திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

திருவையாறு: திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஐயாறப்பர், அறம்வளர்த்த நயாகிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது. திருவையாறு  ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த 10ம் தேதி துவங்கியது. கடந்த 14ம் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடந்தது. 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோயிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. இதைதொடர்ந்து கோயில் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் சப்தஸ்தான பெருவிழாவையொட்டி ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு சென்றனர்.

இதைதொடர்ந்து திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று அன்றிரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமித்தது. பின்னர் தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடந்தது. நேற்று தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: