ஹோம குண்டம். இரண்டு புறமும் பெரிய தீபத் தூண்கள்! பண்டிகை நாட்களில் இவை ஒளி வெள்ளத்தில் பிரகாசிக்குமாம். அப்சல்கானை வெற்றிகொண்ட சத்ரபதி சிவாஜி இவற்றை காணிக்கையாக்கியதாக தல புராணம் கூறுகிறது! சபா மண்டபம் கருங்கற்களால் கட்டப்பட்டது.பல தெய்வங்களின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு எதிரில் பவானி தேவியின் வாகனமான சிங்கம் வெள்ளைப் பளிங்கில் ஒரு பெரிய கன்றுக்குட்டி அளவில் கண்களில் சினம் பொங்க கம்பீரமாகக் காட்சி தருகிறது. கருவறையில் பவானி மாதா. கண்டகீ என்ற ஒருவகைக் கறுப்புக் கருங்கல்லால் வடிக்கப்பட்ட சிலை. டிசம்பரில் திருவிழா காலத்தில் பவானி தேவி ஒருவாரம் வெள்ளியாலான ஊஞ்சலில்  சயனக் கோலத்தில் இருக்கிறாள்! கறுப்பு நிற முகம். மூக்குத்திகள் இரண்டு புறமும் ஒளிவீசுகின்றன. வெள்ளிக் கண்கள்! நடுவில் குங்குமமும், இரண்டு புறங்களிலும் சந்தனமும் விளங்கும் கிரீடம்! கண்களில் கனிவு, கருணை.தேவியின் சயன நாட்களில் கருவறையில் நுழைய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

வெள்ளிப் பாதங்களை வெளியில் வைத்திருக்கிறார்கள், அவற்றை நமஸ்கரிக்கலாம்! இடதுபுறம் உள்ள சந்நதியில், சயன நாட்கள் தவிர, இங்குதான் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து அற்புதக் காட்சி அருள்கிறார். மூன்றடி உயர சிலை. தேவிக்கு வலதுபுறம் ஒரு வெள்ளி சிங்கம். இடது புறம் கர்த்தம மகரிஷியின் மனைவியான அனுபூதியின் உருவம். இவள் கருவுற்றிருந்தபோது, கர்த்தமர் இறைவனடி சேர்ந்தார். சூல் கொண்டிருந்ததால், அனுபூதி உடன் கட்டை ஏற முடியவில்லை.மகன் பிறந்தான். குழந்தையை வேறு ஒரு முனிவரிடம் ஒப்படைத்துவிட்டு, சீரிய தவத்தில் ஈடுபட்டாள்! தவ வலிமையால் முகப் பொலிவு பெற்ற அவளை மோகித்தான் குகுரம் என்ற அரக்கன்.அனுபூதி ஆதிசக்தியை வேண்டினாள்.எட்டு கரங்களுடன் சினத்துடன் தோன்றிய பவானிதேவி அவனுடன் போரிட்டாள்.ஆண் காட்டு எருமை உருவம் தரித்த குகுரனை வதைத்தாள்.அந்த இடம் தான் துல்ஜாபூர்.பவானி தேவியின் சந்நதியில் அனுபூதி இடம்பெற்றிருப்பதற்கான காரணம் இது என்கிறது ஸ்காந்த புராணம்.

