வராஹர் தலங்கள்

விருத்தாசலம் அருகே, ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் ஒரு முகமதிய பக்தரின் ராஜபிளவை நோயை பன்றியின் வடிவில் குத்தி அகற்றி, அவரைக் காப்பாற்றிய வராஹ மூர்த்தியை தரிசிக்கலாம்.

சென்னை-மகாபலிபுரம் அருகே திருவிடவெந்தையில் திருமகளை தன் இடது மடியில் அமர்த்தி அருளும் வராஹ மூர்த்தியைக் காணலாம். இவர் நித்யகல்யாணப் பெருமாள் என்று வணங்கப்படுகிறார்.தன்னால் தினமும் திருவிடவெந்தை வந்து வராஹ மூர்த்தியை தரிசிக்க முடியாமல் வருந்திய பல்லவ மன்னனுக்காக திருமகளை வலது மடியில் அமர்த்தி வராஹர் அருள் வழங்கும் திருவலவெந்தை தலம், மகாபலிபுரம் கலங்கரை விளக்கம் அருகே உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மிகவும் வரப்பிரசாதியாக, ஆதிவராஹர் கோயில் கொண்டருள்கிறார்.

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய கருவறை கோஷ்டத்தில் உள்ள கள்வர் பெருமான், ஆதி வராஹர் என்றே வணங்கப்படுகிறார். இந்த சந்நதி 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று!

திருமலை (திருப்பதி) ஸ்வாமி புஷ்கரணியில் வராஹமூர்த்தி விசேஷமாக வழிபடப்படுகிறார். ஸ்ரீனிவாசருக்கு இடம் தந்த மூர்த்தியாதலால் முதல் நிவேதனம் இந்த வராஹருக்கே செய்யப்படுகிறது.

செங்கல்பட்டை அடுத்த திருமலைவையாவூர் தலத்தில் அற்புத வடிவில் லட்சுமி வராஹ மூர்த்தி அருளாட்சி புரிகிறார்.

கேரளம், திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாப சுவாமி ஆலயத்திற்கு 1 கி.மீ. தொலைவில் லட்சுமியுடன் வராஹமூர்த்தி திருக்கோயில் கொண்டருள்கிறார்.

வடஇந்திய மதுரா நகரில் துவரகீஷ் ஆலயத்திற்கு அருகில் ஆதிவராஹ மூர்த்திக்குத் தனிக்கோயில் உள்ளது. செந்நிறத் தோற்றம் கொண்ட இவரை லால் வராஹர் என்கிறார்கள். இவருக்குச் சற்றுத் தொலைவில், வெண்ணிறத் தோற்றம் கொண்ட ஸ்வேதவராஹ மூர்த்தியும் ஆலயம் கொண்டுள்ளார்.

ஜெய்ப்பூர், கேந்த்ரபராவில், கர்டீசன்ஸ் தெருவின் வடக்கு முனையில் யக்ஞவராஹ மூர்த்தியின் ஆலயம் உள்ளது. இத்தலம் காடக்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. விஜயநகர பாணியில் அமைந்துள்ள ஆலயம் இது.

கேரளம், எர்ணாகுளம்கொடுங்கல்லூர் பாதையில், வரபுழா எனும் தலத்தில் 450 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் நரசிம்ம மூர்த்தியுடன் வராஹமூர்த்தியும் தரிசனம் தருகிறார்.

கேரளம் கொச்சினிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள சேரை எனும் தலத்தில் அழீக்கல் வராஹ மூர்த்தி திருவருள் புரிகிறார்.

புஷ்கரில் உள்ள பிரசித்தி பெற்ற பிரம்மன் ஆலயத்தில் வராஹமூர்த்தி தனி சந்நதியில் அருள்கிறார். 1727ம் ஆண்டு ராஜா சுவாமி ஜெய்சிங் எனும் ஜெய்ப்பூர் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியாம் இவர்.

விசாகப்பட்டினம், வால்டேரில் உள்ள சிம்மாசலத்தில் லட்சுமிநரசிம்மரும் வராஹ மூர்த்தியும் இணைந்து ஒரே உருவில் அருள்கிறார்கள். ஆண்டு முழுதும் சந்தனக் காப்பிலேயே அருளும் மூர்த்தி இவர்.

ஹரியானா, ஜின்ட் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சுயம்பு வராஹர் ஆலயம் உள்ளது. அதனாலேயே அந்த தலம், வராஹ கிராமம் என்றழைக்கப்படுகிறது.

மைசூர், மாண்ட்யா மாநிலத்தில் உள்ள கல்லஹள்ளி பூக்கனகரேவில் பூவராஹர் ஆலயம் உள்ளது.

கேரளம், இடுக்கி மாவட்டம் பன்னூர் தொடுபுழாவில் வராஹ மூர்த்திக்கென தனி ஆலயம் உள்ளது. அழகிய வடிவில் வராஹ மூர்த்தியை இங்கு தரிசிக்கலாம்.

மத்தியபிரதேசத்தில் உள்ள கஜுரோஹா ஆலயத்தில் வராஹமூர்த்திகளை தரிசிக்கலாம்.

ஒடிசா, கேந்த்ரபரா மாவட்டத்தில் உள்ள அவுல் எனும் ஊரில் லட்சுமி வராஹர் கோயில் கொண்டருள்கிறார்.

ராஜஸ்தான், ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மல் நகரத்தின் மையத்தில் வராஹ் ஷ்யாம் எனும் பெயரில் வராஹ மூர்த்தி அருள்கிறார்.

Related Stories: