×

நவகிரக தோஷம் போக்கும் சிறப்பு தலங்கள்

சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியனால் உண்டான தோஷங்கள் விலகுகிறது.

கும்பகோணம் அருகேயுள்ள திருவையாற்றிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திங்களூர் தல சந்திர பகவானை வணங்கினால் சந்திரகிரக தோஷங்கள் நீங்குகிறது.

மதுரையிலிருந்து 19 கி.மீ . தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானையும் சித்திரரதவல்ல பெருமாளையும் வழிபட்டால் குரு கிரக தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் அருளும் த்ரிபங்க நிலையில் உள்ள துர்க்காம்பிகையை உளமாற வழிபட்டால் ராகு கிரக தோஷங்கள் நீங்கிவிடும்.

64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டிய மதுரை சொக்கநாதப் பெருமாளை தரிசித்தால் புத கிரக தோஷங்கள் விலகியோடிபொன்னான வாழ்வு கிட்டும்.

சென்னை மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நதி கொண்டிருக்கும் சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் பில்லி சூன்ய தோஷங்கள் விலகியோடுகின்றன.

ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்கினால் சுக்கிர கிரக தோஷங்கள் தொலைந்து மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.

காஞ்சிபுரத்தில் அருளும் சித்ரகுப்தரை மனமுருக வேண்டினால் கேது கிரக தோஷங்கள் மறையும்.

மயிலாடுதுறை அருகேயுள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள திருக்கொள்ளிக்காட்டில் அருளாட்சி புரியும் சனிபகவானை வணங்க சனி கிரக தோஷங்கள் சட்டென மறைந்தோடும்.

சென்னை அரக்கோணத்திற்கு அருகே தெற்கு நோக்கி தனிக்கோயில் கொண்டுள்ள வாராஹியை வணங்க, செவ்வாய் கிரக தோஷங்கள் தொலைந்தோடும்.

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள ஐயாவாடி பிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை தினத்தன்று செய்யப்படும் மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்துகொண்டால் மாந்தி, குளிகன் போன்றவர்களால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும்.

சென்னை தாம்பரம் அருகே படப்பை  காஞ்சிபுரம் சாலையில் உள்ள கண்டிகை கிராமத்தில் மாமேரு, மாதங்கி, வாராஹி, திதிநித்யா தேவிகள் யந்திர உருவில் அருள்கின்றனர். தொடர்ந்து  9 வாரங்கள் இவர்களை தரிசிக்க அனைத்து வித தோஷங்களும் நீங்குகின்றன.

கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையும், முல்லை வனநாதரும் கர்ப்பத் தடை தோஷங்களை நிவர்த்தி செய்கிறார்கள்.

சென்னை ரத்னமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர தரித்திர தோஷம் தொலைந்து வளமான வாழ்வு கிட்டுகிறது.

திண்டிவனத்திலிருந்து 8 கி.மீ .தொலைவிலுள்ள பெரமண்டூர் அணியாத அழகர் கோயிலில் அருளும் தர்மதேவிக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், 9 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விளக்கேற்ற, அத்தோஷங்கள் தொலைகின்றன.

ராமநாதபுரம், தேவிபட்டினத்தில் ராமரால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டு கடல்நடுவே அருளும் நவகிரகங்கள் சகல விதமான தோஷங்களையும் போக்கியருளும் சக்தி படைத்தவர்கள்.

நீத்தார் கடன் செய்ய மறந்தவர்கள் அல்லது தவறியவர்கள் காஞ்சிபுரம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளையும், திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாளையும் தரிசித்தால் அந்த தோஷங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும்.

ஈரோடு திருப்பாண்டிக் கொடுமுடியில் உள்ள கொடுமுடிநாதர் தலம் மும்மூர்த்தித் தலமாகவும் சகல தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு வன்னி மரத்தின் கீழ் அமர்ந்த நான்முகனுக்கு மூன்று முகங்கள் மட்டுமே உண்டு. வன்னிமரமே நான்காவது முகமாகக் கருதப்படுகிறது.

திருமங்கலக்குடியில் அருளும் மங்களாம்பிகை மாங்கல்ய தோஷங்களை நீக்குவதில் நிகரற்றவளாக பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

Tags : Nawakraka Dhamsham ,places ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்