வலது தோளுக்கு அருகில் சந்திரனும், இடது தோளுக்கு அருகில் சூரியனும் பொறிக்கப்பட்டுள்ளன. பவானிதேவியின் எட்டு திருக்கைகளில் விதவிதமான ஆயுதங்கள்.வலது கையிலுள்ள திரிசூலத்தை மகிஷாசுரனின் நெஞ்சில் குத்திய வண்ணம் காட்சி தருகிறாள்.வலது காலை அசுரனின் மேல் வைத்திருக்கிறாள். இடதுகால் தரையில் பதிந்திருக்கிறது! இரண்டு கால்களுக்கும் இடையே கொம்புடன் கூடிய எருமையின் தலை! தலையில் கிரீடம்! மூலவரான இந்த தேவியையும் வெளியில் எடுத்துச் செல்கிறார்கள். சைத்ர மாதம் சுக்லபட்ச அஷ்டமி நாளில், பவானியாகத் தோன்றினாள் அம்பிகை.அந்த நாளே, ‘பவானி ஜெயந்தி’ என விசேஷமாக கொண்டாப் படுகிறது.அந்த நாளில், பவானியை அர்ச்சித்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்; சோகம் அண்டாது; வாழ்க்கை ஆனந்தமாக அமையும்’ என்கிறது காசி காண்டம். சந்நதியை விட்டு வெளியில் வந்ததும், பவானி சங்கர் என்ற திருப்பெயருடன் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார் சிவ பெருமான்! வெள்ளிக் கவசமிட்ட முகரூபம் மட்டும் கொண்டு, பெரிய மீசை யுடன் அமர்ந்த நிலையில் சிவன்! காலடியில் ஒரு சிவலிங்கம்! இவருக்கும் ரிஷபத்துக்கும் பெரிய ருத்திராட்ச மாலை. இங்கு ஒரு அடி நீளமுள்ள ஒரு இரும்பு சங்கிலி!

இதைத் தொட்டு வணங்கி கழுத்தைச் சுற்றி வைத்துக்கொண்டு பக்தர்கள் பார்வதிபரமேஸ்வரரை வேண்டுகின்றனர். இதனால் செய்த கர்ம வினையும், பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை! வெளிச்சுற்றில் யமயா தேவர் என்ற யமன், லட்சுமி நரசிம்மர், சிந்தூர ஹனுமன், பெரிய கல் சூலங்கள், பல சிவலிங்கங்கள்...தேவியின் நித்யானுஷ்டங்களும் வித்தியாசமானவை. இரண்டு வேளை கல்லோல தீர்த்த அபிஷேகம். ரொட்டி, காய்கறிகள், பால் பாயச நைவேத்தியம்! துல்ஜா பவானியை தரிசிக்கும் பட்சத்திலேயே மனம் சாந்தமடைகிறது. அதற்கு அருகிலேயே பவானி உறங்குவதற்கான வெள்ளியாலான படுக்கை உள்ளது. அந்தப் படுக்கைக்கு எதிரில் மகாதேவரின் லிங்க வடிவம்  பவானியும், சங்கரரும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பல தூண்களில் ஒன்றில் வெள்ளி வளையம் உள்ளது.

நம் உடலில் எங்காவது வலி ஏற்பட்டிருந்தால் இந்த வெள்ளி வளையத்தை ஏழு நாட்கள் தொடர்ந்து தொட்டு வந்தால் அது சரியாகிவிடுமாம்! கோயிலில் பின்புறத்தில் இரண்டு பெரிய பந்து போன்ற வழுவழுப்பான கறுப்புக் கற்கள் உள்ளன. இவற்றை சிந்தாமணி கல் அல்லது  சகுன்வன்தி என்கிறார்கள். இரு கைகளையும் கல்லின்மேல் வைத்து தேவியை மனமுருக வேண்டிக்கொள்ள, கல் வலதுபுறம் நகர்ந்தால், நம் பிரச்னை தீரும் என்பதும் ஒரு நம்பிக்கை! போருக்குப் போகுமுன் இந்தக் கல்லைத் தொட்டு, சாதகமான பதில் கிடைத்த பின்னரே சத்ரபதி சிவாஜி போருக்குச் செல்வாராம்! ‘ராம வர தாயினி’ என்று பவானியை விளிக்கிறார் ராமதாசர். ராமச்சந்திரமூர்த்தி சீதையைத் தேடி கானகத்தில் அலையும் போது, தனது வலது சுண்டுவிரலால் தேவி இலங்கையை சுட்டிக்காட்டினாளாம். அதனாலேயே இந்தப் பெயர்.பாறைமேல் பவானி தேவியின் பாதங்களுடன் ஸ்ரீராமருக்கு ஒரு கோயில் உள்ளது. சென்னை மும்பை ரயில் பாதையில், ஷோலாப்பூர் ரயில் நிலையத்திலிருந்து 44 கி.மீ. தொலைவில் உள்ளது.

ந.பரணிகுமார்

Tags : Tulja Bhavani ,
× RELATED சுந்தர வேடம்