களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

களக்காடு: களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். தென் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை, இரவு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

7ம் நாளான நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி வரதராஜபெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து கொடிமர மண்டபத்தில் வரதராஜபெருமாள் தேவியர்களுக்கு தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஊஞ்சல் வைபவமும் நடந்தது. இதையடுத்து தேவியர்களுக்கு திருத்தாலி அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் விமரிசையாக நடத்தப்பட்டது.

இதையொட்டி முன்னதாக பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சிகளை ரெங்கசமுத்திரம் வெங்கட்ராம பட்டாச்சாரியார், கோயில் அர்ச்சகர் கண்ணன் முன்னின்று நடத்தினர். பின்னர் வரதராஜபெருமாளும், தேவியர்களும் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினர். திருவிழாவில் 8ம் நாளான இன்று (17ம் தேதி) நாடார் சமுதாயத்தினர் சார்பில் மண்டகப்படி நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறும். விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் வரும் 19ம் தேதி நடக்கிறது.

Related Stories: